பதிப்பகம்

2009 – மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்

Posted in பதிப்பகம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.

ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 — ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.

2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.

செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.

திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.

இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

ஒரு திருத்தம், ஒரு மகிழ்ச்சி

Posted in பதிப்பகம், பொது on December 2nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

நேசமுடன் 16 இதழில், சென்னைப் புத்தகக் கண்காட்சி, டிசம்பர் 28, 2009 முதல் ஜனவரி 8, 2010 நடைபெற இருக்கிறது என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்க. பல நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். சரியான தேதிகள்: டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010. பிற தகவல்கள் சரியானவை. (வலைத்தளத்தில் சென்ற வாரமே சரி செய்துவிட்டேன்).

அம்ருதா டிசம்பர் இதழில், நேசமுடன் மடல் இதழ்களில் வெளியான தமிழ்ப் பதிப்புலகம் – இன்றும் நாளையும், தமிழ்ப் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை? என்ற கட்டுரைகளை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். எடுத்து வெளியிட்ட அம்ருதா ஆசிரியர் பிரபு திலக், கெளரவ ஆசிரியர் திலகவதி ஆகியோருக்கு என் நன்றி.

இந்தக் கட்டுரைகள் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டனவோ அது நிறைவேறிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி. பல பதிப்பாள, விற்பனையாள நண்பர்கள் என்னுடன் இக்கட்டுரை பற்றிப் பேசினர். ‘அருணோதயத்தை ரூ.1 கோடி அடுக்குல வெச்சது தப்பு சார், அவங்க ரூ.5 கோடி வியாபாரம் செய்வாங்க’, ‘கண்ணதாசன் நீங்க சொல்றாமாதிரி ரூ.5 கோடி வியாபாரம் செய்வார்னு தோணலை சார்’, ‘மருதா பத்தி நீங்க எழுதியிருக்கறது சரி சார்’ என்றெல்லாம் என் குறைகளை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்கிறேன். என் தகவல்கள் தவறாக இருப்பதில் எனக்கு எந்த மனவிசனமும் கிடையாது. எந்தவிதமான பப்ளிஷ்டு, டாக்குமெண்டட் ஆதாரமும் இல்லாமல், தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தக விலைப்பட்டியல், பெஸ்ட் செல்லர், மார்க்கெட் இண்டலிஜென்ஸை மட்டும் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் அவை.

அதில் தவறு இருப்பது இயல்பானது. பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சரியான தகவல்களை முன்வந்து தரும்போது, அந்தப் பட்டியல் மேன்மேலும் மேம்படும். செப்பனிடப்படும். இன்னொரு நண்பர் சொன்னது இன்னும் சரியாகத் தோன்றியது, ‘ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியல் மாறலாம் சார். எல்லா வருஷமும் எல்லோரும் புது புத்தகங்கள் போடுவதில்லை, நிறைய விற்பனையும் ஆவதில்லை. பல்வேறு காரணங்களால், ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்’ என்றார் அவர். சரியான கருத்தாகத் தோன்றியது.

தமிழ் பதிப்பகங்கள் தம் விற்பனை விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தொழில், வர்த்தக அமைப்புகளாக இருக்கும் பபாசி போன்றவை, தமிழக சிஐஐயின் பதிப்பு அங்கம் (இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்றவை, தமிழ்ப் பதிப்புலகின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் அவ்வப்போது ஆய்வுகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுவது உபயோகமாக இருக்கும்.

ஒரு துறை வளரவேண்டுமென்றால், ஆர்வமும் திறமையும் எவ்வளவு தூரம் முக்கியமோ அவ்வளவு தூரம் முதலீடும் முக்கியம். இந்தியாவில் கடந்த ஓராண்டில் கூட, மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் துறையில் ஏராளமான அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதுபோன்ற பதிப்பு, பத்திரிகை, இன்னபிற மீடியா தொழில்களில் முதலீடு செய்யவென்றே, பல நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தமிழ்ப் பதிப்புலகின் மொத்த வளம், அதில் இருக்கும் முன்னேற்றங்கள் ஓரளவுக்குத் தெரியவருமானால், இந்தச் சந்தையிலும் வந்து முதலீடு செய்வார்கள். முதலீடு கிடைக்கும்போது, வளர்ச்சி பெருகும். உபதுறைகள் எல்லாம் வளரும். இத்தொழிலில் ஆர்வத்துடன் இளைஞர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நம் பதிப்புத் துறை குடத்திலிட்ட விளக்காக இல்லாமல், குன்றின் மேலிட்ட விளக்காக இருப்பது நல்லதல்லவா?

‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு

Posted in பதிப்பகம், புத்தகங்கள் on October 7th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

கிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.

எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் உற்சாகம் அளித்த புத்தகம் இது. மொழிபெயர்க்கும் முன்பு ஒருமுறை முழு நூலையும் படித்துவிட்டேன். எளிய நூறு விதிகள். நல்ல உபயோகமான பெற்றோராக இருப்பதற்கு இந்த நூல் தரும் வழிகள் மிகவும் அபூர்வமானவை. தமிழில் இதைப் படிப்பவர்களுக்கு, தமிழ் மனம் உடைய பெற்றோர்களுக்கு, பண்டைய சிந்தனை மரபில் வரும் பெற்றோர்களுக்கு இந்த நூல் எவ்வளவு உவப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த நூலின் அடிநாதம் இதுதான். 18 வயதில் உங்கள் பெண்ணோ பிள்ளையோ வீட்டைவிட்டு வெளியே போய்விடுவான்/ள். அதுதான் இயற்கை. அப்படிப் போகவில்லை என்றால், அவர்களை நீங்களே அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வெளியே அனுப்பிவிட வேண்டும். சிறந்த பெற்றோர் என்பவர்கள், 18 வயதுக்குப் பின் தம் பிள்ளைகள், தம் சொந்தக் காலில் நிற்க, சொந்த சிந்தனையோடு செயல்பட, சுயமுடிவுகள் எடுக்க, உறுதியான மனமுடையவர்களாகத் தயார்படுத்துபவர்கள்தான் என்கிறது இந்த நூல்.

