<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன் &#187; பொது</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/category/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>பேசாத சொற்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:33:08 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[திருவல்லிக்கேணி]]></category>
		<category><![CDATA[தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=303</guid>
		<description><![CDATA[பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.</p>
<p>நகர வாழ்க்கை காரணமா, என்ன காரணம் என்று தெரியவில்லை. பலர் அதிபயங்கர மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு சின்ன விஷயமும் இங்கே தோல்வியோடு முடிகிறது போலிருக்கிறது. தோல்வி, நிறைவின்மை, குறைகள் எல்லாம் சேர்ந்து மனத்துக்குள் பெரும் போராட்டங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்படி தம்மையும் அறியாமல் பேசிக்கொண்டே செல்பவர்கள்.</p>
<p>குறிப்பாக நிறைய பெண்கள் இப்படி இருக்கிறார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள், கைகளை ஆட்டி யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டே போவார்கள். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் வார்த்தைகள் வரிசை கட்டி நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பெருமூச்சு, ஒரு அலுத்துக்கொள்ளும் தலையாட்டல் எல்லாம் உள்ளே கரையும் சொற்பிரவாகத்தின் தொடர்ச்சி.</p>
<p>சின்னப் பெண்களுக்கு ஒருவித கட்டுப்பாடு, சங்கோஜம் எல்லாம் கூடவே தலைகாட்டுவதால், தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வயது ஆக ஆக, இந்தக் கட்டுப்பாடு கழண்டுவிடுகிறது. கவலைகள் மேலோங்கிவிடுகிறது. தம்மையும் அறியாமல் கையை ஆட்டிக்கொண்டு யாரிடமோ விவாதம் செய்துகொண்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் இது இன்னும் அதிகமாகி, பேசவே ஆரம்பித்துவிடுகிறார்கள்.</p>
<p>நம்மிடையே பேசுவதற்கான நேரம் குறைந்துவிட்டது. குடும்பத்தாரோடு பேசுவதே அரிதாகிக்கொண்டு இருக்கிறது. குடும்பங்களில் பேச்சு என்பது அதிகபட்சம், ஒன்றிரண்டு சொற்கள், ஒரு சில வரிகளில் முடிந்துபோய்விடுகிறது. முன் தீர்மானிக்கப்பட்ட வரிகளே பேசப்படுகின்றன. ‘டிபன் பாக்ஸ் கட்டியாச்சா?’, ‘கேஸ் சிலிண்டர் வருமா?’, ‘டெலிபோன் பில் கட்டியாச்சா?’, ‘9.20 டிரெயினைப் பிடிக்கணும்’ என்று மிகச் சப்பையான வரிகளே பேசப்படுகின்றன. விளைவு, சொல்லவேண்டிய பல செய்திகள், கேட்கவேண்டிய பல கேள்விகள், மோதித் தீர்த்துக்கொள்ள வேண்டிய கோபங்கள், புரிந்துகொள்ளவேண்டிய உணர்வுகள் எல்லாம் மனத்துக்குள் மக்கிப் போய்விடுகின்றன.</p>
<p>தொலைக்காட்சி குடும்பங்களில் பேசும் நேரத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. கூடத்தில் அது ஒரு பக்கம் மண்டையிடியாக முழங்கிக்கொண்டு இருக்க, மற்றொரு பக்கம், அதற்கு இணையாக குடும்ப உறுப்பினர்கள் கத்தி கத்திப் பேசுகிறார்கள். அல்லது பேசாமல் இருந்துவிடுகிறார்கள். பேசாமல் இருப்பதுதான் அதிகம்.</p>
<p>பல வீடுகளில், சாப்பாடு, தொலைக்காட்சியோடு பின்னிப் பிணைந்தது. கையில் தட்டை வைத்துக்கொண்டு, டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் கெட்ட பழக்கம் ஏராளமான வீடுகளில் இருக்கிறது. தட்டில் என்ன இருக்கிறது, என்ன சுவை, என்ன ரசனை என்ற எந்த ஒரு கவனமும் இல்லாத வெற்றுச் சாப்பாடு அது. எதில்தான் மல்டி டாஸ்கிங் வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.</p>
<p>என் வீட்டில், சாப்பாட்டு மேஜையை நான் பேசுவதற்கான இடமாக மாற்றி வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். டிவி ஓடக் கூடாது. செல்போன் கூடாது. கையில் புத்தகமோ பத்திரிகையோ கூடாது. சாப்பாடும் பேச்சும் மட்டுமே முக்கியம். அதிகபட்சம் பதினைந்து நிமிட நேரம். அல்லது அரை மணி. குடும்ப உறுப்பினர்கள் அத்தனை விஷயங்களையும் கொட்டிவிடுவார்கள். கேட்கவேண்டியதைக் கேட்டுவிடுவார்கள். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுவேன். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பொது.</p>
<p>பேசாது போன, உள்ளேயே மட்கிப் போன எண்ணங்களின், கோபங்களில், வலிகளின் வெளிப்பாடுகளை, சென்னைத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக, திருவல்லிக்கேணி கோவில் அருகே இரண்டு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பெண். அழுக்கு உடையணிந்துகொண்டு, பெளடர் பூசிப் பொட்டு வைத்துக்கொண்டு, கோவில் அருகே உட்கார்ந்திருப்பார். ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெரிய வீட்டின் திறமையான நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும். மிச்சமிருக்கும் அழகும் மிடுக்கும், வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை எடுத்துச் சொல்லும். திடீரென்று யாரையோ திட்டுவார். யாரையோ மிரட்டுவார். யாருக்கோ உத்தரவு தருவார். சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகளை குறை சொல்லுவார். அற்புதமான ஆங்கிலம் ஒரு சில சமயங்களில் வெளிப்படும். மற்ற நேரங்களில், நல்ல அழகான தமிழ். கொஞ்சம் நேரம் ஓரிடத்தில் அமர்ந்திருக்க மாட்டார். பெரிய கைப்பையைத் தூக்கிக்கொண்டு கோவிலைச் சுற்றியுள்ள வீட்டு வாசல்களில் உட்கார்ந்து, நடந்து, படுத்து அங்கேயே தன் நாள்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.</p>
<p>வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் பேசப்படாத வலி மொத்தம் அந்தம்மாளின் வார்த்தைகளில் தொக்கி நிற்கும். இதுபோல், மன அழுத்தம் மிகுந்த பல பெண்களை நான் சாலைகளில் பார்க்கிறேன். யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. பேசாத சொற்கள், வலி நிரம்பியவை. அதைப் பேசி வெளியே கொட்டுவதைவிட, வேறேதும் சிறப்பான் வழி இருப்பதாகத் தெரியவில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>2010 &#8211; செய்ய நினைக்கும் விஷயங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:12:49 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[டிஜிட்டல் உலகம்]]></category>
		<category><![CDATA[நேசமுடன்]]></category>
		<category><![CDATA[பா.ராகவன்]]></category>
		<category><![CDATA[மலையாளம்]]></category>
		<category><![CDATA[மிச்சுவல் பண்டு]]></category>
		<category><![CDATA[விகடன் பிரசுரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=296</guid>
		<description><![CDATA[2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.</p>
<p>1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.</p>
<p>2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.</p>
<p>3. மாதம்  ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.</p>
<p>4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.</p>
<p>5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.</p>
<p>6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.</p>
<p>எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.</p>
<p>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:10:47 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[அஜயன்பாலா]]></category>
		<category><![CDATA[அருட்செல்வர் நா. மகாலிங்கம்]]></category>
		<category><![CDATA[இரா.முருகன்]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[கொ.மு.ரியாஜ் அகமது]]></category>
		<category><![CDATA[நேசமுடன்]]></category>
		<category><![CDATA[பா.ராகவன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=294</guid>
		<description><![CDATA[நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?]]></description>
			<content:encoded><![CDATA[<p>தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:</p>
<p>1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.</p>
<p>2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?</p>
<p>3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.</p>
<p>4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.</p>
<p>5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.</p>
<p>6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.</p>
<p>7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!</p>
<p>8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.</p>
<p>9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மகிழ்ச்சிகளும் வருத்தங்களும் ஆச்சரியங்களும்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/24/5points/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/24/5points/#comments</comments>
