Posts Tagged ‘எம்.பி. உதயசூரியன்’

ஜால மொழி ஜித்தர்கள்

Posted in இதழியல் on November 18th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

‘ஏ.பி.சி. என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்‌ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்…’

‘மணிரத்னம் படம் ஒரு பக்கம் மணியடிக்க, ஃப்ரீ பிகினி மறுபக்கம் கிர்ரடிக்க வைக்கும் ப்ரியாமணிக்கு, இதுதான் பீக்!’

‘சிம்புதேவனின் கிளாஸிக் மேஜிக்கில் அடுத்த களம், கௌபாய் கதகளி! ஆக்ஷன், காதல், யதார்த்தங்களுக்கு நடுவே காமிக்கல் கலர் வெடிவைக்கிற சிம்புதேவனின் ஃபார்முலா இப்போ ‘இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்.’ இந்த முறை கொஞ்சம் காஸ்ட்லி வெடி! ‘

‘முமைத்கான்… பார்த்தாலே பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ். அம்மாடி… பம்பரக் கண்ணால் காதல் தாண்டியும் சங்கதி சொல்லும் சிக்கிமுக்கி நெருப்புடன் ஒரு சிக்லெட் பேட்டி! ‘

வெகுஜன இதழ்களில் எழுதப்படும் கவர்ச்சிகரமான மொழியின் சில சாம்பிள்கள்தான் மேலே. பல எழுத்தாளர்கள் வெகுஜன எழுத்து முறையை ஏதோ தீண்டத்தகாத ஒன்று போல் நினைக்கிறார்கள். அல்லது புறங்கையால் புறமொதுக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுத்தமானவர்கள், அதில் மொழிக் கலப்பு, மொழிச் சிதைவு, மொழி இழிவு என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.

பல்வேறு விதமான வெகுஜன எழுத்து முறை உண்டு. இதில் ‘வெகுஜன’ என்ற சொல் வசதி கருதி பயன்படுத்தப்படுகிறதே அன்றி, குறையாகவோ, கொச்சையாகவோ பயன்படுத்தவில்லை. பொதுவாக எல்லா தரப்பு வாசகர்களும் ரசிக்கும்படி எழுதவேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளரும் விரும்புவார்கள். படைப்புகளில் இது ஒருவிதமாக இயங்கும் என்றால், பத்திரிகைக் கட்டுரைகளில், பேட்டிக் கட்டுரைகளில் வேறு விதமாக இயங்கும். படிக்கும்போதே துள்ளலும் குதியலும் சேர வேண்டும். மகிழ்ச்சி மேடையேற வேண்டும்.

அப்படிப்பட்ட மொழியை எல்லோரும் சுலபமாகப் பெற்றுவிட முடியாது. ஒரு சிலருக்கு அது இயல்பாக வரலாம். எழுத்தாளர் சுஜாதா இதற்கு சரியான உதாரணம். பல பத்திரிகையாளர்கள், படாத பாடுபட்டு அப்படிப்பட்ட துள்ளலைத் தம் மொழிக்குள் கொண்டுவருவதைப் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக, சினிமா நடிகைகள், நடிகர்களின் பேட்டிகள், பேட்டிக் கட்டுரைகளின் ஆரம்பப் பத்திகளில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இப்படியொரு மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒன்றிரண்டு ஆரம்ப அறிமுக வரிகளை எழுதுவதற்குள் விழி பிதுங்கிவிடும். எல்லாமே புது வார்த்தைகளாக இருக்கவேண்டும். இன்றைய இளைஞர்களின் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சொற்களாக இருக்கவேண்டும். அல்லது சமீபத்தில் ஹிட்டான பாடல் வரிகளாக இருக்கவேண்டும். அல்லது கவிதைக்கான அம்சத்தைக் கொஞ்சம் தொட்டுக்கொள்ள வேண்டும். சொல்லும்போதே, படிக்கும்போதே, வாசகனை உள்ளே இழுத்துக்கொள்வதாக இருக்கவேண்டும்.

