Posts Tagged ‘சந்தியா பதிப்பகம்’

2009ல் வெளியான நாவல்கள்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.

மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.

2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.

ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.

மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.

1. காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா பதிப்பகம் – ரூ.40
2. கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம் – ரூ.50
3. குவியம் – ஜெயந்தி சங்கர் – ரூ.100
4. மலையகமல்லன் – தி.குழந்தைவேலு – காவ்யா – ரூ.80
5. என் உயிரே விட்டுக்கொடு – முத்தாலங்குறிச்சி காமராசு – காவ்யா – ரூ.90
6. அனல் காற்று – ஜெயமோகன் – தமிழினி – ரூ.90
7. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – ரூ.230
8. நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி – ரூ. 220
9. தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி – ரூ.75
10. நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 120
11. மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 90
12. கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை பதிப்பகம் – ரூ.50
13. மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
15. வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.

இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.

மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.

என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.

குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.

கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம், எண்.57 – 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50