இதை பத்து பத்து அத்தியாயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பத்து அத்தியாயமும் வளர்ச்சிப் போக்கின் ஒரு அம்சத்தை மையப்படுத்தி, விரிவாகப் பேசுகிறது. அனுபவங்கள், உதாரணங்கள், மேற்கோள்கள், சிந்தனைத் தெறிப்புகள் நிறைந்த நூல் இது. இதற்கு மேல் இந்த நூலைப் பற்றிப் பேசினால், சுவாரசியம் குறைந்துபோய்விடும். நீங்களே நூலைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. இருக்கிறது. நமது இந்திய சமூகங்களில் சுயசார்புள்ள மனிதனாக ஒருவனைத் தயார்படுத்தும் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்று யோசித்தால், ஐயமே மேலோங்குகிறது. சுயசார்பு என்று சொல்லும்போது, சுயமாக முடிவெடுத்தல், தன் சொந்தக் காலில் நிற்பது, தன் முடிவைச் செயல்படுத்துவது என்று இன்னும் விரித்துப் புரிந்துகொள்ளலாம்.

பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளுக்குச் சுயமாக சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறோமா? அதை செய்ய அனுமதித்திருக்கிறோமா? முடிவான பதில் தெரியவில்லை. பெற்றோர்களில் ஒரு சிலர் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். ஒரு சிலர் செய்யவில்லை. அவர்கள், ரொம்ப பொசசிவ்வாக தம் மகவுக்குத் தேவையான அனைவற்றையும் தாமே செய்துகொடுத்து, ஸ்பூன்ஃபீட் செய்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பிள்ளைகளால் சொந்த முடிவுகளை எடுக்கும் பேச்சே எழாமல் போய்விடுகிறது. அடுத்தவர்களுக்கு வலிக்குமோ, என்ன நினைத்துக்கொள்வார்களோ, என்ன பேசுவார்களோ என்று தயங்கித் தயங்கி மற்றொரு சாதாரண குடிமகன் ஆகிவிடுவார்.

மேலே சொல்லியிருப்பது சிந்தனை ரீதியான விஷயம் என்றால், நடைமுறை ரீதியாகவாகவது நம் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கிறார்களா என்றால், அதிலும் கொஞ்சம் இடறல் உண்டு. எனக்குத் தெரிந்த குடும்பத்தில், பையன் +2 படிக்கும்போதுகூட, அவனுக்கு அவன் அம்மா வாயில் சோறு ஊட்டுவாள். காலுக்குப் போடும் காலணிகளை எடுத்துவைத்து, புத்தகங்களை பையில் அடுக்கிக்கொடுத்து, புராஜட்டுகளைத் தானே எழுதிக்கொடுத்து அந்தம்மா தானே ஸ்கூலுக்குப் போகாத குறைதான்.

இன்னொரு குடும்பத்தில் பையன், எட்டாவதோ என்னவோ படிக்கிறான். வீட்டைவிட்டு வெளியே வந்ததே இல்லை. அப்படியே வந்தான் என்றால், அது காலை அப்பா ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் மாலை அம்மா வீட்டுக்கு அழைத்து வருவதும் மட்டும்தான். மிஞ்சி மிஞ்சி சனி ஞாயிறுகளில், அவன் அம்மாவோடு வெளியே போகும்போது, அம்மாவின் முந்தானை முனையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடுவான். வெளியுலகம் என்று ஒன்று இருப்பதே அந்தப் பையனுக்குத் தெரியுமோ தெரியாதோ?

இதுபோன்று அதீத pampered ஆக வளரக்கூடிய பையனோ பெண்ணோ, என்ன வாழ்வு வாழ்வார்கள்? தெரியவில்லை. தன் வேலைகளை எல்லாம் எப்படியோ யாரோ செய்கிறார்கள், அவர்களுக்கு தாம் சுமையாக இருக்கிறோம் என்ற உணர்வு இவர்களுக்கு வரவே வராதோ? தன் வேலைகளை ஏன் இன்னொருவர் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தனக்காக எதற்கு தன் அம்மாவோ அப்பாவோ அல்லது மனைவியோ அவர்களுடைய சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வளைந்து கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தெரியவில்லை.

என் தோழி ஒருத்தியின் வீட்டில், அவளுடைய அப்பா, அண்ணன்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு போய், வாஷ்பேசினில் கழுவக்கூட மாட்டார்கள். தட்டிலேயே கையைக் கழுவிக்கொள்வார்கள். குடித்த காபி டம்பளரை, நாற்காலிக்கு கீழே வைத்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வங்கிக்கு வரும் பல இளைஞர்களிடம் பேனா இருக்காது. இரவல் பேனாவில், சலான்களை நிரப்புவார்கள். பல பிள்ளைகளுக்கு படுத்து உறங்கும் படுக்கையை மடித்து எடுத்துவைக்கத் தெரியாது.

இன்னொரு அலுவலகத் தோழி சொன்னது இது. அவளுடைய உறவினர் ஒருவர் தன் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் போயிருக்கிறார். பொதுவாக அந்தக் காரை அவரது ஓட்டுநரோ, மனைவியோதான் ஓட்டுவார்கள். அன்று இவர் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். மேற்கு மாம்பலம் அருகே வண்டி நின்றுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தன் மனைவியைக் கூப்பிட்டு, என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கேட்டாராம் அவர். நடுரோட்டில் காரோடு செயலற்று நிற்கும் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்த எனக்குச் சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

இவர்களிடம் சுயசார்பு பற்றியெல்லாம் பேசுவதில் அர்த்தமே இல்லை. சுயசார்பு உள்ளவனால்தான் சுய முடிவுகள் எடுக்க முடியும். சுய முடிவு எடுப்பவன் தான், பின்னர் அதைச் செயல்படுத்தவும் முடியும். செயல்படுத்தும் சுதந்திரம் என்பது ஓரளவுக்கு இங்கே இருக்கிறது. தடைகள் உண்டு. ஆனால், சுயசார்பு உள்ளவர்கள் குறைவாக இருக்கும்போது, இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.

