Posts Tagged ‘புதிய தலைமுறை’

2009 – மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை

Posted in இதழியல் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:

1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும்  என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.

2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.

3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.

4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.

5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.

6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.

உள்ளடக்கமும் விலையும் – கடிதம்

Posted in இதழியல், கடிதங்கள் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

புதிய தலைமுறை வாங்கிப் படித்தேன். ஏமாற்றமே அடைந்தேன். தலைப்பைத் தவிர எதுவும் புதிதில்லை. அரைச்ச மாவே எங்கும். அது வியாபாரமானால் அதன் குறைந்த விலைக்காகத்தானே தவிர அதன் உள்ளடக்கத்திற்காக அல்ல. நொந்தசாமி படம் போல பல பத்திரிகைகளின் கதம்பம்தான் இது. இது என் ஆழ்ந்த கருத்தை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. அது – அனுபவம் (அதிக அனுபவம்) புதுமையை தர முடியாது என்பது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் பழுத்த அனுபவம் உள்ளவர்கள். அவர்களால் புதுமையை தர முடியாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தளைமுறை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதன் குறைந்த விலையாலும், வியாபாரத் தந்திரத்தினாலும்தான்.

இந்தியாவின் சாபமான பழுத்த அனுபவத் தேவை இதிலும் குறை சேர்க்கிறது.

Regards,
Kumar…

உள்ளடக்கமும் விலையும்

Posted in இதழியல், புதிய இதழ் on October 14th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

வீட்டில் நான் நான்கு தினசரிகள் வாங்குகிறேன். பல ஆண்டுகளாக ஹிந்து. தினத்தந்தியையும் தினமலரையும் ஆன்லைனில் படித்துவிட்டாலும் வீட்டுக்கு தினமணி வேண்டும் என்று அதை வாங்க ஆரம்பித்தேன். அது அப்பா வீட்டுப் பழக்கம். பிசினஸ் தினசரிகளில் என் தேர்வுகள் தி மிண்ட்டும் பிசினஸ்லைனும் பிசினஸ் ஸ்டேண்டர்டும். இகனாமிக் டைம்ஸை நான் நம்புவதில்லை. பிசினஸ்லைன் நான்கு ரூபாய் பேப்பரை 1.72 காசுக்கு ஆண்டு சந்தாவில் கொண்டு வந்தார்கள். உடனே அந்தச் சந்தாவை வாங்கினேன். பூனாவில் இருந்தவரை டைம்ஸை வாங்கி அதன் ருசி கண்டதால், சென்னையிலும் அதன் சந்தாவைக் கட்டினேன். ரூ.2 பேப்பரை 82 பைசாவுக்கு (ஆண்டு சந்தா ரூ.299) தருகிறார்கள். இப்போது தி மிண்ட்டும் சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. விரைவில் அதற்கும் சந்தா கட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனோ ஆரம்பத்தில் இருந்து எனக்கு டெக்கான் கிரானிக்களைப் பிடிக்கவில்லை.

தரத்தை நிலையாக வைத்துக்கொண்டு விலைகளுக்குள் நடக்கும் யுத்தம் இது. ஒவ்வொரு இதழும் தமக்கென ஒரு எழுதும் முறை, செய்திகளைத் தரும் முறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒவ்வொரு இதழும் சிறப்பைப் பெற்று உள்ளன. இதையெல்லாம் படிக்க வேண்டும் என்று நினைப்பவனுக்குத் தடையாக இருந்தது விலைதான். விலையும் இந்த யுத்தத்தில் சரிந்தபோது, வாங்குவது சுலபமானது.

ஒருவகையில் இந்த தினசரிகளின் உள்ளடக்கங்கள் அவ்வளவு கம்பெல்லிங்காக இருக்கின்றன. வாங்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவனவாக இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரை விலை ஒரு பிரச்னையாக இருந்தது. விலையில் ஏற்பட்டுள்ள போட்டி, வாசகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதே நிலை, ஆன்லைன் மார்க்கெட்டில் உள்ளதா என்று பார்த்தால், சந்தேகமே மிஞ்சுகிறது. இன்றைக்கு விகடன், குமுதம், நக்கீரன், துக்ளக் ஆகியவை சந்தா கட்டி படிக்கும் வலைதளங்களாக உள்ளன. அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்துதான் பெருமளவு ஆன்லைன் சந்தா வருகின்றன. தமிழர்கள் அதிக அளவு வசிக்கும் இந்த நாடுகளில் இருந்து சந்தா வருவதில் அதிசயமில்லை.

