கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் – என் அனுபவம்
சென்ற வாரக் கல்கி இண்டர்நெட் இதழைப் பலர் பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். படித்த நண்பர்கள் தொடர்ந்து மின்னஞ்சல் செய்தார்கள். தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். குறை சொன்னார்கள். இட்லிவடை தன் வலைப்பதிவில் இதழைப் பற்றி விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறார். அவர்கள் அனைவருக்கு என் நன்றி.
கல்கி இதழ் தயாரிப்பு நல்ல அனுபவம். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு, கல்கியின் ஆசிரியர் சீதா ரவி என்னைக் கூப்பிட்டு, இண்டர்நெட் சிறப்பிதழ் பற்றிப் பேசினார். உற்சாகம் தொற்றிக்கொண்டது. இரண்டு மூன்று வாரங்களில் உள்ளடக்க லிஸ்டோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். உடனே வீட்டுக்கு வந்து எனக்குத் தெரிந்த செய்திகளை எல்லாம் எழுதி லிஸ்ட் போட ஆரம்பித்தேன். என்ன சொல்லலாம், சொல்லக்கூடாது என்று யோசிக்க யோசிக்க கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட செய்திகள், கட்டுரைகளுக்கான ஐடியாக்கள் தோன்றின.
அந்த லிஸ்ட்டை ஒரு வாரம் வைத்துக்கொண்டு மீண்டும் பார்த்தேன். பல செய்திகள் மிகவும் வறட்சியாக இருந்தன. எனக்கு விஷயம் தெரியும் என்பதற்காக இதையெல்லாம் எழுதுவது போல் தோன்றியது. கல்கி வாசகர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப டெக்னிக்கலாக இருந்தால், எவராலும் இதழை ரசிக்க முடியாது. கல்கி அப்படிப்பட்ட இதழும் அல்ல. அது எல்லோருக்குமான இதழ்.
பல தரப்பட்ட வாசகர்கள், பலதரப்பட்ட ரசனையோடு இருக்கிறார்கள். என் ரசனை, என் ஆர்வம், என் தேவைகள், அடுத்தவர்களின் ரசனையாக, ஆர்வமாக, தேவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. என் ரசனைக்கான இதழை நான் தயாரிக்கவில்லை. மற்றவர்களின் ரசனைக்கான, தேவைக்கான இதழாக இது இருக்கவேண்டும் என்று தோன்றியது.
லிஸ்ட்டை முற்றிலும் மாற்றி எழுதினேன். அதற்கு முன்னர் பழைய கல்கி இதழ்களில் ஐந்தாறு இதழ்களை வரிவிடாமல் படித்தேன். கல்கி படிக்கும் வாசகர்களையும் அவர்களுடைய ரசனைகளையும் புரிந்துகொள்ளும் முயற்சி அது. இப்போது லிஸ்ட் ரெடி.
ஆனாலும் மீண்டும் கல்கி ஆசிரியரைப் போய் பார்க்கும் தைரியம் வரவில்லை. இண்டர்நெட் என்பது இன்றைக்கு இளைஞர்களையே அதிகம் கவர்ந்துள்ளது. எவ்வளவுதான் பெரியவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இணையம் என்னவோ இளைஞர்களின் சிம்பளாகவே இருக்கிறது. இளைஞர்களின் சுவைகளை புரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியது.
எளிமையாக ஒரு வேலை செய்தேன். என் மூத்த மகள், எதிர்ஃப்ளாட் பெண், இன்னொரு கல்லூரி மாணவன், இன்னொரு உறவினர் பெண் என்று சின்னவர்களாகப் பார்த்து தேர்வு செய்துகொண்டேன். என் வீட்டுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் வரும் இதழ்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டுரையாக பிரித்து, ஒவ்வொருவரின் ரசனை எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என் கருத்து என்று எதையும் சொல்ல முற்படவில்லை. அவர்களாகவே எந்தெந்த விஷயங்களை, கட்டுரைகளை, படங்களை எடுத்துப் படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒருவிதமான பேட்டர்ன் உருவாக ஆரம்பித்தது.