நமது சமூகத்தில் ஏதோ ஒருவித நோய் இருக்கிறது. எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும், தன் பிள்ளைகளை இன்னும் சிறுவர்கள் போல் நடத்தும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களும் அவர்தம் கருத்துகளும் ஒருவிதமான கதகதப்பை பிள்ளைகளுக்குத் வழங்குகிறது. அதனால், அந்த அரவணைப்பையும் கதகதப்பையும் பாதுகாப்பையும் எங்கே இழந்துவிடுவோமோ என்று பிள்ளைகளும் பெற்றோர் வழியில் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.

பழமையும் பண்பாடும் நமது செழுமைகள்தான். மூத்தோர் சொல் வேதம்தான். அதை உள்வாங்கிக்கொண்டு தன்வயப்படுத்திக்கொண்டு சுயசிந்தனையோடு செயல்பட வேண்டியது அவசியம் இல்லையா?

இதுபோன்ற சூழ்நிலை நிலவும் இந்திய, தமிழகச் சூழலில், ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ நிச்சயம் வேறோரு திசையை, தீர்வை, மனநிலையை முன்வைக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை?

Posted in பதிப்பகம், புத்தகங்கள் on September 23rd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான்.

தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப் பிள்ளை. ஒவ்வொரு புதுப் பதிப்பகம் தொடங்கும்போதும், எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே புதிதாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இருக்கிறது. புத்தக விநியோகம் ஏற்கெனவே தயாராக இருக்கும் ஒரு உறுப்பாக இங்கே இல்லை. அதை ஒவ்வொருவரும் தம் பதிப்பகத்தின் ஒரு பகுதியாக வளர்த்து எடுக்கவேண்டி இருக்கிறது.

புத்தக விநியோகத்தை முழுமையான ஒரு தொழிலாக/ வேலையாக இங்கே யாரும் எடுத்துச் செய்வதில்லை. அப்படியே இருக்கும் விநியோகஸ்தர்களும் தத்தமது ஊரைச் சுற்றி மட்டுமே புத்தகங்களை விநியோகிப்பவர்களாக இருக்கிறார்கள். கோவை என்றால் விஜயா வேலாயுதம். இவர் விநியோகஸ்தர் மட்டுமல்ல, பதிப்பாளர், புத்தகக் கடையையும் நடத்துபவர்.

அதாவது, தமிழகத்தின் பல ஊர்களில் புத்தகக் கடை வைத்திருப்பவர்களே, விநியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால், தங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஒரு ஊர்களுக்கு மட்டுமே புத்தகங்களைச் சப்ளை செய்ய முடிகிறது. தமிழகம் முழுவதற்கும் ஒரு விநியோகஸ்தர், அவரிடம் புத்தகங்களை அச்சடித்துக்கொடுத்துவிட்டால், அவர், எல்லா இடங்களிலும் போய் சேர்த்துவிடுவார் என்ற நிலைமை இன்னும் வரவில்லை.

ஆங்கிலப் புத்தக விநியோகத்திலும் இந்த நிலைமைதான். ஆனால், இன்னும் கொஞ்சம் விரிவாக அங்கே செய்ய முடிகிறது. இந்தியா புக் ஹவுஸ், இந்தியா புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ் போன்ற விநியோகஸ்தர்கள் இந்தியா முழுமையும் விநியோகம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விநியோகமும் முழுமையானது அல்ல. பல மாநிலங்களில் அவர்களால் முழுமையாக விநியோகம் செய்ய முடிவதில்லை. சென்னையில் உள்ள வெஸ்ட்லாண்ட், ஒரு முக்கிய விநியோகஸ்தர்.

இந்த விநியோகஸ்தர்களிடம் ஒரு சில செளகரியங்கள் உள்ளன. இவர்களிடம் நேரடியான விற்பனைப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல கடைகளுக்குப் புத்தகங்களைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். சில புத்தகக் கடைகள் நேரடியாக இவர்களிடமே வந்து புத்தகங்களை வாங்கிச் சென்று தங்கள் கடைகளில் வைத்து விற்பனையும் செய்கிறார்கள்.

இதெல்லாம் செய்வதற்கு ஒரு நிர்வாக அமைப்பு வேண்டும். பணியாளர்கள் வேண்டும். பணியாளர்களுக்குச் சம்பளம், புத்தகங்களை வைக்க சேமிப்புக் கிடங்கும், இன்ன பிற வசதிகளும் வேண்டும். ஆங்கில புத்தக மார்க்கெட்டில் இதையெல்லாம் செய்துகொள்ள உரிய புத்தக கமிஷன் கிடைக்கிறது. ஆங்கில மார்க்கெட்டில், வெளிநாட்டில் இருந்து வரும் பல புத்தகங்கள் குறைந்தபட்சம் 40 சதவிகிதமேனும் விற்பனைக் கழிவுடன் வருகிறது. ஒரு சில புத்தகங்களுக்கு 70 சதவிகிதம் வரை விநியோகஸ்தர்களுக்குக் கழிவு கிடைக்கும். இதிலிருந்துதான், கடைக்காரர்களுக்கான கழிவு கொடுக்கப்படுகிறது.

விநியோகமும் மார்க்கெட்டிங்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் தங்கள் நூல்களுக்கு பெரிய அளவில் சந்தைப்படுத்தும் திட்டங்களை, அறிவிப்புகளை, புத்தகம் வெளிவருவதற்கு முன்பே செய்யத் தொடங்கிவிடும். ஹாரி பாட்டர் நூல்களைப் பாருங்கள். அந்த நூல் வரும்முன்பே, அதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து மீடியாவில் வந்துகொண்டே இருக்கும். சில இதழ்களில் அதனுடைய சாம்பிள் அத்தியாயம், எழுத்தாளரின் பேட்டி வெளியாகும். முடிந்தால் வெளியீட்டு விழா. புத்தகங்கள் வெளியானபின்பு, கடைகளில் ஒட்ட சின்னச் சின்ன போஸ்டர்கள், தொடங்க விட டாங்களர்கள் அனுப்பிவைப்பார்கள்.