இந்த மொழியை வளர்த்துச் செம்மைப்படுத்தியதில் ஆனந்த விகடனுக்கு முக்கிய பங்குண்டு. அங்கே எழுதும் கட்டுரையாளர்கள், இத்தகைய வார்த்தை ஜாலத்தைச் சுலபமாகக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். படிக்கும் வாசகர்களின் இன்றைய சுவையை, ரசனையை மனத்தில் கொண்டு எழுதப்படும் வரிகள் இவை. ஆனந்த விகடன் பட்டறையில் இருந்து வெளிவந்த பலருக்கும் இத்தகைய அலங்கார மொழி உண்டு.

இதை ஒன்றிரண்டு வரிகள்தான் எழுத முடியும் என்றில்லை. நீண்ட கட்டுரைகளையே இதுபோன்ற அலங்கார ஜால மொழியில் எழுத முடியும். பெரிய கட்டுரையாக எழுதும்போது, வெகுஜன கவர்ச்சி மொழி இன்னும் நெகிழ்வுத் தன்மையோடு செயல்படும். கீழே கொஞ்சம் உதாரணங்கள்:

‘மழலைக்குரல் மீனாவும், மன்மத ராக்கெட் ரம்பாவும் இப்பவே கண்ணாடி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஜோதிகாவும் அந்த லிஸ்டில் இருப்பதுதான் ஆச்சர்யம். உதவி இயக்குனர் ஸ்கிரிப்டோடு அருகில் வந்தால் “படிச்சு காட்டிடுங்க. ஒப்பிச்சிடுறேன்” என்று சொல்கிற நிலையில்தான் இருக்கிறது இவர்களின் படிப்பறிவு. படிப்பில் ஒன்றும் குறையில்லை. பார்வையில்தான் இவர்களுக்கு சின்ன குறை. கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, மேற்படி நடிகைகள் கண்ணாடி போட்டால்தான் படிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இனி இவர்கள் கவலையை தூக்கி சுனாமியில் போட்டுவிட்டு நிம்மதியாக படிக்கலாம். சின்ன சின்ன எழுத்துக்களை கூட! ‘

‘விக்னேஷுக்கு மேலே, கரணுக்கு கீழே என்பது மாதிரிதான் இருக்கிறது ஷாமின் மார்க்கெட்! இவர் நடித்து எந்த படமும் ஹவுஸ்புல் ஆனதில்லை என்பது கலையுலகத்தின் கல்வெட்டு. அப்படிப்பட்ட ஷாமுக்கே ஆயிரம் தெனாவட்டு! இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் ஒருவரே, ‘ஷாமா? அவர் இருக்கும் பக்கமே இனி தலை வச்சு படுக்க மாட்டோம்’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்.’

’இலியானாவின் இடுப்புக்கு ஆந்திராவையே எழுதி வைக்க துடிக்கிறார்கள் தெலுங்கு தேச கண்மணிகள். தனது படத்தில் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்த பிரபுதேவா, அதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதற்கு தயார் என்றார். விஜய், அஜீத் என்று இளசுகளின் தேசத்தில் இலியானா என்ற வைரத்தின் விலை எக்கச்சக்கம்! நிலைமை இப்படியிருக்க, ரஜினி படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதும், தமிழ் நாட்டுக்கே ஓடி வந்தார் இலியானா. வந்தவருக்கு ஆந்திர மிளகாயை ஊட்டி அனுப்பியிருக்கிறார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா!’