ஆனால், ஒருவரே பலவேறு இதழ்களுக்கும் சந்தா கட்டுகிறாரா என்று பார்த்தால், அது சந்தேகமே. ஆன்லைனில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இதழ்களுக்குத்தான் சந்தா கட்டுகிறார்கள். இத்தனைக்கும் அச்சிதழைவிட, வலையிதழ்களின் சந்தா தொகை மிகவும் குறைவு. ஆனாலும் ஆன்லைன் சந்தா பெரிய அளவில் வளரவில்லை.

இந்த நிலையில், மீடியா பெருந்தலையான ரூபர்ட் முர்டாக், ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பேசிவருகிறார். சமீபத்தில் சீனாவில் முர்டாக் பேசும்போது, தேடுபொறிகளான கூகுள் போன்றவை தன் செய்திகளைத் திருடி வியாபாரம் செய்கின்றன என்று ரொம்பவும் காட்டமாகப் பேசியிருக்கிறார். ஆன்லைன் உள்ளடக்கங்களில், பல்வேறு படிப்பு சார்ந்த, துறை சார்ந்த ஜர்னல்களுக்கு எல்லா நாடுகளில் இருந்தும் ஆய்வாளர்களும் தனிநபர்களும் ஆய்வு நிறுவனங்களும் நூலகங்களும் சந்தா கட்டி வருகின்றன. ஆனால், எண்டர்டெயின்மெண்ட் உள்ளடக்கம் என்று சொல்லப்படுகிற நியூஸ், சினிமா, புத்தகங்கள் ஆகிய உள்ளடக்கங்களுக்கு யார் பணம் கட்டிப் படிப்பார்கள் என்று தெரியவில்லை.

பல வெளிநாட்டு தினசரிகள், இந்தியாவில் இந்தியா டுடே இதழிலும் கூட, அச்சிதழுக்கு சந்தா கட்டினால், நீங்கள் வலையிதழையும் இலவசமாகப் படிக்கலாம் என்று சொல்லுகின்றன. ஒரு சில அச்சிதழ்கள், அதன் சந்தாவோடு கூடுதலாக சிறிய தொகை ஒன்றையும் பெற்றுக்கொண்டு, வலையிதழை வாசிக்கத் தருவதோடு, வலையிதழுக்கென்றே புதிய உள்ளடக்கங்களையும் சேர்த்து தருகின்றன. இதெல்லாம் சந்தையில் இருக்கும் பல்வேறு மாடல்கள்.

‘புதிய தலைமுறை’ இதழ் இப்போது தமிழ் பத்திரிகையுலகில் இன்னொரு சவாலை முன்வைத்திருக்கிறது. 68 பக்கங்கள், நல்ல உள்ளடக்கம், வழவழ தாள், முழு வண்ண அச்சு, விலையோ ரூ.5. கடைக்காரர்களிடம் பேசியபோது, ‘நல்லா விளம்பரம் செய்யறாங்க சார். அஞ்சு ரூபான்னவுடனே உடனே வாங்கிடறாங்க..’ என்றார்கள்.  இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு சவாலை, தினகரன் முன்வைத்தது. ரூ.1 விலை. அந்த விலை யுத்தத்தின் மூலம், இன்று தினகரனுக்கு கணிசமான ரெகுலர் வாசகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

வார இதழ்கள், பதினைந்து நாள் இதழ்கள், மாதாந்திர இதழ்கள் மத்தியில் இதுபோன்ற விலை யுத்தம் இல்லாமல் இருந்தது. ‘புதிய தலைமுறை’ அந்தச் சவாலை முன்வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நல்ல உள்ளடக்கம், நல்ல அச்சு, கைக்கு அடக்கமான விலை என்றால், நப்பாசை எழாமல் என்ன செய்யும்? சந்தா கட்டினால், இன்னும் விலை குறைவு. ரூ.3.84. (ஆண்டு சந்தா ரூ.200).

