Posts Tagged ‘எழுத்தாளர்கள்’

கொச்சைப்படுத்தும் பேட்டிகள்

Posted in இதழியல், எழுத்தாளர்கள் on September 30th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் இவை:

1. உங்களைப் பற்றி?
2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா?
3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி?
4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்?
5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்?
6. வெளிநாட்டுப் பயணம்?
7. கவிதைகள் சார்ந்த உங்களின் வேறு பணிகள்?
8. வாங்க விரும்பும் விருது?
9. திரைப்படப் பாடல் எழுதுவீர்களா?

இப்பேட்டிக்கு எழுதப்பட்டுள்ள அறிமுக பத்திகளில் இது ஒன்று: ‘கவிதைகளில் மரபுக் கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள் இருந்தபோதும் நவீன கவிதையை தனது வசமாக்கி அந்த கவிதைக்காகவே கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் கலாப்ரியா.’

இந்தப் பேட்டியை இங்கே நான் பிரித்து ஆராயப் போவதில்லை. அப்படிச் செய்தால், இன்னும் நிறைய செய்திகளை எடுத்துச் சொல்ல முடியும். என் ஆதங்கம், தினமணி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் நிறைந்த இதழிலேயே இப்படிப்பட்ட பேட்டி வந்திருப்பதுதான். அவர்களுக்குக் கலாப்ரியாவைத் தெரியாதா? தமிழில் அவர் எத்தனை ஆண்டுகளாக எழுதுகிறார், நவீன கவிதைக்கு அவருடைய பங்களிப்பு என்ன என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா?

அப்படி இருந்தும், அவருடன் இப்படி ஒரு ருடிமெண்டரியான பேட்டியை எடுத்துப் போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? கலைமாமணி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவருடைய பங்களிப்பு நவீன கவிதையில் என்றுமே நின்று நிலைப்பது. அப்படி இருக்கும்போது, இந்தப் பேட்டி, அவருக்கு என்ன புகழைச் சேர்க்கிறது?

இலக்கியவாதிகள் பேட்டியின் வேலை என்ன? தெரியாத விவரங்களை, அனுபவங்களை, முயற்சிகளை, வாசிப்புகளை, நோக்குநிலைகளை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வருவதுதானே? அவருடைய சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக அல்லவா கேள்விகள் இருக்கவேண்டும்? அல்லது அவர் செய்யத் தவறின விஷயங்களைப் பற்றிய விமர்சனமாக கேள்விகள் அமையலாம். அரசியல் பேட்டிகளின் தன்மை வேறு. அது வேறு விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.

அந்தப் பேட்டியைப் படித்து முடிக்கும்போது, ஒரு இலக்கியவாதியின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் வாசகன் பெற்றிருக்கவேண்டும். அவனுடைய வாசிப்பு விரிவின் திசைகளைப் புரிந்துகொண்டு இருக்க வேண்டும். அதுதான் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் பலன்.

வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில், ஒரு சாதனையாளரின் 30 ஆண்டுக்கால, 40 ஆண்டுக்கால பங்களிப்பை, கூனிக் குறுகி நிற்க வைத்துவிடுகிறார்கள். பல பேட்டிகளில் இதே பிரச்னையைப் பார்க்கிறேன். இதற்குப் பின்னால் இருக்கும், ‘என்னால்தான் நீ வெளியுலகுக்கே தெரிய வருகிறாய்’ என்ற தொனி மிகவும் அபாயகரமானது. அருவருப்பானது.

மூத்த எழுத்தாளர்களிடம், கவிஞர்களிடம் பேட்டி எடுக்கும்போது, ஆரம்பிக்கும்போதே, உயரமான தளத்தில் தொடங்கவேண்டும். ஆரம்பப் பத்திகளில், அவருடைய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, பேட்டிக்கான கேள்விகள் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். அப்போதுதான், பேட்டிக்கும் கெளரவம், அதைக் கொடுக்கும் படைப்பாளிக்கும் கெளரவம், வெளியிடும் இதழுக்கும் கெளரவம்.

