Posts Tagged ‘குணங்கள்’

அந்தரங்கம் புனிதமானது

Posted in சமூகம், பொது on November 5th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் சென்ற வாரம், தோழி ஒருத்தியை மீண்டும் சந்தித்தேன். பல ஆண்டுகள் கழித்து சந்தித்ததாலேயே, பேச நிறைய செய்திகள் இருந்தன. என் குடும்பம், அவரது குடும்பம் என்று கேள்விகளும் பதில்களும் தொடர்ந்துகொண்டு இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் பேச்சு சுவாரசியத்தில், ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்டுவிட்டேன். கேட்ட பின்னர், நாக்கை கடித்துக்கொண்டேன். கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ‘A personal question’ என்ற தோழி, பதில் சொல்லாமல் நிறுத்தினார். என் தவறு புரிந்தது.

பொதுவாக யாரிடம் பேசினாலும் பொதுவான செய்திகளையே நான் பேசுவேன். தனிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்கத் தயங்குவேன். என்னதான் நான் பத்திரிகையாளனாக வளர்ந்திருந்தாலும், தனிப்பட்ட கேள்விகள் மிகவும் இன்சென்சிட்டிவ்வானவை. வாழ்க்கையில் பலருக்கும் பல சிக்கல்கள். சொல்ல முடியாத சிக்கல்கள். அதனைத் தீர்க்கத் தெரியாமல், அல்லது முடியாமல் பலர் தவிக்கிறார்கள். சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்தச் சிக்கல்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதை பலர் விரும்புவதில்லை. விரும்புவதில்லை என்பதைவிட, அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். அதை மறந்துவிடவே முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இடம் பொருள் ஏவல் தெரியாமல், சட்டென அது சம்பந்தமான ஒரு கேள்வி எழும்போது, எரிச்சலே மிஞ்சுகிறது.

இன்றைக்கு, பலர் தங்களுக்குள் பல வட்டங்களைப் போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சமூகத்துக்கு என்று ஒரு வட்டம், நண்பர்களுக்கு என்று ஒரு வட்டம், உறவினர்களுக்கு என்று ஒரு வட்டம் (இதற்குள்ளேயே துணை வட்டங்கள் உண்டு). இதில் எந்தச் செய்தியை யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்ற தெளிவான அல்லது தெளிவற்ற பிரிவினைகள் உண்டு. என்னதான் ஒருவரை உங்களுக்குப் பல ஆண்டுகள் தெரிந்திருந்தாலும், அவர் உங்களிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.

அடிமனத்தில் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் பற்றி ஒரு கணக்கு, அளவீடு இருக்கிறது. அதை ஒட்டியே தன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தைரியம் ஏற்படுகிறது. இன்றைய நவீன கால வாழ்க்கையில், மனத்தளவில் நெருக்கம் இருந்தாலும், எல்லா செய்திகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நியதி எதுவுமில்லை.

பலருக்கும் பல செய்திகள் தனிப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. தென்றல் இதழின் பதிப்பாளர் சி.கே.வெங்கட்ராமனிடம் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தேன். பத்திரிகைத் தொழில் பற்றிய பேச்சில், அவர் நிறைய செய்திகளைச் சொல்லி வந்தார். சொல்லி முடித்தபிறகு, ‘இதையெல்லாம் நீங்கள் ஒரு அமெரிக்கனிடம் கேட்க முடியாது. இதெல்லாம் அவனைப் பொறுத்தவரை மிகப் பெரிய சொத்து. அவ்வளவு சீக்கிரத்தில், அவ்வளவு சுலபமாக அவன் உங்களிடம் இதெல்லாவற்றையும் சொல்ல மாட்டான். அமெரிக்கனிடம் போய் உன் நிறுவனத்தின் லாபம் என்ன என்று கேட்பது முடியவே முடியாது’ என்றார் அவர்.

வேலை இன்னொரு செண்டிசிட்டி விஷயம். வேலை என்பது ஒருவனுடைய பொருளாதார வளத்தையும் அதிகார உயரத்தையும் காட்டுவதாக, நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். விளைவு, பல வேலைகள் இந்த சட்டகங்களுக்கு அடைபடுவதில்லை. இன்றைக்கு வேலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை என்பது பழைய காலம். அதன் பிறகு, ஐடிக்காரர்களின் நடுராத்திரி வேலைகளும் இயல்பாகிப் போயின. இன்று பல தனிநபர்கள் சுயமான கண்சல்ட்டண்ட்டுகளாக இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனத்தோடும் இணையாமல், தம் திறமைகளின் பலத்தில் நிற்பவர்கள் இவர்கள். நம்ம ஊரில் ஏற்கெனவே ஆடிட்டர்களும் வக்கீல்களும் மருத்துவர்களும் இப்படிப்பட்ட கண்சல்டன்சி வேலையைத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இன்று வேறு படிப்பு படித்தவர்கள், ‘கண்சல்ட்டண்ட்டாக இருக்கிறேன்’ என்றால், சமூகத்தால் ஏளனமாகவே பார்க்கப்படுகிறார்கள்.