ஒரு புத்தகம் பற்றிய போதிய அளவு விளம்பரம் இல்லையென்றால், அது சந்தையில் போய் சேரவே சேராது. வாங்குபவர்களுக்கு அதைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் எப்படி பெரிய அளவில் வியாபாரம் சாத்தியம்? தமிழில், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல் வந்திருக்கிறது. இந்தத் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? ஸ்ரீதர கணேசன், சு.தமிழ்ச்செல்வி ஆகிய எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நானேதான் போய் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல், சமீபத்தில்தான் நான்காவது பதிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழில் மெச்சப்படும் ஒரு நாவலுக்கே இதுதான் நிலைமை.

இதனால் என்ன பாதிப்பு? கடைகளில் என்கொய்ரியே இருக்காது. நாலு பேர் தொடர்ந்துபோய் ஒரு புத்தகம் இருக்கிறதா, வைத்திருக்கிறீர்களா என்று கேட்டால்தான், கடைக்காரர் அதை வாங்கி வைப்பார். அப்போதுதான் விற்பனை அதிகரிக்கும். விற்பனை அதிகரித்தால், கடைக்காரர்கள் அதிகரிப்பார்கள், விநியோகஸ்தர்கள் அதிகரிப்பார்கள். இது ஒரு சுழற்சி.

இன்றைக்கு தமிழில் இருக்கும் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. கடைக்காரர்கள்தான் எல்லாம். அவர் தனது கடையில் என்ன புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புரொமோட் செய்கிறாரோ அந்த நூல்கள்தான் வாங்குபவர்களின் கண்களுக்குத் தென்படும். மேலும் அவரே நேராக பதிப்பகங்களிடம் பேசி நூல்களை வரவழைத்துக்கொள்ளுகிறார். இடையில் எதற்கு ஒரு டிஸ்டிரிபியூட்டர், அவருக்கு எதற்கு ஒரு மார்ஜின் என்று தெளிவாக பேசுகிறார்கள்.

அதனால், தமிழில் விநியோகஸ்தர் என்பவரின் ரோலுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எல்லா பதிப்பாளர்களும் நேரடியாக புத்தகக் கடைகளையே சார்ந்திருக்கிறார்கள்.

தமிழில் விநியோகத்துறை வளர முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணம், தூரம். வெளிநாடுகளில் இருக்கும் பதிப்பகங்களோ, வட இந்தியாவில் இருக்கும் பதிப்பகங்களோ தமிழகத்தில் புத்தகத்தை விற்கவேண்டுமானால், அதற்கு இங்கே ஒரு விநியோகஸ்தரை வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இங்கே இருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தமிழகத்துக்குள்ளே விநியோகம் செய்ய எதற்கு தனியாக விநியோகஸ்தர்கள் என்று நினைக்கின்றன. எப்படி இருந்தாலும் வாங்குபவர்கள், சென்னை வரும்போதோ, அல்லது ஏதேனும் ஒரு புத்தகக் கண்காட்சியிலோ புத்தகத்தை வாங்கிவிடுவார்கள், விநியோகத்துக்கு என்று ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணமும் பதிப்பாளர்களுக்கு இருக்கலாம்.

இந்த எண்ணங்கள் ஓரளவுக்குச் சரி. ஆனால், முழுமையும் சரி என்று சொல்லிவிட முடியாது. விநியோகம் என்பது பரவலாக்குதல். ஒரு நூலை பல இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவர்களுடைய முக்கியமான வேலை. எங்கே எந்த விதமான புத்தகங்கள் விற்பனையாகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு அங்கே அந்தத் துறை சார்ந்த நூலைக் கொண்டு போய்ச் சேர்ப்பது அவர்களுடைய வேலை. இது மார்க்கெட் இண்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்டது.

எத்தனை பதிப்பாளர்களுக்கு இந்த மார்கெட் பற்றிய தெளிவு இருக்கிறது? எனக்குத் தெரியவில்லை. பள்ளி, கல்லூரி புத்தகங்கள் மட்டுமே விற்கக்கூடிய கடைகளில் பொது நூல்களும் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் கடைகளில் சீரியஸ் புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கெல்லாம் விற்கக்கூடாதா? இதெல்லாம் புது சந்தையை திறக்கும் முயற்சிகள், போட்டுத்தான் பார்ப்போம், என்னாகிறது என்று புரிந்துகொள்ளலாமே என்று பேசினால் என் பதில் மெளனம்தான்.

என் கரிசனம் முழுவதும் இந்த முயற்சியில் செலவிடப்பட்டிருக்கும் நேரம், உழைப்பு சம்பந்தப்பட்டது. தேவையற்ற இடங்களில் தேவையற்ற நூல்கள் வைக்கப்பட்டால், அதனால், எந்தப் பலனும் இல்லை. உழைப்பும் நேரமும்தான் வீண்.

பதிப்பாளர்கள் நேரடியாக கடைக்காரர்களிடம் போகும்போது, பாதிப்பு பதிப்பாளர்களுக்குத்தான். அவர்களால் எத்தனை கடைகளை நேரடியாகப் பார்த்துக்கொள்ள முடியும்? விளைவு, பல பதிப்பாளர்கள், தங்களுக்கு என்று ஒரு லைன் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் எவ்வளவு அதிகபட்சம் விற்கமுடியுமோ அதை விற்பனை செய்கிறார்கள். மற்ற லைன்களில் ஆள்கள் போட்டு தொடர முடியாதபோது, அதை விட்டுவிடுகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை, இந்த லைனில் இருக்கும் ஒரு விற்பனைப் பையன், ஊர் ஊராகக் கிளம்பிப் போய், பணத்தை வசூல் செய்துகொண்டு வருகிறான். முடிந்தால், புதிய ஆர்டர்களையும் எடுத்துக்கொண்டு வருகிறான். இதுதான் இன்று தமிழில் நடைமுறையில் உள்ள விநியோக முறை.