பேட்டிகளில் எரிச்சல் தரக்கூடிய ஒரு கேள்வி, எழுத்தாளன் என்றால், எப்போது சினிமாவுக்கு வசனம் எழுதுவீர்கள் என்ற கேள்வி. கவிஞர் என்றால், சினிமாவுக்குப் பாட்டெழுதுவீர்களா என்ற கேள்வி. சினிமாதானா ஒரு இலக்கியவாதியின் அல்டிமேட் கோல்? ஏன் வாழ்க்கையில் அவன் வேறு எதுவுமே சாதிக்க மாட்டானா? என்ன சோகை பிடித்த சிந்தனை இது? ஒரு சினிமா நடிகனிடம் போய், நீங்கள் எப்போது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ மாதிரி ஒரு நாவல் எழுதுவீர்கள் என்று கேட்பார்களா? எப்படி அது ஒரு அபத்தமான கேள்வியோ, அதேபோன்றதுதான், எழுத்தாளன் முன் வீசப்படும் சினிமா கேள்வியும்.

பேட்டி எடுக்கப் போகும்முன்பு, ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒன்றிரண்டு புத்தகங்களையேனும் படித்திருக்கவேண்டும். இன்றைய அவசரமான பத்திரிகை உலகில், படித்துவிட்டு போவதோ, விவரங்களைத் திரட்டிக்கொண்டு போவதென்பதோ சாத்தியமே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மையோ, தெரியவில்லை. ஆனால், நிலைமை இதுதான்.

இதுபோன்ற சூழ்நிலைகளிலும் பேட்டியின் தரத்தை நிமிர்த்திக் காண்பிப்பவர் அசோகமித்திரன். எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எழுத்துப்பூர்வமான பதில்களால், பேட்டிக்கு உயர் அந்தஸ்தைத் தந்துவிடுபவர் அவர். பல பேட்டிகள் கொடுத்த அனுபவம் அவருக்கு.

இல்லையெனில், பேட்டிகள், எழுத்தாளர்களை மேன்மைப்படுத்துவதைவிட, கொச்சைப்படுத்திவிடும் சாத்தியங்களே அதிகம்.

வலி ஏன்?

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள் on September 16th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சமீபத்தில் மலேசியாவின் இளம் எழுத்தாளர்கள் நடத்தும் வல்லினம் வலைஇதழைப் படித்துக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே அச்சு இதழாக வெளிவந்தபோது ஓன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்திய இதழில், மலேசிய இளைய எழுத்தாளர்களில் பலர் குமுறித் தள்ளியிருக்கிறார்கள். காரணம் இதுதான்: மலேசியாவின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான சை.பீர் முகம்மது அங்கே ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். தலைமை ஏற்றவர் மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு. விழாவிலேயே 61,000 மலேசிய வெள்ளிகள் திரட்டப்பட்டு, சை.பீர்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. சை.பீர். பேசும்போது, அடுத்த ஜென்மத்திலாவது சாமிவேலுவின் அணுக்கத் தோழர்கள் கூட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், இளைய எழுத்தாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். Are you so cheap? என்று கேட்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

நம்பிக்கையின் வீழ்ச்சி இது. பெரிய எதிர்பார்ப்போடும் கரிசனத்தோடும் அண்ணாந்து பார்த்து வந்த ஒரு எழுத்தாளர் சட்டென சரிந்து மண்ணில் வந்து நிற்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இது. இது நாள் வரை அந்த மூத்தவர் பேசிய பேச்சு, வாழ்ந்த வாழ்வு அத்தனையும் இப்போது கேள்விக்குள்ளாகிறது. அவரது நோக்கமும் ஈடுபாடும் சந்தேகத்துக்கு உள்ளாக்கிறது. அதைவிட, தேவதா விசுவாசத்துடன் பார்த்த ஒரு நபர், சரியும் போது, அவரின் வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் ஏற்படும் வலி சொல்லில் வடிக்க முடியாதது.

