Posts Tagged ‘சதாசிவம்’

அது ஒரு பொற்காலம்

Posted in எழுத்தாளர்கள், புத்தகங்கள் on December 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

கல்கி ராஜேந்திரன், கல்கி இதழில் எழுபது முதல் ஏழு வரை என்று எழுதிய தொடரை, அது ஒரு பொற்காலம் என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். கல்கி ராஜேந்திரன் நான் மதிக்கும் மிகவும் முக்கியமான இதழ் ஆசிரியர். எழுத்தாளர் கல்கி, சதாசிவம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர் ராஜேந்திரன். ஒரு இதழை, எந்த விதமான அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், சமரசங்களுக்கும் ஆட்படாமல், நடுநிலையோடு நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர். அதேசமயம், இளைஞர்களை எழுத வைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் மிக முக்கியம். நான் அவரைச் சந்தித்தது, தொடர்ந்து என்னை அவர் எழுத ஊக்கமளித்தது தனிச் செய்திகள்.

இந்தப் புத்தகம், அவருடைய அனுபவங்களை – முக்கியமாக கல்கி, ராஜாஜி, டி.கே.சி., எம்.எஸ்., சதாசிவம் ஆகியோரோடு ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார். மேலும் அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களான நா.பா., அகிலன், பகீரதன், சோமாஸ்கந்தன் ஆகியோரோடு பழகிய அனுபவங்களையும் எழுதியுள்ளார். இந்த நூலில், பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன:

இதை ராஜேந்திரன் மட்டும் எழுதவில்லை. வெளியே ஆசிரியர் ‘கல்கி ராஜேந்திரன்’ என்று மட்டும் போட்டிருப்பது சரியாகாது. இதில், அவரது மனைவி, விஜயா ராஜேந்திரனின் பங்களிப்பு மிக அதிகம். பல அத்தியாயங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் செய்திகளாகவே பல அனுபவங்களை, ரசனைகளை ராஜேந்திரன் எழுதியுள்ளார்.

கல்கியின் மேதமை, ராஜாஜியின் புத்திசாலித்தனம், டி.கே.சியின் நுணுக்கமான ரசனை என்று பல செய்திகளை அனுபவங்கள் மூலமாக ஆசிரியர் எழுதிச் செல்கிறார். அத்தோடு, இன்றைய காலகட்ட அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்வது பொருத்தமாக இருக்கிறது.

ஒரு எழுத்தாளராக பலரும் போற்றும் கல்கி, ஒரு அப்பாவாக எப்படி இருந்தார் என்பதில்தான் என் ஆர்வம் முழுவதும். கல்கி எப்படியெல்லாம் ராஜேந்திரனை பண்படுத்தினார் என்பது நூல் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு சம்பவம், மிகவும் நெகிழ்ச்சியானது. அதை அப்படியே தருவது பொருத்தமாக இருக்கும்:

‘கல்கி’ எப்படி எழுதினார் என்பதை விட என்ன எழுதினார் என்பதுதான் முக்கியம். என்றாலும் எப்படி எழுதினார், எவ்வாறு சிந்தித்தார் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! அவரிடம் இருந்த குறை நிறைகள் இரண்டேதான். ஒன்று, வேலைச் சுமைகள் மிக அதிகம்; இரண்டு, அவற்றைச் செய்வதற்கான உடல் ஆரோக்கியம் மிகக் குறைவு! இதனால் ஓர் அந்தரங்கப் பணியாளன் போல நான் அவருக்குச் செய்லபட நேர்ந்தது. ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டதால் அவர் அடிக்கடி இருமி உமிழ்வார். அந்த எச்சில் கிண்ணத்தை அவ்வப்போது சுத்திகரித்து வைப்பது தொடங்கி, ஆயுர்வேத வைத்தியர் சங்குண்ணி மேனன் கொடுத்த தைலத்தை அவர் உடலில் தடவிக் குளிப்பாட்டுவது வரை அவருக்காக பல்வேறு காரியங்களைச் செய்திருக்கிறேன். அவர் வெளியூர் சென்றால் பெட்டியில் துணி மணிகள் அடுக்குவது, படுக்கை கட்டுவது முதல் ஹிந்து நாளிதழி!
ல் à
��வர் கேட்கிற செய்தியைத் தேடி எடுத்துத் தருவது வரை பலவிதங்களில் உதவியிருக்கிறேன். குன்றாத அன்புடனும் ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடனும் இவற்றைச் செய்வேன். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஃபார்ம் படித்துக்கொண்டிருந்த சமயம் அவருக்கு ஒரு நாள் நான் கால்மிதித்துக் கொண்டிருந்தேன். எனது குதிக்காலால் இலேசாக மிதித்து அந்த இதத்தில் அவரைக் கண்ணுறங்க வைப்பது எனக்கிருந்த பணிகளில் ஒன்று.

“ஏண்டா, என்னையே கவனிச்சிண்டிருந்தா உன் படிப்பு என்ன ஆகிறது?” என்று மனவேதனை எட்டிப் பார்க்கக் கவலையுடன் கேட்டார்.

“கவலைப்படாதீங்கோ! பிரமாத மார்க் வாங்காவிட்டாலும் பி.ஃபார்ம் டிகிரி வாங்கிவிடுவேன், நிச்சயம்” என்று ஆறுதலாக உறுதி அளித்தேன். ஆனால், என் துரதிருஷ்டம், நான் பட்டம் பெறுவதைக் காண அவர் உயிருடன் இல்லை!

எம்.எஸ். என்ற இசை தேவதை பற்றி எவ்வளவு படித்தாலும் என் ஆர்வம் அடங்குவதில்லை. வாழ்க்கை முழுவதும் இசையால் நிரம்பி, இசைபட வாழ்ந்தவர். இந்த நூலில், விஜயா ராஜேந்திரன், எம்.எஸ். பற்றி சொல்லிக்கொண்டே போகும் அனுபவங்கள், உணர்வு நெகிழ்ச்சிகள் கணக்கிலடங்காதவை. எம்.எஸ். மறைவுக்குப் பின், விஜயா ராஜேந்திரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கிளிஷேவானாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். படிக்கும்போதே, என் கண்களில் நீர் திரையிடத் தொங்கிவிட்டது.

எம்.எஸ் பற்றிய சித்திரம் இவ்வளவு துல்லியமாக எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை. சதாசிவம் பற்றி கிடைக்கும் சித்திரமும் மிக நேர்த்தியானது. பல அத்தியாயங்களில் சதாசிவம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆளுமையை ராஜேந்திரன் மிக கவனமுடன் எடுத்து எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.

அது ஒரு பொற்காலம், கல்கி ராஜேந்திரன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை – ரூ.100