		<pubDate>Thu, 24 Dec 2009 18:29:49 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=284</guid>
		<description><![CDATA[ஒரு சில பெயர்களை, கவிதைகளை எடுத்துச் சொல்ல ரொம்பக் கூச்சமாக இருக்கிறது. கால ஓட்டத்தில், இந்தப் பெயர்களையும், கவிதைகளையும் அடித்துத் துவைத்து, அதனை ஒருவித இழிவுநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. மகாத்மா என்றோ, காந்தி என்றோ எங்காவது எழுதினால், எடுத்துக்காட்டு சொன்னால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் அதைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் அதை நல்லவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ]]></description>
			<content:encoded><![CDATA[<p>கடந்த சில நாள்களாக பார்க்கும் சில விஷயங்கள், செய்திகள் ஆகியவை கலவையான உணர்வையே அளிக்கின்றன. சில வருத்தமளிக்கின்றன, ஒரு சில மகிழ்ச்சி அளிக்கின்றன, கொஞ்சம் ஆச்சரியமும் அளிக்கின்றன. ஒவ்வொன்றாக பின்னே:</p>
<p>1. மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருக்கும் கசாப்பின் விசாரணையைத் தொடர்ந்து படிப்பவர்கள், ஆச்சரியப்படுவது உறுதி. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, தவறான செய்திகளைச் சொல்வது, மிரட்டலுக்கு அடிபணிவது என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே, நீதிமன்றத்தை எவ்வளவு தூரம் கேலிக்குரிய இடமாக மாற்ற முடியுமோ அவ்வளவையும் கசாப் செய்துகொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் பேசினால், வீணான தாமதம், அலைக்கழிப்பு, தேவயற்ற எரிச்சல் எல்லாம் தோன்றவே செய்யும். இதையெல்லாம் வெளியே இருந்து பார்க்கும் நம்மைப் போன்ற குடிமகன்களுக்கு, ஒரே ஒரு கேள்விதான் எழும். நமது நீதிமன்றங்கள் இவ்வளவு கேலிசெய்யப்பட வேண்டுமா?</p>
<p>2. ஒரு சில பெயர்களை, கவிதைகளை எடுத்துச் சொல்ல ரொம்பக் கூச்சமாக இருக்கிறது. கால ஓட்டத்தில், இந்தப் பெயர்களையும், கவிதைகளையும் அடித்துத் துவைத்து, அதனை ஒருவித இழிவுநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. மகாத்மா என்றோ, காந்தி என்றோ எங்காவது எழுதினால், எடுத்துக்காட்டு சொன்னால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் அதைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் அதை நல்லவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சொற்கள், அதைப் படிக்கும், கேட்கும் மக்கள் மனத்தில் நல்ல எண்ணங்களைவிட, கூடவே ஒருவித கேலிக்குரிய தோற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான் அதை எவ்வளவுதூரம் சிறப்பான பொருளில் எடுத்துப் பயன்படுத்தினாலும், ஏற்கெனவே அச்சொல் பெற்றிருக்கும் சாயல்களின் அதீத கனம் அதை அழுத்துகிறது. இதேபோல், திருக்குறளையும் எங்கும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.</p>
<p>3. என்னிடம் இரண்டு சட்டைகள் இருக்கின்றன. ஒன்று, என் நண்பர் ஜெ. முத்துகுமார் தந்தது. அவரது அலுவலகத்துக்குச் சென்றபோது, நினைவுப் பரிசாக டி.ஷர்டைத் தந்தார். இன்னொன்று என் மனைவி வாங்கித் தந்தது. இரண்டுக்கும் ஒரு தனி விசேஷம் உண்டு. அந்த டி.ஷர்டை எங்கே நான் போட்டுக்கொண்டு போனாலும், நிச்சயம் மழை பிடித்துக்கொள்ளும். கனமழை. சட்டையை நனைக்காமல் நான் வீடு வந்ததில்லை. நாள் முழுக்க நல்ல வெயில் அடிக்கும். மழைக்கான சுவடே இருக்காது. வீடு திரும்பும்போது, லேசாக மழை ஆரம்பிக்கும். என் தலைமேல் மட்டும்தான் கொட்டுகிறதோ என்று கூட நினைத்துக்கொள்வேன். மே, ஜூன் போன்ற வெயில் காலங்களில் இந்தச் சட்டைகளைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!</p>
<p>4. சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி, ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சென்னையில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. உயிர்மை, திரிசக்தி பதிப்பக வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டார்கள். அபரிமிதமான மரியாதை, கெளரவம். புகழ் மொழிகள் அரங்கம் எங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. எழுத்தாளர்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் உவப்பளிக்கும். பதிப்பாளர்களும் மகிழ்ச்சியடைந்தால், நான் இன்னும் மகிழ்வேன்.</p>
<p>5. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவரோடு சில மணி நேரங்கள் செலவிடும் வாய்ப்பைப் பெற்றேன். புகழ் வளையம் தன்னை இறுக்கிவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். தன் வேலைகளுக்குக் கிடைத்திருக்கும் புதிய புகழை அவர் ஒரு இடைஞ்சலாகக் கருதுவதாகவே தோன்றியது. ‘நான் தத்துவ முத்துகளை எல்லாம் உதிர்க்க முடியாது’ என்று கவனமாகப் பேசினார். முக்கியமாக, அவருக்கு இப்போது வழங்கப்படும் ‘இந்தியன், தமிழன்’ போன்ற அடையாளங்களை அவர் திணிப்புகளாக கருதுகிறார். அடையாள வளையங்களிலும் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற கவனம் அவரிடம் இருக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/24/5points/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னையில் இரண்டு புதிய விஷயங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/24/chennai2items/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/24/chennai2items/#comments</comments>
		<pubDate>Thu, 24 Dec 2009 18:27:46 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[மப்ளர்]]></category>
		<category><![CDATA[யுனினார்]]></category>
		<category><![CDATA[ஹெட்போன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=282</guid>
		<description><![CDATA[சிக்னல் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சிக்னல் விளக்குக்குக் கீழே யுனினாரின் அழகான நீலமலர் லோகோவை ஒளிர வைத்துவிட்டார்கள். எவ்வளவு புத்திசாலித்தனம்! மக்களின் பார்வையில் மிக அதிகமாக படக்கூடிய ஓரிடத்தை இத்தனை நாள் யாரும் கவனிக்கவில்லையே என்று தோன்றியது. யுனினார் சேவை எப்படி இருக்கிறதோ எனக்குத் தெரியாது, ஆனால், அதன் விளம்பர உத்திகள் ரசனையுடன் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.]]></description>
			<content:encoded><![CDATA[<p>1. யுனினார். புதிய மொபைல் சேவை நிறுவனம் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. வழக்கமாக எல்லோரும் செய்யும் விளம்பர முறைகளை யுனினார் பின்பற்றியிருக்கிறது. கூடவே ஒரு வித்தியாசமான அம்சத்தையும் கண்டுபிடித்திருக்கிறது. இத்தனை நாள் அது தோன்றாமல் இருந்தது. எல்லோரும் நிச்சயம் சிக்னல்களில் நின்றே தீரவேண்டும். சிக்னல் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சிக்னல் விளக்குக்குக் கீழே யுனினாரின் அழகான நீலமலர் லோகோவை ஒளிர வைத்துவிட்டார்கள். எவ்வளவு புத்திசாலித்தனம்! மக்களின் பார்வையில் மிக அதிகமாக படக்கூடிய ஓரிடத்தை இத்தனை நாள் யாரும் கவனிக்கவில்லையே என்று தோன்றியது. யுனினார் சேவை எப்படி இருக்கிறதோ எனக்குத் தெரியாது, ஆனால், அதன் விளம்பர உத்திகள் ரசனையுடன் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.</p>
<p>2. இன்னொரு கண்டுபிடிப்பு, புதிய வகை மப்ளர். பனிக்காலத்தில் பெரும்பாலோர் கழுத்தையும் காதையும் மறைக்கும்படி மப்ளரைச் சுற்றிக்கொள்வார்கள். இந்த மார்கழி மாதம் புதிய மப்ளர் சென்னை எங்கும் தென்படுகிறது. வாக்மேனின் ஹெட்போன்களைப் போல், இரண்டு பக்கமும் காதுகளை மட்டும் மறைக்கும் கம்பளி. அதை அப்படியே எடுத்து காதுகளுக்கு மட்டும் மாட்டிக்கொண்டு பலர் காலை வாக்கிங் வருகிறார்கள். குளிருக்கு இதமாக இருப்பதாகத் தகவல். ரூ. 15தான் விலை. யாருடைய கண்டுபிடிப்போ தெரியவில்லை. நல்ல முயற்சி.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/24/chennai2items/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மிகை தேவையா?</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/24/obituarycolumn/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/24/obituarycolumn/#comments</comments>
		<pubDate>Thu, 24 Dec 2009 18:25:57 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[கொண்டாட்டம்]]></category>
		<category><![CDATA[தி ஹிந்து]]></category>
		<category><![CDATA[பானுமதி]]></category>
		<category><![CDATA[பாரதியார்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=280</guid>
		<description><![CDATA[ஒரு வகையில், நம் பண்பாட்டில், பிறப்பும் இறப்பும் கொண்டாட்டமானது போலிருக்கிறது. எல்லாவற்றையும் மிகையாக வெளிப்படுத்துவது நமது இயல்பிலேயே ஊறிப் போயிருக்கிறது. 