விளைவு, நல்ல நூல்கள் கூட, அதிகப் படிகள் விற்பனை ஆவது இல்லை. பல நூல்கள் பல ஊர்களில் கிடைப்பது இல்லை. பல நூல்கள் கடைகளைப் போய் சேருவதே இல்லை. எல்லாம், தமிழக அரசின் நூலக ஆணையை எதிர்பார்த்து கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும். ஒரு நூலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவது ஒரே நாளில் வெளியிட முடியாத நிலை இங்கே. அந்த நெட்வொர்க் பலம் பல பதிப்பாளர்களுக்குக் கிடையாது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஞானரதம் இதழ் ஆசிரியராக இருந்த தேவசித்ரபாரதி அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டார். ஊர் ஊராகப் புத்தகக் கடைகள் போடுகிறேன், கிட்டத்தட்ட 5000 படிகள் வரை ஒவ்வொரு நூலையும் விநியோகம் செய்ய முடியும் என்று அவர் முயன்றார். வெற்றி பெற முடியவில்லை.

அதேபோல், என்.சி.பி.எச். பதிப்பகம், தமது நூல்களையும் ராதுகா பதிப்பக நூல்களையும் நடமாடும் பேருந்துகளில் வைத்து விற்பனை செய்து வந்தார்கள். நான் பல நூல்களை இந்த பேருந்து விற்பனையகங்களில் இருந்து வாங்கியிருக்கிறேன். இப்போது அந்த வாகனங்கள் கண்ணில் படுவது இல்லை. பின்னர், கிழக்கு பதிப்பகம் இதே கான்செப்ட்டை பின்பற்றி, பிராடிஜி நூல்களை விற்பனை செய்யும் வேன் ஒன்றை உருவாக்கி, கடைகள் இல்லாத ஊர்களுக்கு அனுப்பி புத்தக விற்பனையைச் செய்ய முயன்றது. அந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றதோ தெரியவில்லை. தொடர்கிறதா என்றும் தெரியவில்லை.

தமிழில் புத்தக விநியோகத்தில் சிறிய அளவில் ஈடுபட்டுள்ள நண்பர்களிடம் பேசும்போது, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் யோசிக்கக் தக்கதாக இருக்கின்றன. மையமான இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூடுதலான விற்பனைக் கழிவு கோருகிறார்கள். மேலும் புத்தகம் விற்ற பணத்தை உடனடியாகத் தராமல் தாமதப்படுத்துகிறார்கள். விற்காத புத்தகங்களைத் திரும்ப எடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதற்கும் காலம்தாழ்த்துகிறார்கள். மற்றொரு பக்கமோ, பதிப்பாளர்கள், விற்ற புத்தகங்களின் கணக்கைக் கேட்டு, பணத்தைச் செட்டில் செய்யச் சொல்லுகிறார்கள். இரண்டு முனைகளிலும் மாட்டிக்கொண்டு நூல் அளவு கூட லாபம பார்க்க முடியாமல் தவிப்பவர்கள் விநியோகஸ்தர்கள்தான் என்கிறார்கள் இவர்கள்.

இந்த இடியாப்பச் சிக்கலில் எந்த முனையைப் பிடித்து, ஒழுங்கைப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிலையினால் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் பதிப்பாளர்கள். நல்ல புத்தகங்கள் இருக்கும், விரிவாக விநியோகம் செய்யும் வாய்ப்பில்லாமல், போட்ட முதலீடு திரும்ப வராமல், ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நஷ்டத்தில் மூழ்கிப் போகிறார்கள்.

இவ்வளவையும் மீறி, தமிழ்ப் பதிப்புலகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 12 – 15 சதவிகிதம் வரை வளருகிறது. அதுவே சாதனைதான்!

தமிழ் பதிப்புலகம் – கடிதம் 1

Posted in கடிதங்கள், பதிப்பகம் on August 27th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
அன்புள்ள நண்பருக்கு,
இது நீங்கள் எனக்கு அனுப்பும் இரண்டாவது இதழ்.
முந்தைய இதழை படித்தவுடனேயே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் தள்ளிப்போட்டு பிறகு மறந்தே போனேன்.  இந்த இதழைப் படித்து முடித்தவுடனே உடனே பதில் எழுத வேண்டும் என்று தோன்றியது.
தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்:
உங்களுடைய அனைத்து கருத்துகளுடன் உடன்படுகிறேன். என்னுடைய எண்ணமும் அதுவேதான். நானும் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு புத்தக வினியோக நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன் (Higginbothams). அப்போதே நீங்கள் கூறியவற்றை நேரிலேயே உணர்ந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை நீடிப்பதை காணும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. புத்தக வினியோகத்தில் ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக நம்மால் வரவே முடியாது போலிருக்கிறது.
நானும் ஒரு புத்தகத்தை எழுதி கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் பல கடைகளிலும் ஸ்டாக்காகவே இருக்கின்றன. நான் பணியாற்றிய அதே வினியோக நிறுவனத்தினரின் கடைக்கும் சில நாட்களுக்கு முன்பு செல்ல நேர்ந்தது. ஆங்கில புத்தகங்கள் எல்லாம் பார்த்தவுடனே புரட்டிப் பார்க்க தூண்டும் வகையில் காட்சிக்கு வைத்திருக்கப் பட்டிருக்க தமிழ் புத்தகங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு வாங்க நினைப்போரையும் வெறுப்படைய செய்யம் வகையில்…. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிலை மாறவே மாறாது போலிருக்கிறது.
இறுதி கட்டுரையான வழி சொல்லுங்க. இதிலும் உங்களுடைய அனுபவத்தை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
என்னுடைய மன ஆறுதலுக்காக (நிச்சயம் பொழுதுபோக்கு அல்ல) நானும் வலைப்பூக்களில் கடந்த சில ஆண்டுகளாக எழுதுகிறேன். சில மாதங்களாக அதிகம் எழுத முடிவதில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத வேண்டும் என்று ஆவல். இறைவன் சித்தம்.
அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்
அன்புள்ள நண்பருக்கு,
இது நீங்கள் எனக்கு அனுப்பும் இரண்டாவது இதழ்.
முந்தைய இதழை படித்தவுடனேயே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் தள்ளிப்போட்டு பிறகு மறந்தே போனேன்.  இந்த இதழைப் படித்து முடித்தவுடனே உடனே பதில் எழுத வேண்டும் என்று தோன்றியது.
தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்:
உங்களுடைய அனைத்து கருத்துகளுடன் உடன்படுகிறேன். என்னுடைய எண்ணமும் அதுவேதான். நானும் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு புத்தக வினியோக நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன் (Higginbothams). அப்போதே நீங்கள் கூறியவற்றை நேரிலேயே உணர்ந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை நீடிப்பதை காணும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. புத்தக வினியோகத்தில் ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக நம்மால் வரவே முடியாது போலிருக்கிறது.
நானும் ஒரு புத்தகத்தை எழுதி கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் பல கடைகளிலும் ஸ்டாக்காகவே இருக்கின்றன. நான் பணியாற்றிய அதே வினியோக நிறுவனத்தினரின் கடைக்கும் சில நாட்களுக்கு முன்பு செல்ல நேர்ந்தது. ஆங்கில புத்தகங்கள் எல்லாம் பார்த்தவுடனே புரட்டிப் பார்க்க தூண்டும் வகையில் காட்சிக்கு வைத்திருக்கப் பட்டிருக்க தமிழ் புத்தகங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு வாங்க நினைப்போரையும் வெறுப்படைய செய்யம் வகையில்…. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிலை மாறவே மாறாது போலிருக்கிறது.
இறுதி கட்டுரையான வழி சொல்லுங்க. இதிலும் உங்களுடைய அனுபவத்தை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
என்னுடைய மன ஆறுதலுக்காக (நிச்சயம் பொழுதுபோக்கு அல்ல) நானும் வலைப்பூக்களில் கடந்த சில ஆண்டுகளாக எழுதுகிறேன். சில மாதங்களாக அதிகம் எழுத முடிவதில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத வேண்டும் என்று ஆவல். இறைவன் சித்தம்.
அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்

Posted in பதிப்பகம், பொருளாதாரம் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

I.

தமிழ்ப் பதிப்புலகம் பற்றி வேற்று மொழியைச் சேர்ந்த பதிப்பாளர்களிடமோ, எழுத்தாளர்களிடமோ பேசும்போது, ஒரு பிரச்னையைத் தொடர்ந்து சந்திப்பேன். உங்கள் மார்க்கெட் சைஸ் என்ன? எவ்வளவு பதிப்பாளர்கள் இருப்பார்கள்? தமிழ் பதிப்புத் தொழிலின் மொத்த டர்ன் ஓவர் என்ன? வளர்ச்சி விகிதம் என்ன? எப்படி விலை வைப்பார்கள்? நிகர லாபம் எவ்வளவு சதவிகிதம் இருக்கும்? முதல் பதிப்பு எவ்வளவு வெளியிடுவீர்கள்? ஒரு சாதாரண புத்தகம் ஓராண்டுக்குள் தோராயமாக எத்தனை படிகள் விற்பனையாகும்?

தமிழைப் பொறுத்தவரை, பதிப்புத் தொழில் என்பது இனிமேலும் குடிசைத் தொழில் அல்ல. அது ஒரு இண்டஸ்ட்ரி என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. பதிப்புத் தொழிலை நம்பி நிறைய துணைத் தொழில்கள் தோன்றியிருக்கின்றன. பெரிய அளவில் மூலதனம் போட்டு, பிரிண்டிங் மெஷின்கள் வாங்கிப் போட ஆரம்பித்துவிட்டார்கள். டைப் செட்டிங், ஃபிலிம் எடுத்தல், பைண்டிங் என்று பல தொழில்கள் வளர்ந்திருக்கின்றன. நல்ல புத்தகம் போட்டு, நல்லபடியாக மார்க்கெட் செய்பவர்கள் யாரும் இந்தத் தொழிலில் தோற்றதில்லை. ஒரு சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள் வேண்டுமானால், கையைச் சுட்டுக்கொண்டு இருக்கலாம். அது தனிக் கதை. இப்போது தமிழ்ப் பதிப்புத் தொழிலின் அளவு பற்றி மட்டும் பேசுவோம்.

தமிழ் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் என்ன? இது சம்பந்தமாக ஏதும் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன். என் பார்வையில் அப்படி ஏதும் தென்படவில்லை. மேலும் மேலே எழுப்பிய பல கேள்விகளுக்கு தீர்மானமான பதில்கள் கிடைக்கவில்லை. இல்லை என்பதற்காக விட்டுவிட முடியாது அல்லவா? ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்கித்தான் ஆகவேண்டும். கிழக்குப் பதிப்பகத்தில் பணியாற்றிவிட்டு, இப்போது ஆப்பிள் புக்ஸில் பணியாற்றும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர் விக்ரம் சதீஷ் மற்றும் நான் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழ்ப் பதிப்புலகின் சைஸையும் இன்ன பிற தகவல்களையும் ஒன்றிணைக்க ஆரம்பித்தோம். விவரங்கள் இப்படி இருக்கின்றன.

1. தோராயமாகத் தமிழ்ப் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் – 80 கோடி.
2. ஆக்டிவ்வான பதிப்பாளர்கள் – 175 (மொத்தம் எவ்வளவு பதிப்பாளர்கள் என்று கணக்கு தெரியவில்லை). இவர்கள் பபாசி எனப்படும் பதிப்பாளர் விற்பனையாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
3. கடந்த ஐந்து ஆண்டுகளில், Compounded Annual Growth Rate (CAGR) – 12 % – 13%.
4. பதிப்பாளர்களுக்கு எல்லா செலவுகளும் போக நிகர லாபம் – 12% – 15%.
5. இனி பதிப்பாளர்களை அவர்களுடைய டர்ன் ஓவர்க்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளில் பிரிக்கலாம். இது முற்றிலும் எங்கள் அனுமானம். எந்தப் பதிப்பாளரும் தம் ஆண்டு விற்பனையை வெளியிடுவதில்லை. பதிப்பாளர்களின் புத்தகப் பட்டியலை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் விலையை வைத்துக்கொண்டு, அவரவர்களுடைய பெஸ்ட் செல்லர் விற்பனையை வைத்துக்கொண்டு, இந்த அடுக்குகளுக்குள் பதிப்பாளர்களைப் பொருத்தியிருக்கிறோம். இது முற்றிலும் தவறாக இருக்க வாய்ப்பில்லை.

அ) ரூபாய் ஐந்து கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.என்.சி.பி.எச்., 2. விகடன் பிரசுரம், 3. கண்ணதாசன் பதிப்பகம், 4. கிழக்கு பதிப்பகம், 5. ராமகிருஷ்ணா மடம்

ஆ) ரூபாய் இரண்டு கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. வானதி பதிப்பகம், 2. கலைஞன் பதிப்பகம், 3. நர்மதா பதிப்பகம், 4. தி அலையன்ஸ் கம்பெனி, 5. மணிமேகலை பிரசுரம், 6. திருமகள் நிலையம், 7. நக்கீரன் பதிப்பகம், 8. பாரதி புத்தகாலயம், 9. சுரா புக்ஸ்

இ) ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. பாரி நிலையம், 2. வர்த்தமானன் பதிப்பகம், 3. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 4. மணிவாசகர் பதிப்பகம், 5. கவிதா பப்ளிகேஷன்ஸ், 6. தமிழ் புத்தகாலயம், 7. லிஃகோ, 8. அருணோதயம்

ஈ) ரூபாய ஐம்பது லட்சம் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.பழனியப்பா பிரதர்ஸ், 2. பூம்புகார் பதிப்பகம், 3. ஸ்ரீசெண்பகா, 4. மீனாட்சி புத்தக நிலையம், 5. ஐந்திணை, 6. காலச்சுவடு, 7. காவ்யா, 8. சந்தியா, 9. உயிர்மை, 10. அடையாளம்

உ) ஐம்பது லட்ச ரூபாய் வரை விற்பனை செய்பவர்களை இன்றும் மூன்றாகப் பிரிக்கலாம். பத்து லட்சம் ஒரு அடுக்கு, 25 லட்சம் வரை ஒரு அடுக்கு, 50 லட்சம் வரை மற்றொரு அடுக்கு என்று பிரிக்க முடியும்.

6. தமிழகம் எங்கும் சின்னதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 500 புத்தகக் கடைகள் இருக்கின்றன.
7. விற்பனைக் கழிவு – 25 % – 40 % வரை.
8. கிரெடிட் பீரியர் – 90 – 120 நாட்கள் (சில சமயங்களில் 180 நாள்கள் வரை போவது உண்டு)
9. புத்தக விலை – அடக்கவிலை போல் மூன்றில் இருந்து நான்கு மடங்கு (இங்கிலாந்து ஆங்கிலப் பதிப்பகங்களில் இதுவே பத்து மடங்கு!)
10. எழுத்தாளர் ராயல்டி – புத்தக விலையில் 7.5% – 10%.
11. சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி ஆகிய இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன.
12. பெரிய புத்தகக் கடைகளான லேண்ட்மார்க்கோ, ஒடிசியோ, ஹிக்கின்பாதம்ஸோ, கிராஸ்வேர்ட்டோ தமிழ் புத்தகங்கள் அதிக அளவில் வைக்க ஆர்வம் காட்டுவதில்லை.
13. சமீப ஆண்டுகளாக ஆங்கிலப் பதிப்பகங்கள் தமிழில் காலவைக்க விரும்புகின்றன. ஜெய்கோ புக்ஸ், விவா புக்ஸ் ஆகியவை தாமே தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியிடுகின்றன. சேஜ் புக்ஸ் விகடன் பிரசுரத்தோடு சேர்ந்து புத்தகங்கள் போடுகின்றன. வெஸ்ட்லாண்ட், பான், பியர்சன் ஆகியவை கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து புத்தகங்கள் வெளியிடுகின்றன.
14 மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு தமிழ் புத்தகங்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இனப் பிரச்னை உச்சகட்டத்தை அடையும் முன்பு, அங்கும் தமிழ் புத்தகங்களின் ஏற்றுமதி நடைபெற்று வந்தது.
15. தமிழக அரசு வருடத்துக்கு ஒருமுறை, நூலகத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் நூல்களில், 1000 படிகள் வாங்குகிறது. ஃபாரம் இவ்வளவு விலை என்ற கணக்கில் அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்குகிறது. டெம்மி 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ.3.10, கிரவுன் 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ. 2.90. பல ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த இந்த விலை இன்னும் ஏற்றப்படவில்லை.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றம், வாசிப்புப் பழக்கம். பல சிறு நகரங்களில் கூட, ஊர்களில் கூட, காசு கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நடுவே கடந்த ஓராண்டுக்கும் மேல் பொருளாதார சரிவு வேறு ஏற்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் இதன் பாதிப்பை உணர்ந்திருக்கின்றன. விகடன் பிரசுரம் புத்தகங்கள் வெளியிடும் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. கிழக்கு பதிப்பகம் இதையே வேறு மாதிரி அணுகியிருக்கிறது. ரூ.25 விலையில் ஒரு சந்தை இருப்பதைப் புரிந்துகொண்டு பல நூல்களை இதே விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான கேக் புக்ஸ், ஓவியப் புத்தகங்கள் ஆகியவற்றையும் கிழக்கு வெளியிட்டு இருக்கிறது. மற்றொரு புறம், நிறைய மொழிபெயர்ப்பு நூல்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், பொருளாதாரச் சரிவு காலம்தான், புதிய தொழில்களில் ஈடுபட உகந்த காலம். ஆழி பதிப்பகம் இதைப் புரிந்துகொண்டு இருக்கிறது. நாகார்ஜுனனின் நளிர் மாதிரியான குண்டு புத்தகங்களோடு பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இன்னும் எண்ணி, ஐந்தாவது மாதத்தில் சென்னை புத்தகக் காட்சி வந்துவிடும். 2009 புத்தகக் காட்சி பெரிய சுவாரசியம் இல்லாமல் இருந்தது. 2010 காட்சி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

II.

நீண்ட கால அளவில், ஒரு சில விஷயங்கள் தமிழ் பதிப்புலகில் நடக்க வேண்டும். நடக்கும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் புத்தகம் போடுகிறார்கள். நல்ல புத்தகங்களைத் தேடி வெளியிடும் முனைப்பும் முன்பை விடக் கூடுதலாகியிருக்கிறது. ஆனால், விற்பனை செய்யும் முனைப்பு மட்டும் இங்கே குறைவு. மார்க்கெட்டிங்க், விளம்பரம் ஆகியவற்றில் செலவு செய்வதை விட, அடுத்த அடுத்த புத்தகங்களைப் போட்டுவிடலாம் என்பது பதிப்பகங்களின் எண்ணம். நல்ல எழுத்து எப்படியிருந்தாலும் விற்கும், அதற்கு சந்தைப்படுத்தும் முயற்சியே தேவையில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்று சொல்வது.

நல்ல மார்க்கெட்டிங்கும், நல்ல விநியோகமும் இல்லை என்றால், நல்ல புத்தகம் கூட குடோனில்தான் தூங்க நேரிடும்.

ஆங்கில புத்தகங்களுக்கு இருப்பது போல் விரிவான விநியோகஸ்தர்கள் நெட்வொர்க் தமிழ்ப் புத்தகங்களுக்கு வர வேண்டும். பதிப்பாளர்கள் நல்ல புத்தகங்களைத் தேடிப் போக, விநியோகஸ்தர்கள், விற்பனையை மேம்படுத்தும் சூழல் வரவேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய பல விநியோகஸ்தர்கள், புத்தகங்களை விற்பனை செய்வதில் பெரிய முனைப்பு காட்டுவதில்லை. தமிழின் முன்னணி பதிப்பகங்கள், தாங்களே விநியோகஸ்தர்களாக மாறினால் மிகவும் நல்லது.

இரண்டாவது, தமிழ்ப பதிப்புலகில் ஒரு வகையான கண்சாலிடேஷன் ஏற்பட வேண்டும். எண்ணற்ற சின்ன பதிப்பகங்கள் இருக்கின்றன. அவர்களால், அற்புதமான புதிய எழுத்தாளர்களையும் புதிய படைப்புகளையும் இனம் காண முடிகிறது. புத்தகம் வெளியிட முடிகிறது. ஆனால், விற்பனையில் பெரிய எண்ணிக்கை வருவதில்லை. பெரிய பதிப்பகங்கள், இந்தப் புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இனம் காணுவதில்லை. அவர்களுடைய வேகப் பார்வையில் இவர்கள் படுவதே இல்லை.

ஆங்கிலத்தில் முன்பு ரவி தயாள் பப்ளிஷர்ஸ் என்றொரு பதிப்பகம் இருந்தது. ரவி தயாள்தான் எல்லாம். அவரே புதிய எழுத்தை இனம் காணுவார். எழுத்தாளரைத் தூண்டி எழுத வைப்பார். எடிட் செய்வார். நல்ல அழகான அச்சில் புத்தகம் போடுவார். விற்பனை உரிமையை, ஓரியன்ட் பிளாக்ஸ்வானிடம் கொடுத்துவிடுவார். விற்பனைக்கு விற்பனையும் ஆச்சு. நல்ல புத்தகமும் வெளியாச்சு. கல்கத்தா குரோமோஸோம், ஷேடோ லைன்ஸ் போன்ற நூல்களையும் அமிதவ் கோஷ் போன்ற முன்னணி எழுத்தாளர்களையும் வெளிக்கொணர்ந்தவர் இவர்தான். குஷ்வந்த சிங்கின் மாப்பிள்ளை. ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸில் எடிட்டராக மும்பையில் இருந்தவர். பின்னர் சென்னை ஓ யு பியை உருவாக்கினார். அப்புறம் தில்லிக்குப் போய் ஓ யு பி யின் தலைமை நிர்வாக அலுவலராக பல ஆண்டுகள் இருந்தவர். 2006ல் தவறிவிட்டார் ரவி தயாள்.

தமிழில் மருதா என்றொரு பதிப்பகம் இருக்கிறது. மருதா வெளியிட்ட ஒவ்வொரு நூலும் கவனத்தைக் கவருபவை. சரியான படைப்பை, நல்ல எழுத்தை இனம் காணுவதில் மருதா பாலகுருவுக்கு ஒரு சுவை, ரசனை இருக்கிறது. ஆனால், விற்பனை? பெரிய எண்ணிக்கையில் இருக்குமா என்று தெரியவில்லை. மருதா ஒரு உதாரணம்தான். கருப்பு பிரதிகள், பரிசல், நிழல் போன்ற பதிப்பகங்கள் இப்படி பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கின்றன. இதுபோல் மேலும் பலர் இருக்கக்கூடும்.

இதுபோன்ற கன்சாலிடேஷன்களும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்கும் அதிகமாகும்போதுதான், தமிழ் பதிப்புலகம் மேலும் விரிவடையும். புத்தகங்கள் மேன்மேலும் அனைத்து இடங்களில் போய் சேர சேரத்தான் புதிய வாசகர்கள் உருவாவார்கள். இது ஒரு சக்கிரம். சுழன்றுகொண்டே இருக்க வேண்டியது தான் இதில் மிகவும் முக்கியம்.