தமிழகத்தில் இந்தச் சரிவு மிகவும் சகஜம். நான் பல எழுத்தாளர்களின் சரிவைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அரசியல் தலைவர்களின் சரிவைப் பார்த்து வலி அடைந்திருக்கிறேன். சின்ன வயதில் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும் போலிருக்கிறது. பலரை அப்பா ஸ்தானத்திலும் அண்ணன் நிலையும் வைத்துப் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் பலர் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள். தப்பு அவர்கள் மேல் இல்லை. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட என்மேல் தான் தப்பு என்பதைப் புரிந்துகொண்ட போது, எனக்கு லேசாக தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது.

ஒருவகையில் லட்சியவாதம், கருத்துகளை முதன்மைப்படுத்துவது எல்லாமே அபத்தங்கள். எழுத்தைப் போலவே வாழ்வை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லை போலும். எழுத்தையும் எழுத்தாளனின் வாழ்வையும் அவனது குணங்களையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்ப்பதால் வரும் வினை இது. இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் ஆயிற்று.

நோக்கங்கள், கருத்துகள், இலக்குகள் எல்லாமே மாறக்கூடியன. எதுவுமே நிலையானது இல்லை. ஏன் மாறின, எப்படி மாறின என்று ஆயிரம் கேள்விகள் எழுப்பி, குதர்க்கக் காரணங்கள் கற்பித்துக்கொண்டு, மனத்தை ரணப்படுத்திக்கொள்வதால் ஏது பலனுமில்லை. வாசகன் தனி மனிதன். எழுத்தாளன் இன்னொரு தனி மனிதன். தனிப்பட்ட வகையில் வாசகனின் எதிர்பாப்புகளை நிறைவு செய்யவேண்டும் என்ற எழுத்தாளனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. வாசகன் கண்டுபிடிக்கும் காரணங்கள், உண்மையான காரணங்களாக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. இதையெல்லாம் மீறி, தன் கருத்துகளை, நோக்கங்களை, நடத்தைகளை ஒரு எழுத்தாளன் மாற்றிக்கொள்ள எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

நேற்று வரை இப்படி பேசினாயே, இன்று இப்படித் தடம் புரண்டு பேசுகிறாயே என்று அவனைக் கேட்பதிலும் அர்த்தமில்லை. பேசுவது அவன் உரிமை. அவன் பேச்சை நம்பியது வாசகனான உன் தப்பு. அல்லது, அது நேற்று வரை பேசினது, இன்று நான் பக்குவமடைந்துவிட்டேன், வேறு குரலில், வேறொரு புரிதலில், வேறொரு கோணத்தில் பார்க்கக் கத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், இப்படிப் பேசுகிறேன் என்று எழுத்தாளன் சொல்லக் கூடும். நீ அந்த இடத்துக்கு வந்து சேரவில்லை என்பது உன் குற்றமே அன்றி, என் பிழையல்ல.

அடிப்படையில், எழுத்தாளன் x வாசகன் உறவு என்பது லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் மாதிரியானது. எழுத்தாளனுக்கு ஒரு சமயம் வாசகன் வேண்டும், இன்னொரு சமயம் அவன் வேண்டாம். வாசகனுக்கும் இதே நிலைதான். எந்த சமயத்தில் வேண்டும், வேண்டாம் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் பிறக்கிறது.
என் வரையில், நான் பின்பற்றும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. படைப்புகளைப் படிப்பேன். பாராட்டுவேன். கொண்டாடுவேன். படைப்பாளர்களைப் படிப்பதில்லை. அவர்கள் மேல் என் அபிமானக் கோபுரத்தைக் கட்டுவதில்லை. நம்பிக்கைச் சிகரத்தை ஏற்றுவதில்லை. நாளைக்கு இந்தக் கோபுரம் சரியும்போது, அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

சொல்லப்போனால், இந்த வலி, அந்த எழுத்தாளருக்குத் தன்னால்தான் ஏற்பட்டது என்று தெரிய வாய்ப்பே கிடையாது. எதற்கு என் கற்பனை கொண்டு, நானே எனக்குச் சூடு வைத்துக்கொள்ள வேண்டும்? அர்த்தமில்லைதானே?