தனிமனிதர்களிடையே தொடங்கி சமூகம் மொத்தமும் இது பரவியிருக்கிறது. இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. ஆனால், மூத்தோரின் நினைவைக் கொண்டாடியே தீரவேண்டும் வலிந்து ஒன்றைத் திணிப்பது, எவ்வளவு தூரம் சரியென்றுதான் தெரியவில்லை.]]></description>
			<content:encoded><![CDATA[<p>தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவரும் நீத்தார் நினைவு விளம்பரங்களைப் பார்ப்பது என் தினசரி பழக்கங்களில் ஒன்று. புகைப்படங்களோடு வரும் விளம்பரங்கள் ஓரிடத்திலும், ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் டெத் என்றொரு மூலையும் இருக்கிறது. இரண்டுமே என்னைக் கலவரப்படுத்தும் இடங்கள். அதே சமயம் பார்க்காமல் இருந்ததும் இல்லை. பல சமயங்களில் எனக்குத் தெரிந்தவர், அறிந்தவர்களின் புகைப்படங்கள் அங்கே வந்ததுண்டு.</p>
<p>விதவிதமான மரணங்கள், விதவிதமான வருத்தங்கள், விதவிதமான நினைவு கூரல்கள். கடந்த சில வாரங்களாக, மதார்ஷா கடையின் உரிமையாளர் நினைவைப் போற்றும் விளம்பரங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தொடர்ந்து பார்த்து வருவதனாலோ என்னவோ, பல முகங்கள் எனக்கு நினைவில் அப்படியே பதிந்து இருக்கின்றன.</p>
<p>ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். பெரும்பாலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எந்த மனநிலையையும் குறிக்காது. ஒருவிதமான தட்டையான முகம் அது. ஒருவரை அடையாளப்படுத்துவதே அதன் நோக்கமே. ஒரு சில நல்ல புகைப்படங்கள் வரும். ஒரு இன்ஜியரிங் நிறுவனத்தின் முதலாளி, தலைகவிழ்ந்து சிந்தனையோடு நடப்பார். இன்னொரு பெண்மணி பளிச்சென்று சிரிப்பார். நாஞ்சில் மனோகரன் புகைப்படம் உற்சாகத்தோடு இருக்கும்.</p>
<p>இதெல்லாம் அவர்களுடைய மரணத்துக்கு முன்பு நன்கு வாழ்ந்தபோது எடுக்கப்பட்டவை. வருங்காலத்தில் தம் குடும்பத்தார், புகைப்படங்களை இப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? தெரியவில்லை.</p>
<p>சென்ற வாரம் நானும் இதுபோன்ற ஒரு மரணச் செய்தியைக் கொடுக்க இரவு பத்தேகால் மணிக்கு தி ஹிந்துவுக்கு ஓடினேன். பதினோரு மணிவரை விளம்பரங்கள் பெறப்படும் என்று பத்திரிகையிலேயே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. என் அவசரத்தை விட, அங்கே இருந்த அலுவலர்களின் அவசரம் இன்னும் கலவரப்படுத்துவதாக இருந்தது. உடனே யாருக்கோ போன் செய்து, இன்னொரு விளம்பரம் வருகிறது, கொஞ்சம் இடம் ஒதுக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார் அங்கிருந்த ஊழியர்.</p>
<p>ஏற்கெனவே செய்தியை எழுதி எடுத்துச் சென்றதால், விரைவாக அவர்கள் கொடுத்த படிவத்தில், ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் கொடுத்தேன். ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் வரும் விளம்பரத்துக்கு, ஒரு வரிக்கு இருநூறு ரூபாய். என் பின்னாலே இருவர் வந்து, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுத்து விளம்பரம் எழுதித் தந்தனர். அது இன்னும் அவசரமாக உள்ளே லே அவுட் செய்யப்படும் இடத்துக்கு ஓடிப்போனது. அவர்களுக்கு ரூ.15,000 வரை ஆனது.</p>
<p>விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்ப, மெளண்ட் ரோடில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாருக்கு இந்தச் செய்தி போய்ச் சேரும்? நான் கொடுத்தது என் உறவினர் ஒருவரின் மரணத்துக்கு. பெரும்பாலோருக்கு ஏற்கெனவே தொலைபேசியிலும் செல்பேசியிலும் விவரத்தைத் தெரிவித்தாயிற்று. இதையும் மீறி விடுபட்டவர்களுக்கு இந்தச் செய்தி போய்ச் சேருவதால் எந்த ஒரு புதிய பலனும் கிடைக்கப்போவதில்லை.</p>
<p>ஆனால், இருபத்தைந்தாவது ஆண்டு, முப்பதாவது ஆண்டு நினைவு நாள் விளம்பரங்கள் வருகின்றன. இரண்டு தலைமுறையே மாறிப்போயிருக்கும். மரணம் அதீத துயரமானது. அது தனிப்பட்ட விஷயமல்லவோ? வலியும் வேதனையையும் உறவினர்களை இழந்தவர்களுக்குத்தான் தெரியுமே அன்றி, பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதால், என்ன புதிதாக பெறப்போகிறார்கள்? அல்லது எந்த வகையில் வலி குறையப் போகிறது?<br />
யாருக்கு இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்?</p>
<p>நேற்று, பழம்பெரும் நடிகை பானுமதியின் நினைவு நாள். போட்டோவோடு விளம்பரம். நான் என்ன பெற்றேன்? அவரது நடிப்பை நான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். அது போதுமே. அதேபோல், பாரதியாரின் பிறந்த நாள், மறைந்த நாள் எல்லாவற்றையும் விழா போல் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகளில் அவரது நினைவைப் போற்றும், பங்களிப்புகளை மெச்சும் கட்டுரைகள், குறிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் எல்லாமும் உயர்வுநவிற்சிதான்.</p>
<p>ஒரு வகையில், நம் பண்பாட்டில், பிறப்பும் இறப்பும் கொண்டாட்டமானது போலிருக்கிறது. எல்லாவற்றையும் மிகையாக வெளிப்படுத்துவது நமது இயல்பிலேயே ஊறிப் போயிருக்கிறது.<br />
தனிமனிதர்களிடையே தொடங்கி சமூகம் மொத்தமும் இது பரவியிருக்கிறது. இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. ஆனால், மூத்தோரின் நினைவைக் கொண்டாடியே தீரவேண்டும் வலிந்து ஒன்றைத் திணிப்பது, எவ்வளவு தூரம் சரியென்றுதான் தெரியவில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/24/obituarycolumn/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>பதில்களின் சொரூபம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/17/whydoweneedgod/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/17/whydoweneedgod/#comments</comments>
		<pubDate>Thu, 17 Dec 2009 03:57:55 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[கடவுள்]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=269</guid>
		<description><![CDATA[உணர்வு மட்டத்தில் கடவுளை replace செய்ய ஆளே இல்லை. ஏனெனில், அவர் உங்கள் விருப்பப்படி உருவாகுபவர். உங்கள் வழிகாட்டி, முகம் காட்டி, நெறி காட்டி. மனிதனின் மனத்தில் கேள்விகள் இருக்கும்வரை, கடவுள் இருந்துகொண்டுதான் இருப்பார். ஏனெனில் பதில்களின் சொரூபம் அவர்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>“நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர்.</p>
<p>“கேளுங்கள்”</p>
<p>“நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையுடைய பாப்புலேஷன் என்ன?”</p>