வழக்கம்போல் விமர்சனங்களும் கேட்கின்றன:

இந்தப் பத்திரிகை யாருக்குன்னே தெரியல. ஆடியன்ஸ் சரியா தெரியல.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வாரி உடறாங்கன்னு பார்ப்போம்.
கொள்ள கொள்ளயா சொத்து இருக்கு. வாரி உடறாங்க.
அவருக்கு இதுலேர்ந்து பணம் வரணும்னு அவசியமில்லை. பப்ளிசிட்டிக்கு ஒரு பத்திரிகை வேண்டும்.அதனால செய்யறாங்க.
அரசியல் கட்சி தொடங்க போறாங்க. அதுக்கு ஒரு மவுத்பீஸ் வேண்டாமா?

இதெல்லாம் சவாலை நேரடியாகச் சந்திக்காமல், வளைந்து தப்பிப்பதற்கான பதில்கள். மேலே சொன்னதெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், கண்ணெதிரே ரூ.5ல் ஒரு பத்திரிகை தொங்குகிறது. அது நிஜம். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இந்தப் பத்திரிகை வேறு சில நிஜங்களை முன்னே எடுத்து வைக்கின்றன. அதில்தான் என் கவனம் குவிந்திருக்கிறது.

1. இனிமேல் தொடங்கக் கூடிய புதிய இதழ்களின் விலை ரூ.5க்கு மேல் இருந்தால், அது மார்க்கெட்டில் அடி வாங்கும். ரூ.5 என்பது ஒரு பேஸ்லைன் ஆக ஆகிவிட்டது.

2. ஏற்கெனவே ஒரு இதழ் தொடங்குவது என்பது சாதாரணர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது. புதிய தலைமுறை செய்யும் மார்க்கெட் ஹைப், அதன் செலவு எல்லாம், மிகவும் பிரும்மாண்டமாக இருக்கிறது. பெரிய அளவில் மூலதனம் இருந்தால் மட்டுமே இனி சந்தையில் நிற்க முடியும், மக்கள் கவனத்தைக் கவர முடியும் என்ற நிலையை புதிய தலைமுறை உருவாக்கிவிட்டது.

இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் மெல்ல மெல்ல அமெரிக்கா மாதிரி முழுவதும் விளம்பர ஆதரவு பெற்ற, வாசகர்களின் கைகளில் இலவசமாகப் போகும் இதழ்களை நோக்கிப் போகிறோமோ என்று தோன்றுகிறது. ரூபர்ட் முர்டாக் இதற்கு நேர் எதிராகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். உள்ளடக்கத்துக்கு படிப்பவன் காசு கொடுக்கவேண்டும். இலவசம் கூடாது என்கிறார் அவர். என்னாகப் போகிறதோ? பார்ப்போம்.

மாற்றுப் பார்வையை முன்வைக்கும் ‘புதிய தலைமுறை’

Posted in எழுத்தாளர்கள், புதிய இதழ் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய வார இதழ் ‘புதிய தலைமுறை’ செப்டம்பர் 2009ல் இருந்து வெளிவரப் போகிறது. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் மாதிரி இதழ், எனக்கு இரண்டு படிகள் நேற்று வந்து சேர்ந்தன. கவரைப் பிரித்துப் பார்த்தவுடன், முதல் பார்வையில் இந்த இதழ் ஆங்கில டைம் இதழின் தோற்றத்தையே தந்தது. கண்களில் அடிக்காத வண்ணம், அதிக பக்கங்கள் இல்லாமல் சிக்கென இருந்தது.