நமது சமூகத்தில், திருமணம் ஒரு பெரிய விஷயம். அது தொடர்பான கேள்விகள் பல சமயங்களில் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, அவர்கள் யாரோடு வாழுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது, இன்னும் சிக்கல்களுக்கே வழிவகுக்கின்றன. மேலும் நம்ம ஊரில், இப்போது ஏகப்பட்ட திருமண முறிவுகள் நடக்கின்றன. அதை இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்துக்குச் செல்வோர் உண்டு. அதைப் பற்றிப் பேசுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதோரும் உண்டு. ஆனால், இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு.

இதேபோல் நிறைய மதமாற்றங்கள் நடக்கின்றன. தெரிந்தவர்கள் பலர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள். ஏன் மாறினார்கள், என்ன காரணம் என்றெல்லாம் இதைக் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. மேலும் அதைப் பற்றிப் பேசுவதை, நண்பர்கள் தவிர்க்கிறார்கள். மதம் மாறிப் போனாலும் ஒருவித குற்றவுணர்ச்சியோடுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் போய் சாதாரணமாகப் பேசினால் கூட, இந்த மாதிரிக் கேள்விகள் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி, காதல், பெற்றோரை வைத்துப் பராமரிக்க முடியாதிருப்பது என்று எண்ணற்ற விஷயங்கள் சிக்கல்களாக இருக்கின்றன. இதனோடு, சமூக ரீதியான ஒரு வேல்யூ ஜட்ஜ்மெண்ட் வேறு சேர்ந்திருப்பதால், கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். கேள்விகளுக்கான ஒரு பொருளாகிவிட்டோமே என்பதே பலருக்கு அவஸ்தையாக இருக்கிறது. அதை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள்.

இதில் கேட்பவர்களின் நோக்கம் என்பதும் உள்ளடங்கி இருக்கிறது. தெரியாமல், சாதாரணமாகக் கேட்பவர்கள் இயல்பானவர்கள். வேண்டுமென்றே இக்கட்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, குதர்க்கமாகக் கேட்பவர்கள் இன்னொரு புறம். யாரை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது இருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கலே.

எல்லோருக்கும் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் உணர்வு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன. திறந்த புத்தகங்கள் என்று கருதிக்கொள்வோருக்கும் இந்த நிலைதான். அதைத் தொட்டவுடன், அவர்கள் டென்ஷனாகிறார்கள். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிப்போய்விடுகிறார்கள். இப்படித் திணறடிப்பதில் பலருக்கு ஒரு வக்கிர சந்தோஷம் இருக்கிறது.

நம்முடைய தமிழ் சமூகத்தில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அடுத்தவனைப் பற்றி அத்தனையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு அது. அரசல்புரசலாகவேனும் தகவல்களைச் சேகரித்துக்கொள்வது ஒரு வழக்கம் என்றால், ஒரு சிலர் நேரடியாக கேட்டு, இக்கட்டான சூழ்நிலையைத் தோற்றுவித்துவிடுவதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள். இப்படிச் சேகரிக்கப்படும் பல தகவல்கள் வெற்றுத் தகவல்கள். எந்த வகையிலும் யாருக்கும் உபயோகமில்லாத தகவல்கள் அவை. இதை அரிப்பு என்று சொன்னால், கொஞ்சமும் மிகையில்லை.

என் வரையில் ஒன்றைக் கண்டிருக்கிறேன். தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்காமல், தெரிந்துகொள்ளாமல் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்க முடியும். பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம்? ஆனால், இப்படிக் கேட்காமல் இருப்பது என்பது ஒரு பழக்கம். முதலில் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்புறம் மெல்ல மெல்ல மனத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டால், அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிடும்.

அந்தரங்கம் புனிதமானது. அதைச் சீண்டிப் பார்ப்பதால், வலி மட்டுமே மிஞ்சும்.