<p>மனம் கணக்குப் போடத் தொடங்கியது. 2009 கணக்குகள்படி, சென்னையில் மட்டும் 43 லட்சம் பேர் வாழ்வதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் சேர்த்து 75 லட்சம் வரை வாழலாம் என்றும் ஆய்வாளார்கள் சொல்லுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சென்னையை நோக்கி வந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எங்கோ பார்த்த பழைய சென்சஸ் தகவல் ஞாபகம் வந்தது.</p>
<p>“கிட்டத்தட்ட ஐந்து லட்சம்.”</p>
<p>“அப்படியானால் பத்து மடங்கு பாப்புலேஷன் வளர்ந்திருக்கிறது இல்லையா?”</p>
<p>“ஆமாம்.”</p>
<p>“அப்படியானால், கபாலீஸ்வரர் கோவிலிலும் பார்த்தசாரதி கோவிலிலும் கூட்டம் அலைமோத வேண்டாமா? இடமே இருக்கக்கூடாது இல்லையா? இன்னும் கூட்டம் சாதாரணமாகத்தானே இருக்கிறது. அப்படியானால், பக்தி வளரவில்லை என்றுதானே அர்த்தம்?”</p>
<p>ஒரு நிமிடம் தாமதித்தேன். நண்பரை புண்படுத்த விரும்பவில்லை.</p>
<p>“உடலே கோவிலாக, உள்ளமே இறைவனாக வழிபடக் கற்றுக்கொண்டுவிட்டார்கள் இளைஞர்கள்” என்றேன்.</p>
<p>இதுபோன்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படியெல்லாம் கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ நிறுவிவிட முடியும் என்று தோன்றவில்லை. இதெல்லாம் சும்மா புத்திசாலித்தனம்.</p>
<p>ஆனால், மிக ஆழமாக நம் இந்திய சமூகத்துக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு ஊதுவத்திகளை கொளுத்திவைத்துவிட்டுத்தான் எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் துணி தைப்பவர் தன் தொழிலைத் தொடங்குகிறார். துணிகளுக்கு இஸ்திரி போடுபவர், தன் சின்ன பெட்டிக் கடையின் ஓரத்தில் காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டே சலவைப்பெட்டியைத் தொடுகிறார். அந்தோணியாருக்கும் மேரி மாதாவுக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டே, காய்கறிக் கடைக்காரர், விற்பனையை ஆரம்பிக்கிறார்.</p>
<p>பல ஐடி நிறுவனங்களில் நண்பர்களின் கியூபிக்கிள், கேபின்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஓரமாக பிள்ளையார்பட்டி பிள்ளையார் இருப்பார். முருகன் இருப்பார். வெளிநாட்டுக்காரன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டினாலும் முதலில் அந்தணரைப் பிடித்து, கணபதி ஹோமம் செய்கிறார். இதையெல்லாம் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, கடவுள் பல அடுக்குகளில் நிறைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.</p>
<p>முதலில், நாகரிக சமூகத்தில், அடுத்தவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உனக்கு உன் கடவுளிடம் நம்பிக்கை இருக்கிறதா? அப்படியானால், நான் என் கருத்தை வலியுறுத்த விரும்பவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ, பணியாற்ற, இதுபோன்ற நம்பிக்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று ஒரு சாரார் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதை அப்ஜெக்டிவ் அப்ரோச் என்று சொல்லலாம்.</p>
<p>சப்ஜெக்டிவ்வாக, கடவுள் இரண்டு மூன்று தளங்களில் செயல்படுகிறார். எல்லோருக்கும் அநித்தியம் பயங்கரமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. இந்தத் த்ரில்தான் வாழ்க்கையின் சுவாரசியம். ஆனால், அதைத் த்ரில்ல்லாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. நாம் அதை ஏதேனும் ஒரு வடிவத்துக்குள், நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க, புரிந்துகொள்ளத்தக்க சூத்திரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனாலும் முடிவதில்லை. Uncertainity அப்படியே கட்டு குலையாமல் இருக்கிறது.</p>
<p>பெரும்பாலானவர்களால் தங்களை நம்ப முடியவில்லை. எப்போதும் ஒரு பற்றுக்கோடு, ஒரு ரெபரென்ஸ் தேவையாக இருக்கிறது. தங்களை யாரேனும் வழிநடத்த மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். நாம் தான் அடியெடுத்து வைத்து எதிர்காலம் என்ற கும்மிருட்டுக்குள் வழிகண்டு முன்னேற வேண்டும் என்னும்போது இயல்பான பயம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.</p>
<p>பலர் இந்த uncertainityஐ பலவிதங்களை தாண்டிப் போக முயற்சிக்கிறார்கள். முதலில் வீராப்பு. வாழ்க்கையில் எங்கோ ஓரிடத்தில் அடிபடும்போது (அல்லது தாம் விரும்பும்படி ஒரு விஷயம் நடக்காமல், மனம் நோகும்போது), லேசான தயக்கம் ஆரம்பிக்கும். அடுத்து பிடிவாதம். கடவுள் இல்லை என்பதில் பிடிவாதம். உடல் தளரும்போது, மெல்ல அதுவும் தளர ஆரம்பிக்கும்.</p>
<p>ஒவ்வொரு நாளும், தாம் செய்யும் செயல்கள் பற்றிய விமர்சனங்கள் தாக்கிக்கொண்டே இருக்கும். சரியா தவறா என்ற கேள்வி துளைத்துக்கொண்டே இருக்கும். சரி தவறு பற்றி அடிப்படையாக நமக்கு இருக்கும் விதிகள், இந்திய மரபின் தொடர்ச்சியாக வருவது. பாவம் புண்ணியம், நல்வினை தீவினை, முற்பகல் பிற்பகல் எல்லாம் ஆழ வேரூன்றிய கருத்துகள். எதற்கு பயப்படுகிறதோ இல்லையோ, இந்திய மனம் இத்தகைய விமர்சனங்களுக்கு நிச்சயம் பயப்படும். நம்முடைய consciousஐ இதுபோன்ற அளவீடுகளே கட்டமைத்து இருக்கின்றன.</p>
<p>மேலும் தான் செய்யும் செயல்களுக்கு ஒரு affirmation தேவையாக இருக்கிறது. சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்று பக்கத்தில் இருந்து யாராவது சொல்லவேண்டும். பக்கத்தில் இருப்பவரை எவ்வளவு தூரம் நம்ப முடியும் என்பது இன்னொரு கேள்வி. அவனுடைய நோக்கம் என்னவாகவும் இருக்கலாம். அதனால், அவனை நம்ப முடியாது. என்ன செய்யலாம்?</p>
<p>இன்னொரு பெரிய பிரச்னை, தோல்வி. நினைத்தது நடக்காமல் போவது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போவது. நம்பிக்கை தகர்ந்து போவது. எப்படி இதைப் புரிந்துகொள்ள வேண்டும்? எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ன பதில் என்னை மீண்டும் உயிர்ப்பிக்கும்? எந்தக் காரணம் என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும்? என்ன சமாதானம் என்னை மீட்டெடுக்கும்? தெரியவில்லை.</p>
<p>இதுபோன்ற இடங்களில்தான் கடவுள் மிகவும் தேவையாக இருக்கிறார். நாம் விரும்பும் விதங்களில் எல்லாம் நம்மோடு இருப்பவர் அவர். நாம் வைக்கும் கோரிக்கைகள், எடுத்துச் செல்லும் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக அவர் இருக்கிறார். சாய்ந்து அழ ஒரு தோளாக அவர் இருக்கிறார். துன்பங்களில் துணை நிற்கிறார். தேவைப்படும்போது ஆலோசனை வழங்குகிறார். தப்பைச் சுட்டிக் காட்டுகிறார். உங்களுடைய நலனை மட்டுமே நாடுபவராக அவர் இருக்கிறார். உங்களுடைய ஆல்டர் ஈகோவாக கடவுள் நின்றுகொண்டு இருக்கிறார். அது போதாதா?</p>