வழக்கம்போல், புதிய பேப்பரின் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். தலைப்புகளை மட்டும் படித்துக்கொண்டே முழு இதழையும் புரட்டிப் பார்த்தேன். லே அவுட், கலர் சென்ஸ் எல்லாம் புரொபஷ்னலாக இருந்தது. திடீரென்று பல்லை இளிக்கும் வெளிர்மஞ்சள் இல்லை. காடியான பச்சை எங்கும் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரை ஓப்பனிங் பக்க டிசைன்கள் அழகாக இல்லை. கணினியில் எழுத ‘எல்லாமே ஓசி’ கட்டுரை மட்டும் கொஞ்சம் அசிரத்தையான லே அவுட்.

இதைப் புரட்டிக்கொண்டு இருக்கும்போதே, மனத்தில், எந்த இதழோடு இதைப் பொருத்திப் பார்ப்பது? ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற கேள்விகள் தோன்றின. இதற்கு முன்னர் இளைஞர் இதழ் என்று தமிழில் ஏதேனும் இருந்ததுண்டா? இளைஞர் இதழ் என்று இந்த இதழ் வெளிப்படையாக எங்கும் பிரகடணப்படுத்திக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் உள்ள இளைஞர் இதழ்களோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?

எதனோடு பொருத்திப் பார்ப்பது என்பதைவிட, எதனோடெல்லாம் இதைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எண்ணமும் கூடவே வந்தது. இந்த இதழை சிறுபத்திரிகைகளோடு ஒப்பிடக் கூடாது. அதேபோல், இதை வெகுஜன இதழ்களோடும் ஒப்பிடக் கூடாது (விளம்பர ஏஜென்சிகள் இதனை வெகுஜன இதழ்களோடுதான் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பது வேறு கதை). இது முற்றிலும் வேறொரு ஃபார்மெட்டில் இருக்கிறது.

நாற்பத்தெட்டு பக்கங்களில், ஒரு சிறுகதை, சாதிக்கும் இளம்பெண்கள் பற்றிய கட்டுரை, உமா சக்தியின் கவிதை, சர்க்கரை நோய் பற்றிய கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற) வடிவ கட்டிரை, சினிமா விமர்சனம், சினிமா துறையில் கிராமத்து இளைஞர்கள் செய்துள்ள சாதனைகள் பற்றி கட்டுரை, சீமானோடு ஒரு நேர்காணல், எஞ்சினியரிங் கவுன்சிலிங் பற்றி ஒரு கட்டுரை, பைக் வாங்குவது பற்றி ஒரு கட்டுரை, ஒரு சிற்றுலா கட்டுரை, கே.ஆர். மணி மொழிபெயர்த்த ‘எங்கே போனது என் அல்வா துண்டு?’ புத்தகத்தின் அறிமுகம், ஒன்றிரண்டு பொதுக் கட்டுரைகள் ஆகியவை இருக்கின்றன.

இளைஞர்கள் என்றாலே ஆழமாகப் படிக்க மாட்டார்கள், கொறிப்பார்கள், அவர்களுடைய அட்டென்ஷன் ஸ்பான் குறுகியது ஆகிய வெகுஜன பத்திரிகையின் எண்ணங்கள் இந்த இதழின் தயாரிப்பில் குறுக்கிடவே இல்லை என்பது நன்கு தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மூன்று நான்கு பக்கங்களுக்கு நீளுகின்றன. அதேபோல், அவர்கள் கவர்ச்சியையும் சென்சேஷனையும் தேடி ஓடுகிறார்கள் என்ற பொருத்தமற்ற எண்ணமும் இவ்விதழில் குறுக்கிடவில்லை. இளம்பெண்களை எங்குமே கவர்ச்சி வஸ்துவாக இவ்விதழ் காட்டவில்லை.

கட்டுரைகளையும் பேட்டியையும் கதையையும் படித்து முடித்தேன். முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. எழுத்து முழுவதிலும் ஒரு கண்ணியம் இருக்கிறது. நிதானம் இருக்கிறது. அமரிக்கை இருக்கிறது. சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. எல்லா கட்டுரைகளும் புரியும்படி இருக்கிறது. வார்த்தை ஜோடனைகளோ, Highbrow மனப்பான்மையோ இல்லை. பம்மாத்து இல்லை. தனிமனித துதி இல்லை. என் மனத்துக்கு நிறைவாக இருந்தது.