’ரஜினி, கமல், விஜய், அஜீத்களே வெரைட்டி விருந்து வைத்தால்தான் தியேட்டருக்குள் கூட்டம் வருகிறது. சேனல்களில் மட்டும் உட்டாலக்கடி அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? ‘கனாக் காணும் காலங்கள்’ சக்சஸ் ஃபார்முலாவில் லொகேஷன் மட்டும் மாற்றம் செய்து, அடுத்த ஜில் ஜாலி கலாட்டாவை ஆரம்பித்துவிட்டது விஜய் டி.வி. இதுவரை சிட்டி பள்ளிக்கூடத்தில் ஜுஜுலிப்பான சேட்டைகள் செய்து வந்த மாணவர்கள் கும்பல், இனி அலப்பறை கொடுக்கவிருப்பது பட்டி பள்ளிக் கூடத் தில்! தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்கூடம்தான் இனி ‘கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்!’ ’

ஆனந்த விகடன் எடிட்டோரியலில் இருப்பவர்களைத் தவிர்த்து, நான் பார்த்து பத்திரிகைத்துறையில் இதுபோன்ற ஜால மொழி எழுதுவதில் இரண்டு பேர்கள் பயங்கர எக்ஸ்பர்டுகள். ஒருவர் எம்.பி.உதயசூரியன். புதிய தலைமுறை இதழில் துணை ஆசிரியராக இருக்கும் இவரது மொழி, கற்கண்டு போல் இனிக்கும். இவரும் விகடன் பட்டறையில் மெருகேறியவர். தமிழ் சிஃபியில் இவர் எழுதிய சினிமா செய்திகள், பேட்டிகள் எல்லாம் அவ்வளவு சுவையானவை. ரசிக்கத்தக்கவை. இன்றைக்கு அந்த வலைத்தளத்தை மூடிவிட்டார்கள். இல்லையென்றால், எண்ணற்ற உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்க முடியும். இன்னொருவர் ஆர்.எஸ். அந்தணன். தமிழ்சினிமா டாட் காம் வலைத்தளத்தில் அந்தணன் எழுதும் சினிமா செய்திகளைப் படித்துப் பாருங்கள். ‘கிக்’கேற்றும் மொழி.

மொழிப் பயன்பாட்டில் பாணி (ஸ்டைல்) மிகவும் முக்கியம் என்று கருதுபவன் நான். ஸ்டைல் இல்லாமல் சுவாரசியம் இல்லை. வாக்கிய அமைப்பு, பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லாம் இதில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சுத்தபத்தம் அவசியமில்லை. சொல்லும் செய்தியை இந்தப் புதிய பாணி எழுத்துமுறை சட்டென தனித்துக் காண்பித்துவிடும். கவனத்தைக் கவருவதாக இருக்கும். வித்தியாசமாகத் தெரியும். வாசகனிடம் எளிமையாகப் போய் சேர முடியும்.

அந்த வகையில் இரண்டு எழுத்து ஸ்டைலிஸ்டுகளை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். ஒருவர் பா.ராகவன். இன்னொருவர் எல்லே ராம் என்று அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம். பா.ராகவனுக்கு முன்னோடி ஒருவர் உண்டு. எழுத்தாளர் ம.வே.சிவகுமார். அவரும் எழுத்தை இழைத்து இழைத்து மெருகேற்றுவார்.

இன்றைக்கு தொலைக்காட்சியும் சினிமாவும் வாசகர்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. அவர்களுடைய மொழியும் ஒலியும் இத்தகைய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அழகியல் காட்சி ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள, பத்திரிகைகளுக்கு ஜாலம் செய்யும் மொழி அவசியமாகிறது. இல்லையெனில், வாசகன் பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடுவான்.

இதில் ஒரே ஒரு அபாயம் உண்டு. மொழியில் ஜாலம் செய்ய முற்படும்போது, அதில் சொல்லவேண்டிய செய்தியின் வீர்யம் குறைந்துபோகலாம். தீவிரத்தன்மையும் குறையாமல், அதே சமயம் அசத்தல் மொழியும் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்! இவர் வாசகர்களை நோக்கிப் போகவேண்டாம், வாசகர்களே இவரைக் கண்டுபிடித்து, கொண்டாடி மகிழ்வார்கள், சுஜாதாவைக் கொண்டாடியதைப் போல.