<p>உணர்வு மட்டத்தில் கடவுளை replace செய்ய ஆளே இல்லை. ஏனெனில், அவர் உங்கள் விருப்பப்படி உருவாகுபவர். உங்கள் வழிகாட்டி, முகம் காட்டி, நெறி காட்டி. மனிதனின் மனத்தில் கேள்விகள் இருக்கும்வரை, கடவுள் இருந்துகொண்டுதான் இருப்பார். ஏனெனில் பதில்களின் சொரூபம் அவர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/17/whydoweneedgod/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மொட்டை மாடி இரவுகள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/09/terrace/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/09/terrace/#comments</comments>
		<pubDate>Wed, 09 Dec 2009 08:07:46 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[ஊர்வம்பு]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[செளகார்பேட்டை]]></category>
		<category><![CDATA[மொட்டை மாடி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=265</guid>
		<description><![CDATA[வெயில் காலங்களில் மாடியை படுக்க உகந்த இடமாக மாற்றுவது ஒரு கலை. மாலை மூன்று நான்கு மணியில் இருந்தே, படுக்கும் இடங்களில் தண்ணீரைக் கொட்ட வேண்டும். கொட்டிய ஒருசில நிமிடங்களிலேயே தண்ணீர் ஆவியாகிப் போய்விடும். தரையில் நிற்க முடியாது. வெப்பம் கால்களில் தெரியும். இது முதல் ரவுண்டு. ஐந்து மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைக் கொட்ட வேண்டும். ]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான மொட்டை மாடிகள் கொண்ட வீடுகள். ஒவ்வொரு வீடும் அடுத்தொன்றோடு ஒட்டிக்கொண்டு இருக்கும். ஏதேனும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறிவிட்டால், அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மொட்டை மாடிகளில் தாண்டிப்போய்க்கொண்டே இருக்கலாம்.</p>
<p>மழையும் பனியும் இல்லாத பெரும்பாலான இரவுகளில் மொட்டைமாடியில்தான் படுக்கை. கூட்டுக் குடித்தன வாழ்க்கையில், வீட்டின் அறைகளுக்குள் படுக்க முடியாது. என்னதான் மின்விசிறி ஓடினாலும் புழுங்கித் தள்ளிவிடும். ஒரு கட்டத்தில் மின்விசிறி வெப்பத்தை அப்படியே அள்ளித் தெளிக்கும். தாங்கவே முடியாது. மொட்டை மாடியில் பெரிதாக காற்று அடித்துவிடாது. ஆனால், ஒருவித குளிர்ச்சி இருக்கும். காலை அகட்டி அண்ணாந்து பார்த்துப் படுக்க மொட்டை மாடியைப் போன்ற இடம் வேறொன்று இல்லை.</p>
<p>வெயில் காலங்களில் மாடியை படுக்க உகந்த இடமாக மாற்றுவது ஒரு கலை. மாலை மூன்று நான்கு மணியில் இருந்தே, படுக்கும் இடங்களில் தண்ணீரைக் கொட்ட வேண்டும். கொட்டிய ஒருசில நிமிடங்களிலேயே தண்ணீர் ஆவியாகிப் போய்விடும். தரையில் நிற்க முடியாது. வெப்பம் கால்களில் தெரியும். இது முதல் ரவுண்டு. ஐந்து மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைக் கொட்ட வேண்டும். இப்போது தண்ணீர் அவ்வளவு சீக்கிரத்தில் ஆவியாகிவிடாது. ஆனால், சூடு இன்னும் இருக்கும். மீண்டும் ஒரு ஏழு, ஏழரை மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ராத்திரி பத்து மணி வாக்கில் பாயை விரித்துப் படுக்க போகும்போது, கொஞ்சம் இதமாக இருக்கும். பல இரவுகளில் கையில் விசிறியோடு படுத்துகொள்ள வேண்டும். விசிற விசிற மெல்லத் தூக்கம் கண்ணைச் சுழட்டும்.</p>
<p>சின்ன வயதில் பெற்றோரோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்ட ஞாபகம் உண்டு. ஒரு வயதுக்கு மேல், பெற்றோர் சுவாரசியம் போய்விடும். இதுதான் சாக்கு என்று ஒரே ஆலோசனை மழை பொழிந்துவிடுவார்கள். அப்பாக்கள் பிள்ளைகளைக் குறைசொல்லும், கடிந்துகொள்ளும் இடமாகவும் மொட்டை மாடி மாறிவிடும். தாங்க முடியாது. நண்பர்கள் முக்கியமாகிவிடுவார்கள். கூட்டுக் குடித்தனத்தில் நண்பர்களுக்கு பஞ்சமே கிடையாது. செட் சேர்ந்துகொண்டு இரவெல்லாம் கதை பேச, நண்பர்கள்தான் சரியானவர்கள்.</p>
<p>சினிமா, படிப்பு, ஊர்க்கதை, வம்பு என்று தொடரும் கதைகளுக்கு அளவே இல்லை. எவ்வளவு பேசினாலும் இன்னும் இன்னும் என்று விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அக்கம்பக்கத்து வீட்டு பையன்களும் சேர்ந்துகொண்டால், ஏதேனும் ஒரு மாடியில் கூடுவது இன்னும் சுவாரசியம் மிகுந்தது. பல வீட்டு பையன்கள் இப்படித்தான் நண்பர்கள் ஆவார்கள். விடுமுறைக் காலங்களில் வரும் பையன்களும் இதில் சேர்ந்துகொள்வார்கள். இதில் வயது வித்தியாசம் பெரிதாகத் தெரியாது. ரொம்ப சின்ன பையன் என்று யாரையும் ஒதுக்கவும் மாட்டார்கள். காதல் கதைகள் தான் ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.</p>
<p>அதுவும் பெரிய பையன்கள் பேசும் காதல் அனுபவங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. ஈர்ப்பு மிகுந்தவை. தூக்கமே வராது. பதினோரு மணி குல்பி ஐஸ் வண்டிக்காரன் போவான். அப்புறம் பனிரெண்டு மணி குல்பி ஐஸும் போகும். பக்கத்தில் இருந்த கிருஷ்ணா தியேட்டர், செலக்ட் தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு செல்பவர்கள், சத்தமாகப் பேசிகொண்டு போவார்கள். வழக்கம்போல் பெரும்பாலான காதல்கள் துக்கத்தில் போய் முடியும். தோல்வியில் போய் முடியும். அல்லது தோல்வி மாதிரியான ஏதோ ஒரு முட்டுக்கட்டையில் போய் முடியும். கைக்கிளை கதைகள் இன்னொரு தனி ரகம். தனி சுவை. எதுவுமே முடிவுறாது. ஒரு காதல் முடிந்து இன்னொரு காதலுக்குப் பையன்கள் தயாராவார்கள். அதுவும் முறிந்துபோனால், அடுத்தொரு காதல். ஒரு காதல் முறிந்துபோக, காரணமா இல்லை? புரிந்தும் புரியாத வயதில், பயமே அதிகமாக இருக்கும்.</p>
<p>இன்னொரு பெரிய விஷயம், படிப்பு, வேலை. யாரையும் பயங்கர படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது. எல்லோரும் ஆவரேஜ் மாணவர்கள். குடும்பப் பின்னணிகளும் எளிமையானவை. செளகார்பேட்டை முழுவதும் ஒண்டுக்குடுத்தனவாசிகள் நிறைந்த இடம். பெரும்பாலும் அப்பாக்களும் அம்மாக்களும் அரசு உத்தியோகம், டீச்சர் உத்யோகம், ஏதேனும் தனியார் நிறுவனங்களில் உத்யோகம் என்று மாதச் சம்பளக்காரர்களாக இருப்பார்கள். பல வீட்டு வாசல்களில் பால்காரன், அரிசிகாரன், நெய்காரன் கணக்கெழுதி வைத்துவிட்டுப் போவான். மாதமானால், முதல் வாரத்தில் ஒவ்வொருவரும் வந்து நின்றுவிடுவார்கள். பல குடும்பங்கள், வரவுக்கும் செலவுக்கும் ஈடுசெய்ய முடியாமல் திண்டாடிப் போய்விடும்.</p>