இதுவரை இவ்விதழில் இருந்ததைச் சொல்லிவிட்டேன். என்ன இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

தலையங்கம் வேண்டும். இளைஞர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக தலையங்கம் இருக்கவேண்டும். தலையங்கம் தான் பத்திரிகையின் குரல். இந்த இதழில் அந்தக் குரல் கேட்கவேண்டியது மிக அவசியம். வெகுஜன ஊடகங்கள் திரும்பத் திரும்ப இளைஞர்களின் குரல் என்று ஒரு மாய பிம்பத்தைச் சமைத்துக்கொண்டு இருக்க, நிச்சயம் அது மட்டுமே எங்கள் குரல் அல்ல, எங்களுக்கு வேறு குரல்களும் குறிக்கோள்களும் உண்டு என்று இந்தத் தலையங்கம் எடுத்துச் சொல்வது அவசியம்.

மற்றொன்று, ஸ்டைல். நான் எழுத்துப் பாணி, நடைகளின் தனிக்காதலன். இந்த இதழில் யாருக்கும் தனி நடை இருப்பதாக தெரியவில்லை. வித்தியாசமான எழுத்து நடை, வட்டார வழக்குகள், சொல்லும் முறை ஆகியவற்றுக்கு இந்த இதழ் இடம்கொடுக்க வேண்டும். இதழ் மொத்தமும் ஒரே குரலும் நடையும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காட்சி ஊடகம் எப்படி கட்டிப் போடுகிறதோ அதேபோல் எழுத்து ஊடகமும் கட்டிப் போட வேண்டும். வெரைட்டி இருந்தால்தான் அது சாத்தியம்.

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் வேண்டும். தகவல் கட்டுரைகளாக, அலசல்களாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக அரசியல் இருக்க வேண்டும். அழுத்தந்திருந்தமான கருத்துகள் சொல்லப்பட வேண்டும்.

இணையமும் கணினியும் செல்போனோனும் சார்ந்திருக்கும் இளைஞர் சமூகத்தைவிட, அது இல்லாமல், இன்னும் சிறு நகரங்களிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் இருக்கும் இளைஞர்கள் அதிகம். அவர்கள் இன்னும் அச்சடித்த எழுத்தை நம்புகிறார்கள். அதில் தங்கள் பெயர் பத்து பாயிண்ட் போல்டில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கான கனவுகளும் எதார்த்தங்களும் வேறு. புதிய தலைமுறை, அந்த வாசகர்களையும் மனத்தில் கொண்டு படைக்கப்படுவது சரியாக இருக்கும்.

இந்தப் பத்திரிகைக்கு விலை குறிப்பிடப்படவில்லை (இது மாதிரி இதழ்). விலை ரூ. 10, ரூ.15 வைக்கப்படலாம். இந்த விலைக்கு 48 பக்கங்கள் மிகவும் குறைவு என்ற எண்ணம் வராமல் இல்லை. 80 பக்கங்களேனும் இருப்பது சரியாக இருக்கும்.

ஒரு வகையில், சினிமா தொலைக்காட்சி பத்திரிகைகள் என்று வெகுஜன கலாசாரத்தில் இளைஞர்கள் பற்றி படிந்துபோயுள்ள வழக்கமான கொச்சை பிம்பங்களுக்கு மாற்றாக இந்த இதழ் இருக்க முயற்சித்திருக்கிறது. அதனாலேயே பல இளைஞர்களுக்கு இவ்விதழோடு ஒன்றிப் போக முடியும். என்னால் முடிகிறது. இதுதான் இவ்விதழில் வெற்றியாக இருக்க முடியும்.

பி.கு 1: என் மனைவி இவ்விதழை படித்து முடித்துவிட்டார். அவர் கமெண்ட்: ‘வடக்கு வாசல், ரசனை, உயிர்மை எல்லாம் வருதே.. அது மாதிரி இருக்கு இது.’
பி.கு.2: எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன.