9வது உலகத் தமிழ் மாநாடு

தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?

Posted in 9வது உலகத் தமிழ் மாநாடு, அரசியல், செம்மொழி மாநாடு on October 22nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகிவிட்டது. உடனே, அதிமுகவும் மதிமுகவும் இதில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டன. இது 2011ல் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலை மனத்தில் கொண்டு, திமுக புகழ் பாடும் மாநாடாக இருக்கப் போகிறது என்று இக்கட்சிகள் நினைக்கின்றன.

விஜய்காந்தும் தமிழக பா.ஜ.க.வும் கரோஷிமா சொல்வதுபோலவே தேவைப்படும் கால அவகாசத்தைக் கொடுத்து மாநாடு நடத்தினால் என்ன என்று கேட்கிறார்கள். அடுத்த வாரம், கருணாநிதியை ராமதாஸ் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. இதை ஒரு முகாந்தரமாக வைத்துக்கொண்டு, ராமதாஸ், திமுகவுக்குள் தன் கூடாரத்தை மாற்றிக்கொள்ள முயலலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, 1995ல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாடு பற்றி ஒரு தவறான தகவலைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஜுனியர் விகடனில் தான் எழுதும் பத்தியிலும் இதையே சொல்லியிருக்கிறார்.

அதாவது, கார்த்திகேசு சிவத்தம்பி, வேலுப்பிள்ளை ஆகிய இலங்கைத் தமிழ் அறிஞர்களை எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளவிடாமல் நாடு கடத்தி அவமானப்படுத்தியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.

இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

1. ஒரு மாநிலப் போலீஸ், எப்படி ஒருவரை நாடு கடத்த முடியும்?
2. மேலும், அந்த மாநாடு நடப்பதற்கு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்பே, யார் யார் என்னென்ன கட்டுரைகள் வாசிக்கப் போகிறார்கள், எந்த அமர்வுக்கு யார் தலைமை தாங்கப் போகிறார்கள் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில்தான், வெளிநாட்டு அறிஞர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, அவர்களும் வர ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அவமானப்படுத்துவதுதான் அதிமுக அரசின் நோக்கம் என்றால், முதலில் ஏன் இவர்களை அழைக்கப் போகிறார்கள்? நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் போகிறார்கள்?
3. நாடுக்குள் ஒருவரை அனுமதிப்பது என்பதோ, அனுமதிக்கக்கூடாது என்பதோ மத்திய அரசின் முடிவு. அங்கே இருக்கும் பல்வேறு துறைகளின் முடிவு. உள்துறையின் முடிவு. இந்தத் துறைகள் கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு வீராவேசமாக சில செயல்களைச் செய்யக் கூடும். அது எப்படி மாநில அரசின் தவறாக ஆகும்?
4. அப்படியே ஒருவரை நாடு கடத்த மத்திய அரசின் துறை ஏதேனும் முடிவு செய்துவிட்டால், மாநில அரசால் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியாது. ஜெயலலிதா நினைத்திருந்தால் முடியாதா? சண்டை போட்டு எப்படியேனும் தமிழ் அறிஞர்களைப் பங்கேற்க வைத்திருக்க முடியாதா? நிச்சயம் முடியாது. என்ன மாநில உரிமை பேசினாலும், இறுதி முடிவு மத்திய அரசுடையதுதான்.

மேலும் இதுதான் முதல் நிகழ்ச்சியும் அல்ல. ஏற்கெனவே, இலங்கைத் தமிழ் அறிஞர்கள் அனுமதிக்கப்படாத மாநாடுகள் உண்டு. வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால், அதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பு என்று பேசுவது, முழுவதும் அரசியல். திமுக அரசு இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

அதை அரசியல்வாதிகள் பேசலாம். பொய்யும் புறம்பேசுவதும் அவர்கள் தொழில். படித்த விவரமானவர்களும் யோசிக்கத் தெரிந்தவர்களும் தமிழ் அறிஞர்களும் பேசக்கூடாது. அது இழுக்கு.

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள்

Posted in 9வது உலகத் தமிழ் மாநாடு on September 23rd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

ஜனவரி 21 – 24, 2010ல், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவையில் கூடப் போகிறது. தமிழக அரசே நடத்தப்போவதால், கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. பல்வேறு துறைகளில், தலைப்புகளில் கூட்டங்கள், கட்டுரை வாசித்தல் எல்லாம் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 8வது மாநாட்டுக்கு நான் போயிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது.