இப்போது முற்றிலும் வேறொரு கட்டுரை லிஸ்ட்டை உருவாக்கினேன். மீண்டும் சீதா ரவியைச் சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்கினேன். எந்தக் கட்டுரையும் ஒன்றிரண்டு பக்கங்களுக்கு மேல் போகக்கூடாது என்பதை கட்டுப்பாடாக வைத்துக்கொண்டேன். ரொம்ப தேவைப்பட்டால், மூன்று பக்கங்கள். அவ்வளவுதான்.
வேலை ஆரம்பித்தது. ஒவ்வொரு கட்டுரையாக எழுத ஆரம்பிக்க, இன்னும் வறட்சியான விஷயங்கள் என்று ஒரு சில கட்டுரைகள் தோன்றின. கல்கியின் துணை ஆசிரியர்களோடு கட்டுரை சப்ஜெக்ட்டை எடுத்துப் பேசி, எப்படி எளிமையாகத் தருவது சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். வேகம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. 14 கட்டுரைகள் எழுதி முடித்தேன்.
பா.ராகவனைக் கதை எழுதச் சொன்னேன். முதலில் ஒத்துக்கொண்டார். புத்தகக் கண்காட்சி காரணமாக கடைசிநேரத்தில் வேலைப் பளு அதிகமானதால், எழுத முடியாமல் போனது. உடனே என்.சொக்கன். ஒரே இரவில் கதை எழுதிக் கொடுத்தார். டோண்டு ராகவனை அவருடைய அனுபவங்களை எழுதச் சொன்னேன். எழுதி அனுப்பினார். அனுபவத்தை விட, தகவல்களே ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது. போன் போட்டு, காதாற விஷயங்களை முழுமையாக வாங்கிக்கொண்டேன். விறுவிறுவென்று மாற்றி எழுதினேன். நல்ல ஹியூமன் ஸ்டோரியை, தகவல்களால் போட்டு சாகடித்த பாவம் என்னைச் சேரக்கூடாது அல்லவா?
நடுவே அவ்வப்போது கல்கி அலுவலகத்துக்குப் போய் லே அவுட் பார்த்தேன். சென்ற வெள்ளிக்கிழமை மாலை இதழைப் பார்த்தேன். பிறந்த குழந்தையைத் தூக்குவது போலிருந்தது. கல்கி இதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவன், பிரிட்ஜ் ஏறி, காசி தியேட்டர் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, இதழை முழுமையாகப் படித்து முடித்தேன். மனம் மகிழ்ச்சி கொண்டது.
இதழ் தயாரிப்பு என்பது ஒரு பொறுப்பு. என் சொந்த மேதாவித்தனத்தைக் காட்டும் இடமல்ல அது. மேலும், சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்ளலாம், அடுத்தவர் காசில் அவர்களுக்கே அதைச் செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். நான் தயாரித்த இதழால், விற்பனை அதிகமாகிறதோ இல்லையோ, குறையாமல் இருக்கவேண்டும் என்ற பயமே என்னிடம் ஆழமாக இருந்தது.
கல்கி இதழ் வந்த நாளில் இருந்து, மூத்த பத்திரிகையாளர்கள் கூப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். இரா. முருகன் மகிழ்ச்சி கொப்பளிக்கப் பேசினார். என் உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர். இலக்கிய நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். கல்கியின் சர்க்குலேஷனில் இருக்கும் நண்பரை ஆஞ்சநேயர் கோவிலில் பார்த்தேன். முகமெங்கும் ஆனந்தம். கைகுலுக்கினார்.
நான் தப்பு செய்யவில்லை, என் கணிப்புகள் பிசகிப்போகவில்லை என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்.
வாழ்த்துக்கள், வெங்கடேஷ். எல்லாவற்றிற்கும்…
உங்கள் தனிப்பட்ட அக்கறைக்கு மின் அஞ்சலுக்கு நன்றி. உங்கள் பணி சிறப்பானது. மைல் கல். வாழ்த்துகள்.
நட்புடன்
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://deviyar-illam.blogspot.com/
தயாரித்த இதழ் போலவே அந்த அனுபவத்தைச்சொல்வதும் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரமணன்.
வாழ்த்துகள், இதழையும் பார்த்தேன், உங்களையும் அதில் பார்த்தேன், நன்றாக அமைத்திருப்பதற்கு மீண்டும் வாழ்த்துகள்.