<p>நாங்கள் இருந்த போர்ஷனுக்கு அப்போது 90 ரூபாய் வாடகை. அதை வீட்டுக்காரம்மாள், ரூ.125 ஆக்கியபோது, எங்களால் அதைக் கட்ட முடியவில்லை. வேறு வீடு பார்த்துக்கொள்ள ஆயத்தமாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலைதான் பெரும்பாலோருக்கு. இதிலிருந்தெல்லாம் மீள, படிப்பும் வேலையும் தான் ஒரே வழி. ஆனால், என்ன சுட்டுப்போட்டாலும் 70 சதவிகிதத்துக்கு மேல் மார்க் வராது. பெரும்பாலான பையன்களுக்கு இதுதான் பிரச்னை. ஒவ்வொரு முறையும் அப்பாக்கள் திட்டித் தீர்த்துவிடுவார்கள். எதிர்காலம் என்ற இருட்டை அவ்வப்போது இன்னும் பூதாகாரமாக்கிக் காட்டுவார்கள். வளர வளர இன்னும் பயம் அதிகமாகும்.</p>
<p>வேலையில்லாத அண்ணாக்கள் ஒன்றிரண்டு பேர்கள் இருப்பார்கள். அவர்களும் இரவில் மொட்டை மாடியில்தான் படுத்துக்கொள்வார்கள். ஒரு அண்ணா அற்புதமாக வண்ண ஓவியம் வரைவார். பல மத்தியானங்களில் அவரோடு நான் பொழுதைக் கழித்திருக்கிறேன். அவருக்கு வேலையில்லை, அதனால்தான் இதெல்லாம் செய்துகொண்டிருந்தார் இப்போது தோன்றுகிறது. அப்போது ஒன்றும் தெரியாது. ஆனால், அண்ணாவின் வீட்டில் எப்போதும் ஒருவித முரட்டுத்தனம் இருக்கும். அவருடைய அம்மா, என்னை எப்போதும் ஒருவித சிடுசிடுப்புடனேயே எதிர்கொள்வார்.</p>
<p>இன்னொரு அண்ணா, பாடி பில்டர். மொட்டை மாடியில் எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டே இருப்பார். உடம்பு விண்ணென்று இருக்கும். எங்களுடைய காற்றாடி சண்டைகளுக்கு எல்லாம் அவர்தான் மத்தியஸ்தம். நீதிபதி. இரவில் அவரும் மொட்டை மாடியில் படுத்துக்கொள்ள வருவார். பேச்சு மீண்டும் மீண்டும் வேலையைச் சுற்றிச் சுற்றியே வரும். வேலை கிடைப்பது அவ்வளவு கஷ்டம் என்பது மனத்தில் ஆழப் பதிந்தது அப்போதுதான். அதைவிட, வேலை கிடைக்காததன் வேதனை, பெற்றோரின் ஏச்சு, மற்றவர்களின் ஏளனம் எல்லாம் இன்னும் வலி தரும். ஒரு கட்டத்தில் அண்ணாக்களும் அப்பாக்களை மாதிரியே ‘நிறைய படிடா, நிறைய மார்க் வாங்குடா’ என்று அட்வைஸ் மழையில் இறங்கிவிடுவார்கள்.</p>
<p>கண்ணை மூடும்போது, மனமெங்கும் துக்கமும் எரிச்சலும் மிஞ்சியிருக்கும். எச்சிலில் ஒருவித துவர்ப்பு. மற்றவர்களின் வலியும் வேதனையும் தாக்கியிருக்கும். ஏதோ நானே இதையெல்லாம் செய்துபார்த்து, தோற்றவன் போன்ற ரணம் ஏற்பட்டுவிடும். ஏதோ ஒரு கணத்தில் கனவும் கற்பனையும் கலந்து தூக்கம் இழுத்துக்கொண்டு போகும். கண்கள் தானாகவே மூடிக்கொள்ளும்.</p>
<p>திடீரென்று விடிகாலையில் விழிப்பு வரும். எல்லோரும் ஒவ்வொரு பக்கம் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். வானம் வெளிர்நீலத்தில். ஆங்காங்கே நட்சத்திரங்கள் தெளித்த வண்ணக் கோலம். தூரத்தில் ஏதேனும் ஒரு வாகனம் அவசரமாகப் போய்கொண்டு இருக்கும். வெண்மை பூத்த கொக்குகள் முக்கோண வடிவில் ராணுவ ஒழுங்கோடு பறந்து போகும். சாலை விளக்குகள் மொட்டை மாடி வரை பரவி லேசான வெளிச்சத்தை பரப்பியிருக்கும். ரொம்ப உயரத்தில் ஒரு விமானம் வீடு திரும்பும்.</p>
<p>நல்ல விழிப்பு நிலை. தூக்கம் முற்றிலும் போயிருக்கும். உடல் சோர்வு அற்று, பயங்கர உற்சாகமாக இருக்கும். எல்லாம் புதிதாகத் தெரியும். அன்றைய நாள் நல்லபடியாக விடியும் என்று உள்மனக் குரல் சொல்லும். அன்றைக்குச் செய்யவேண்டிவற்றை மனம் பட்டியலிடும். பாயை உதறி, பெட்ஷீட்டை மடித்து, தலையணையோடு கீழே இறங்கும்போது, ஏதேனும் ஒரு வீட்டு குக்கர் விசில் அடிக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் குழாயில் தண்ணீர் கொட்டி அடித்துப் பார்ப்பார்கள். புழுக்கம் வரவேற்கும். இறுக்கம் வரவேற்கும்.</p>
<p>மீண்டும் ஒரு நீண்ட நாள், வலி நிறைந்த நாள் காத்திருக்கும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/09/terrace/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு திருத்தம், ஒரு மகிழ்ச்சி</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/02/publishing02/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/02/publishing02/#comments</comments>
		<pubDate>Wed, 02 Dec 2009 06:49:38 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[அம்ருதா]]></category>
		<category><![CDATA[சிஜஜ]]></category>
		<category><![CDATA[திலகவதி]]></category>
		<category><![CDATA[பபாசி]]></category>
		<category><![CDATA[பிரபு திலக்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=257</guid>
		<description><![CDATA[தமிழ் பதிப்பகங்கள் தம் விற்பனை விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தொழில், வர்த்தக அமைப்புகளாக இருக்கும் பபாசி போன்றவை, தமிழக சிஐஐயின் பதிப்பு அங்கம் (இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்றவை, தமிழ்ப் பதிப்புலகின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் அவ்வப்போது ஆய்வுகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுவது உபயோகமாக இருக்கும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேசமுடன் 16 இதழில், சென்னைப் புத்தகக் கண்காட்சி, டிசம்பர் 28, 2009 முதல் ஜனவரி 8, 2010 நடைபெற இருக்கிறது என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்க. பல நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். சரியான தேதிகள்: டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010. பிற தகவல்கள் சரியானவை. (வலைத்தளத்தில் சென்ற வாரமே சரி செய்துவிட்டேன்).</p>
<p>அம்ருதா டிசம்பர் இதழில், நேசமுடன் மடல் இதழ்களில் வெளியான தமிழ்ப் பதிப்புலகம் &#8211; இன்றும் நாளையும், தமிழ்ப் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை? என்ற கட்டுரைகளை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். எடுத்து வெளியிட்ட அம்ருதா ஆசிரியர் பிரபு திலக், கெளரவ ஆசிரியர் திலகவதி ஆகியோருக்கு என் நன்றி.</p>