வழக்கம்போல், இந்த மாநாட்டைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். என் அளவில், இந்த மாநாட்டை ஒட்டி, ஒரு சில விஷயங்கள் நடந்தால், மகிழ்ச்சியடைவேன்.

அவை:

1. தமிழக அரசு ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துருவை நிலையானதாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அறிவித்துவிடலாம். பல்வேறு அரசுத் துறை வலைத்தளங்களில் இன்னும் டாமும் டாபும் தான் கோலோச்சுகின்றன. எழுத்துருவை இறக்கிக்கொண்டு படிக்கவேண்டிய நிலை 2010லும் தொடர வேண்டுமா? (தமிழ் இணைய மாநாட்டில் பேசவேண்டியதை இங்கே ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். இறுதியில் செயல்படுத்தவேண்டியது தமிழக அரசுதான் என்பதால், இங்கே சொல்வதும் பொருத்தம். எப்படி இருந்தாலும் அறிவியல் தமிழ் என்று அமர்வு கண்டிப்பாக இந்த மாநாட்டில் வைப்பார்களே?)

2. ஆங்கிலத்தில் வேர்ட் வெப் (Word Web) என்றொரு அகராதி இருக்கிறது. உங்கள் கணினியில் இறக்கிக்கொண்டு, எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒருமுறை இறக்கிக்கொண்டுவிட்டால் போதும். அப்புறம் இணைய இணைப்பு வேண்டாம். மிகச் சின்ன நிரலி. இலவச எடிஷன். உலகில் உள்ள அத்தனை சொற்களுக்கும் அர்த்தம் சொல்லிவிடுமோ என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பழனியப்பா பிரதர்ஸ் தயாரித்த பால்ஸ் மின் அகராதியை முன்னர், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தமிழ் சிடியில் மொத்தமாகப் பதிந்து கொடுத்தார்கள். வலைத்தளத்திலும் போட்டு வைத்திருந்தார்கள். இப்போது அது காணோம். ஒரு ஆங்கிலம் – தமிழ், தமிழ் – தமிழ் அகராதியை இப்படி இந்த மாநாட்டு நேரத்தில் சின்ன நிரலியாக்கி வெளியிட்டால், 9வது தமிழ் மாநாட்டை நான் மறக்கவே மாட்டேன்.

3. ஒரு ஸ்பெல்செக்கர், ஒரு சந்தி செக்கரும் கூடவே கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி. இணையத் தமிழ் கலைஞருக்கு மிகவும் கடமைப்பட்டதாக இருக்கும். இதெல்லாம் இப்போது வெளியில் சந்தையில் கிடைக்கிறதே என்று சொல்லாதீர்கள். இலவசமாகக் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி. குறைந்தபட்சம் ஒரு பேசிக் எடிஷனையாவது இலவசமாக இணையத்தில் கொடுக்கலாம்.

4. தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் வலையேற்றப்பட்டுள்ள பல்வேறு அகராதிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை யுனிகோட்டுக்கு மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் திறந்துவிட்டால் இன்னும் புண்ணியமாக இருக்கும்.

5. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியை, இன்றைய காலத்துக்கு ஏற்ற மொழியில் செம்மைப்படுத்தும் திட்டத்தை, இந்த மாநாட்டில் போது தொடங்கினால் பயனுடையதாக இருக்கும். இன்றைக்கும் அந்த அகராதிதான் மிகவும் எக்ஸாஸ்டிவ் வார்த்தைச் சுரங்கம் கொண்டதாக இருக்கிறது.

6. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வாழ்வியற் களஞ்சியம், அறிவியற் களஞ்சியம் ஆகிய தொகுதிகளை இணையத்தில் வெளியிட்டு தேடும் வசதியோடு வைத்தால், உதவிகரமாக இருக்கும்.

7. தமிழ் பதிப்பாளர்களுக்கான வாரியம் தொடங்கப்பட்டிருக்கிறது. 16 செப்.-09 அன்று நடைபெற்ற வாரியத்தின் முதல் கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் 4,000 நூலகங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இப்போது அரசு நூலகங்களுக்காக 1000 படிகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் அதை 2000 படிகள் என்று உயர்த்துவது சரி. அது முடியாவிட்டால், அரசு புத்தகங்களை வாங்க நிர்ணயித்திருக்கும் விலைகளையாவது உயர்த்த வேண்டும். காகித செலவு, அச்சுக் கூலி எல்லாம் உயர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே புத்தகங்களை வாங்குவது எப்படிச் சரி?