Posts Tagged ‘உயிர்மை’

2009ல் வெளியான நாவல்கள்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.

மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.

2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.

ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.

மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.

1. காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா பதிப்பகம் – ரூ.40
2. கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம் – ரூ.50
3. குவியம் – ஜெயந்தி சங்கர் – ரூ.100
4. மலையகமல்லன் – தி.குழந்தைவேலு – காவ்யா – ரூ.80
5. என் உயிரே விட்டுக்கொடு – முத்தாலங்குறிச்சி காமராசு – காவ்யா – ரூ.90
6. அனல் காற்று – ஜெயமோகன் – தமிழினி – ரூ.90
7. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – ரூ.230
8. நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி – ரூ. 220
9. தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி – ரூ.75
10. நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 120
11. மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 90
12. கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை பதிப்பகம் – ரூ.50
13. மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
15. வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100

2009 – மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்

Posted in பதிப்பகம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.

ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 — ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.

2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.

செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.

திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.

இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.