<p>இந்தக் கட்டுரைகள் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டனவோ அது நிறைவேறிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி. பல பதிப்பாள, விற்பனையாள நண்பர்கள் என்னுடன் இக்கட்டுரை பற்றிப் பேசினர். ‘அருணோதயத்தை ரூ.1 கோடி அடுக்குல வெச்சது தப்பு சார், அவங்க ரூ.5 கோடி வியாபாரம் செய்வாங்க’, ‘கண்ணதாசன் நீங்க சொல்றாமாதிரி ரூ.5 கோடி வியாபாரம் செய்வார்னு தோணலை சார்’, ‘மருதா பத்தி நீங்க எழுதியிருக்கறது சரி சார்’ என்றெல்லாம் என் குறைகளை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்கிறேன். என் தகவல்கள் தவறாக இருப்பதில் எனக்கு எந்த மனவிசனமும் கிடையாது. எந்தவிதமான பப்ளிஷ்டு, டாக்குமெண்டட் ஆதாரமும் இல்லாமல், தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தக விலைப்பட்டியல், பெஸ்ட் செல்லர், மார்க்கெட் இண்டலிஜென்ஸை மட்டும் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் அவை.</p>
<p>அதில் தவறு இருப்பது இயல்பானது. பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சரியான தகவல்களை முன்வந்து தரும்போது, அந்தப் பட்டியல் மேன்மேலும் மேம்படும். செப்பனிடப்படும். இன்னொரு நண்பர் சொன்னது இன்னும் சரியாகத் தோன்றியது, ‘ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியல் மாறலாம் சார். எல்லா வருஷமும் எல்லோரும் புது புத்தகங்கள் போடுவதில்லை, நிறைய விற்பனையும் ஆவதில்லை. பல்வேறு காரணங்களால், ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்’ என்றார் அவர். சரியான கருத்தாகத் தோன்றியது.</p>
<p>தமிழ் பதிப்பகங்கள் தம் விற்பனை விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தொழில், வர்த்தக அமைப்புகளாக இருக்கும் பபாசி போன்றவை, தமிழக சிஐஐயின் பதிப்பு அங்கம் (இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்றவை, தமிழ்ப் பதிப்புலகின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் அவ்வப்போது ஆய்வுகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுவது உபயோகமாக இருக்கும்.</p>
<p>ஒரு துறை வளரவேண்டுமென்றால், ஆர்வமும் திறமையும் எவ்வளவு தூரம் முக்கியமோ அவ்வளவு தூரம் முதலீடும் முக்கியம். இந்தியாவில் கடந்த ஓராண்டில் கூட, மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் துறையில் ஏராளமான அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதுபோன்ற பதிப்பு, பத்திரிகை, இன்னபிற மீடியா தொழில்களில் முதலீடு செய்யவென்றே, பல நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தமிழ்ப் பதிப்புலகின் மொத்த வளம், அதில் இருக்கும் முன்னேற்றங்கள் ஓரளவுக்குத் தெரியவருமானால், இந்தச் சந்தையிலும் வந்து முதலீடு செய்வார்கள். முதலீடு கிடைக்கும்போது, வளர்ச்சி பெருகும். உபதுறைகள் எல்லாம் வளரும். இத்தொழிலில் ஆர்வத்துடன் இளைஞர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p>
<p>நம் பதிப்புத் துறை குடத்திலிட்ட விளக்காக இல்லாமல், குன்றின் மேலிட்ட விளக்காக இருப்பது நல்லதல்லவா?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/02/publishing02/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>போராட்ட ஆயுதங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/#comments</comments>
		<pubDate>Wed, 18 Nov 2009 10:18:20 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[உண்ணாவிரதம்]]></category>
		<category><![CDATA[சாலை மறியல்]]></category>
		<category><![CDATA[தர்ணா]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=239</guid>
		<description><![CDATA[போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம் எல்லாம் நியாயமானவைதான். ‘உண்ணாவிரதம் இருந்து என்ன சாதிக்கப் போறீங்க?’ என்றேன். நான் அவருடைய கருத்தை ஆதரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுவிட்டார் போலும். அப்புறம் பேசவில்லை.</p>
<p>கடந்த சில மாதங்களாக, பல இடங்களில், ‘உண்ணாவிரத போராட்டத்தைப்’ பார்க்கிறேன். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், சாலைப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதைப் பார்க்கிறேன். பொதுவாக இதெல்லாம் ஒரு நாள் உண்ணாவிரதங்கள். காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துவிடும் உண்ணாவிரதங்கள் இவை. இதிலேயே கொஞ்சம் வித்தியாசங்களும் உண்டு. தொடர் உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்று கோரிக்கைகளின் தீவிரத்துக்கு ஏற்ப, உண்ணாவிரதங்களில் மாற்றம் ஏற்படும்.<br />
 தனிநபர் உண்ணாவிரதங்கள், கூட்டு உண்ணாவிரதங்கள் என்று காரணங்களுக்கு ஏற்ப, நபர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.<br />
இதேபோல், என் அப்பா வேலை செய்த காலத்தில், அவருடைய அலுவலக வாசலில், வாயில் கூட்டம், கோஷம் எழுப்பும் போராட்டம், தர்ணா என்றெல்லாம் செய்வார்கள். ஒருவர் மைக் முன்னே நின்றுகொண்டு தங்கள் கோரிக்கைகளைக் கோஷங்களாக எழுதிவைத்துக்கொண்டு வாசிக்க, கூட்டத்தினர் அதனை உரத்த குரலில் வலியுறுத்தவேண்டும்.</p>
<p>உள்ளிருப்பு போராட்டம் என்ற முறையையும் ஒரு முறை தெரிந்துகொண்டேன். பணியாளர்கள் ஆலைகளுக்குள், அலுவலகங்களுள் இருப்பார்கள். ஆனால், வேலை செய்ய மாட்டார்கள். இதேபோல், உற்பத்தியை மந்தப்படுத்துவது ஒரு போராட்டம். வேலையே நடக்காத மாதிரி இருக்கும். முக்கிய அதிகாரிகளை கெய்ரோ செய்வது இன்னொரு போராட்ட உத்தி. பேரணி நடத்துவது, அதன் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களிடம் போய், கோரிக்கை மனு கொடுப்பது என்பதெல்லாம் மிகவும் பழக்கமான போராட்ட உத்திகள்.</p>
<p>ஜப்பானில், ஏதோ ஒரு ஷு தயாரிப்பு நிறுவனத்தில், அவர்கள் செய்த போராட்டம் சுவாரசியமாக இருந்தது. இரண்டு காலணிகளைத் தயாரிப்பதற்கு பதில், ஒரு காலுக்கான காலணியை மட்டும் தயாரித்துக்கொண்டே இருந்தார்களாம்.</p>
<p>நம்ம ஊரில், ஒரு குழுவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, ‘உண்ணும்விரதப் போராட்டம்’ என்று எதிர்க்குழுவினர் நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சில சமயங்கள், போராட்டம் தீவிரம் அடைந்து, கோவையில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் நடந்தது போல், வன்முறையிலும் உயிரிழப்பிலும் போய்கூட முடியலாம். அல்லது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் அளவு, ஸ்டிரைக் போராட்டம் வெடிக்கலாம்.</p>
<p>எனக்குப் போராட்ட உத்திகள், முறைகள் மேல் எப்போதும் சந்தேகம் உண்டு. முதலில், தங்கள் கருத்துகளை, கோரிக்கைகளை நிறுவனத்திடமோ அரசாங்கத்திடமோ தெரிவித்திருப்பார்கள். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பாராமுகமாக இருக்கும்போது, அல்லது போதுமான கவனம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாதபோது, போராட்டங்கள் வெடிக்கின்றன. எந்தப் போராட்ட வடிவத்தை எடுத்துக்கொள்வது என்பது சூழ்நிலையைப் பொறுத்தும் கூட்டு மனநிலையைப் பொறுத்தும் மேற்கொள்ளப்படும் முடிவு என்று நினைக்கிறேன்.</p>
