Posts Tagged ‘நேசமுடன்’

நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ

Posted in நேசமுடன் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

புத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.

அடிப்படையில் எழுத்து, என் மகிழ்ச்சிக்காக. நான் ரசிக்கவில்லை என்றால், இதை எழுதுவதே வேஸ்ட். என் ரசனை, என் எழுத்தைப் படிக்கும் பலரது ரசனைக்கும் ஏற்புடையதாக இருந்தால், இன்னும் மகிழ்ச்சி. ஏதோ ஒரு முனையில் ரசனைகள் ஒன்று சேரும். ஒரு சில விஷயங்களில், அனுபவங்களில் ரசனைகள் ஒன்று குவியும். அதுதான் எழுத்தாளனும் வாசகனும் சந்தித்துக்கொள்ளும் இடம்.

நேசமுடன் மடல் இதழ் பற்றி சென்ற 21 இதழ்களில் பலவித விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

1. இந்த மடல் இதழ் என்ற கருத்தே அபத்தம், அல்லது இது ஒரு பிரிமிட்டிவ் மாடல். இதன் பிறகு வலைப்பதிவுகள் என்ற அடுத்த தொழில்நுட்ப சாத்தியம் வந்தபிறகு இதைப் பிடித்துக்கொண்டு தொங்குவது அபத்தம்.
2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.
3. கருத்துகளில், ஆழம் இல்லை. மேம்போக்கான பத்திரிகை எழுத்து இது.
4. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் நீளமாக இருக்கிறது. இன்னும் நறுக்கென்று எழுதலாம்.
5. நிறைய ஆங்கிலச் சொற்களைப் பெய்து எழுதுகிறேன்.

பலருக்கு என்னை எந்தச் சிமிழில் வைத்துப் பொருத்திப் புரிந்துகொள்வது என்ற சிரமம் இருக்கிறது. வழக்கமான வெகுஜன இதழாளன் / எழுத்தாளன் என்று சொல்லிவிடுவது மிகவும் சுலபம். அதே சமயம், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் இந்தாள் பேசித்தொலைக்கிறான். இவனை ஒரு சிறுபத்திரிகை வட்டத்தைச் சேர்ந்தவன் என்று புரிந்துகொள்வதும், சீரியஸ்ஸான எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வதும் சரியாயில்லை.

என் மரபை, என் வழியை, என் இடத்தை, என் முதல் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் எடுத்து எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தில் ஒரு மிடில் பாத் உண்டு. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜு, கந்தர்வன் ஆகிய எழுத்தாளர்கள் தம் எழுத்தின் வலிமையை என்றும், எங்கேயும்  குறைத்துக்கொண்டதில்லை. இவர்கள் வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பிரிவினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இவர்கள் அனைவரும் வெகுஜன இதழ்களிலேயே தம் பெரும்பாலான படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். நல்ல எழுத்தை, பரந்த வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னிருக்கும் மரபுத் தொடர்ச்சி.

வழக்கம்போல் எழுத்து தரக்கூடிய கொடைகளில் ஒன்று, புதிய நண்பர்கள். நிறைய நண்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் தொடர்பைத் தொடர்ந்து பேணுவது என் கடமை. திண்ணை இதழும் இட்லிவடை வலைப்பதிவும் நேசமுடன் இதழ் எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அம்ருதா என் இரண்டு கட்டுரைகள் மறுபதிப்பு செய்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி நடந்த டிசம்பர் 2009 இதழில் இக்கட்டுரைகள் வெளிவந்தது மிகவும் பொருத்தம். அதேபோல்,

இன்னும் வசவுகள் வாங்க ஆரம்பிக்கவில்லை. நான் எழுதும் செய்திகள், வசவுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லையோ என்னவோ?! இப்படி இருக்கவே ப்ரியம். பார்ப்போம்.

ஒரு விஷயத்த்தில் இன்னும் தொடர்ந்து தப்பு செய்துகொண்டு இருக்கிறேன். நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் போடுவதில்லை. சோம்பேறித்தனம் காரணம். இனி அதை மாற்றிக்கொள்ள எண்ணம்.

2010 – செய்ய நினைக்கும் விஷயங்கள்

Posted in பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.

1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.

2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.

3. மாதம்  ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.

4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.

5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.

6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.

எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2009 – மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்

Posted in அனுபவம், பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:

1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.

2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.

4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.

5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.

6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.

7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!

8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.

9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.

உள்ளடக்கமும் விலையும் – கடிதம்

Posted in இதழியல், கடிதங்கள் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

புதிய தலைமுறை வாங்கிப் படித்தேன். ஏமாற்றமே அடைந்தேன். தலைப்பைத் தவிர எதுவும் புதிதில்லை. அரைச்ச மாவே எங்கும். அது வியாபாரமானால் அதன் குறைந்த விலைக்காகத்தானே தவிர அதன் உள்ளடக்கத்திற்காக அல்ல. நொந்தசாமி படம் போல பல பத்திரிகைகளின் கதம்பம்தான் இது. இது என் ஆழ்ந்த கருத்தை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. அது – அனுபவம் (அதிக அனுபவம்) புதுமையை தர முடியாது என்பது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் பழுத்த அனுபவம் உள்ளவர்கள். அவர்களால் புதுமையை தர முடியாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தளைமுறை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதன் குறைந்த விலையாலும், வியாபாரத் தந்திரத்தினாலும்தான்.

இந்தியாவின் சாபமான பழுத்த அனுபவத் தேவை இதிலும் குறை சேர்க்கிறது.

Regards,
Kumar…