<p>பல தனியார் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. ஒரு கோரிக்கை, ஒரு மனு என்று வந்தவுடனே, அதைக் கவனித்து, உரியவர்களைக் கூப்பிட்டுப் பேசி, குறைகளைக் களைந்து அல்லது களைவதற்கான உறுதியைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்தி அனுப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். போராட்டம் என்ற வடிவத்துக்கு போவதற்கு முன்பே, மனுக்கள், நிர்வாகத்தினரின், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. அப்படி நடக்காத போதுதான், வேறு வேறு வகைப் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன.<br />
 ஸ்டிரைக் வரை போய்விட்டால், உற்பத்தியும் லாபமும் பாதிக்கப்படும் என்பதைத் தனி<br />
யார் நிறுவனங்கள் புரிந்துகொண்டு இருப்பதே இதற்குக் காரணம்.</p>
<p>போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.</p>
<p>எல்லா போராட்ட வடிவங்களும் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது. அதை எப்படிக் கையாளவேண்டும், அடக்க வேண்டும், வழிக்குக்கொண்டு வரவேண்டும், உறுதியிழக்கச் செய்யவேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முரட்டுத்தனம் தோன்றிவிட்டது. ‘அதிகபட்சம் என்னாகப் போகுது. சாகப் போறான். சாவட்டுமே’ என்ற முரட்டுத்தனம். இல்லை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் ஏற்றி, சிறைக்குள் தள்ளிவிடுவார்கள்.</p>
<p>மிரட்டல் ஒரு உபாயம். இன்னொரு உபாயம், போராட்டத்தைக் கலகலக்க வைக்க, உள்ளேயே குழுக்களை உருவாக்கி, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.</p>
<p>இன்றைக்கு ஒருவனோ ஒரு குழுவோ தாம் வலியுறுத்தும் கோரிக்கைக்காகத் தம்மை வருத்திக்கொள்கிறார்கள், அதற்காகச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் புத்திசாலித்தனமில்லாத செயலாகப் பார்க்கிறார்கள். போராட்டங்களைப் பற்றிய அனுதாபமோ, அரவணைப்போ, அனுசரணையோ யாருக்கும் கிடையாது. நீ தேவையில்லாமல் என் வழியில் குறுக்கிடுகிறாய், என் அலுவலக நேரத்தை வீணாக்குகிறாய், என்னைப் பணிசெய்யவிடாமல் தடுக்கிறாய் என்பது இன்றைய மனிதர்களின் மனநிலை.</p>
<p>உன் நிறுவனம், உன் அரசாங்கம் உனக்கு உரிய சலுகைகளை, வசதிகளைச் செய்யவில்லை என்றால், அது உனக்கும் உனது நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்னையே அன்றி, அதை எடுத்துக்கொண்டு எதற்குத் தெருவுக்கு வருகிறாய்? சாலையை மறிக்கிறாய்? பஸ்ஸை நிறுத்துகிறாய்? பஸ்ஸையையோ வேறு வாகங்களையோ கொளுத்துகிறாய்?</p>
<p>1991க்குப் பின், இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட பின்பு, வணிகக் கலாசாரம் இங்கே முற்றிலும் மாறிவிட்டது. வணிக உறவுகள் இங்கே மாறிவிட்டன. புரிதல்களும் மாறிவிட்டன. மனித மனங்களும் மாறிவிட்டன. இதில், போராட்டம் என்பது பிற்போக்குத்தனமானது, உற்பத்திக்கு எதிரானது, வளர்ச்சிக்கு முரணானது என்ற சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்டன. உற்பத்தித் துறையைவிட, இந்தியப் பொருளாதாரம், சேவைத் துறைகளை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டது. சேவையில், உடல் உழைப்பைவிட, ஞானம் முக்கியம். ஞானத்துக்கு ஏற்ப, இங்கே வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கிவிட்டன. அத்துறைகளில் இருப்பவர்கள், எல்லாவற்றையும் தமது சொந்த நோக்கில் இருந்தே மதிப்பீடு செய்கின்றனர். விளைவு, போராட்டங்கள் நியாயமற்றவையாக, நாகரிகமற்றவையாக, காட்டுமிராண்டித்தனமானவையாக, நாசூக்கற்றவையாகத் தோன்றுகின்றன.</p>
<p>இது ஒரு பிரச்னை. இன்னொரு பிரச்னை, போராட்ட வடிவங்கள் சார்ந்தே இருக்கிறது. நம்ம ஊரில் எல்லா போராட்ட வடிவங்களும் நீர்த்துப் போய்விட்டனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படையில், யாரும் யாரையும் எப்படியும் வலியுறுத்தக் கூடாது என்ற மனநிலை வந்துவிட்டது. மேலும் சேவை சார்ந்த துறைகளில், சங்கங்களோ, அமைப்புகளோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. உனக்குக் குறை இருந்தால், நீ நேரடியாக மனித வளத்துறையிடம் போய் பேசிக்கொள். வீணாக, சங்கத்திடம் போய் முறையிட்டு, மூன்றாம் நபர் அல்லது அமைப்புகளின் தலையீட்டைக் கொண்டு வராதே. நான் பதில் சொல்ல மாட்டேன்.</p>
<p>அமைப்பு ரீதியாக ஒன்றுபடுவதே குற்றமாகவும் நாகரிகமற்ற பழமைத்தனமாகவும் இப்போது பார்க்கப்படுகிறது. அமைப்பாக சேராத போது, கூட்டு வலியுறுத்தல் சாத்தியம் இல்லை. பொதுவான நியாயம் என்று எதுவும் இல்லை. உனக்கு ஒரு நியாயம் வழங்கப்படலாம், அதுவே உன் சக பணியாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நீ வலியுறுத்த முடியாது. உன் வேலை முடிந்ததா? நீ வெளியே போ. அடுத்தவனை நான் பார்த்துக்கொள்கிறேன். பேசிக்கொள்கிறேன்.</p>
<p>மனிதர்களை, நிர்வாகமும் அரசாங்கமும் பிளவுபடுத்திவிட்டது. திறந்த பொருளாதாரத்தின் மிகப் பெரிய சாதனையும் இதுதான், கோர முகமும் இதுதான். என் பக்கத்தில் யாருமே இல்லை, நான் எப்போதும் தனியாள். நான் குரல் கொடுக்கலாம். என் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால், வலியுறுத்த முடியாது. தனிநபர்களை உள்ளுக்குள் சுருங்க வைத்துவிட்டது, திறந்த பொருளாதாரம்.</p>
<p>நிறைய சம்பளமும் வசதிகளும் வந்தபோது, நிர்வாகங்கள் பெரிய அட்சயப் பாத்திரங்களாகத் தெரிந்தன. அப்போது யாரும் இந்த தனிநபர் தன்மையைக் குறையாகக் கருதவில்லை. சென்ற ஒன்றரை ஆண்டுகால பொருளாதாரத் தேக்கம், தனிநபர்களாக இருப்பதின் கையறு நிலையை பலருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறது. நாலு பேர் கூட சேர்ந்து இருப்பதின் அருமையை புரிய வைத்திருக்கிறது.</p>
<p>என் அளவில் நான் ஒரே ஒரு போராட்டத்தில்தான் கலந்துகொண்டு இருக்கிறேன். என் கல்லூரியில் நடைபெற்ற ஒரு மாதத்துக்கும் மேலான மாணவர்கள் ஸ்டிரைக்கில் நான் பங்குபெற்றேன். ஆனால், ஸ்டிரைக்கைவிடப் பேச்சுவார்த்தைதான் சரியான வழி என்பது என் எண்ணம். என்ன கோரிக்கையாக இருந்தாலும் பேசியே தீர்த்துக்கொள்ள முடியும்.</p>
<p>அமைதியைவிட அற்புத ஆயுதம் வேறில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
