கறை
சென்ற சனிக்கிழமை நான் தினப் பலனைப் பார்க்கவில்லை. வீண் அலைச்சல் என்று பலன் எழுதியிருக்கவேண்டும். ஒன்றுமே இல்லை. என் மகளின் ஸ்கூல் சட்டை, என்னுடைய ஒரு பேண்ட் ஆகியவற்றில், இன்னொரு சட்டையில் இருந்து மஞ்சள் வண்ணம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை அப்படியே போட்டுக்கொண்டு போக முடியாது. கறை பளிச்சென்று தெரியும்.
அன்று காலை இரண்டு துணிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஸ்டைன்ஸ் அவே, பாண்ட் பாக்ஸ், புரோபஷ்னல், ஆபீசர்ஸ் லாண்டரி போன்ற பெயர்கள் என் மனத்தில் ஞாபகம் வந்தது. முதலில், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டைன்ஸ் அவே கடைக்குப் போனேன். கடையை இடம் மாற்றிவிட்டார்களாம். நீங்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் போய் கேளுங்கள் என்றார் பக்கத்துக்குக் கடையில் இருந்தவர்.
நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய் தேட, அந்தக் கடை கிடைக்கவில்லை. உடனே எனக்கு, பட்டினப்பாக்கம் அருகே ஒரு பெரிய லாண்டரியைப் பார்த்த ஞாபகம் உண்டு. வண்டியை அங்கே ஓட்டிக்கொண்டு போக, கதவு திறந்து இருந்தது.
துணிகளை வெளியே எடுத்துப் போட, கறையைப் பார்த்த கடைக்காரர்,
‘சாரி சார். மஞ்சள் கறை போகாது. ஹைட்ரோ வாஷ்தான் போடணும். மருந்து போட்டா, அடிப்படை கலரே போயிடும். வெள்ளைத் துணின்னா செய்யலாம் சார். இது கலர் துணி.’
‘அப்ப கறை போக என்ன வழி?’
‘ஒண்ணும் இல்லை சார். அப்படியே போட்டுக்க வேண்டியதுதான்.’
எனக்கு லேசாக வருத்தம் வரத் தொடங்கிவிட்டது. ஒன்று என் மகளின் பள்ளிச் சீருடை. இன்னொன்று என்னுடைய பேண்ட். இரண்டுமே விலையுயர்ந்த ஆடைகள். என் வருத்தம் கடைக்காரருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
‘ஆலா இருக்கா சார். ஆலா போட்டு ஊறவையுங்க. அப்புறம் கசக்குங்க. கொஞ்ச கொஞ்சமா போவும்’
‘ஓ’
‘இல்லன்னா, பாண்ட் பாக்ஸ் கடைக்குப் போங்க. அவங்க வெள்ளாவி வெச்சு தோய்ப்பாங்க. தோபி வாஷ்னு சொல்லுவாங்க. அதைச் செஞ்சு பாருங்கள். கறை போயிடும்.’
ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்ததே என்று வண்டியை மைலாப்பூர் பக்கம் விட்டேன். அங்கே கபாலீஸ்வரர் கோவில் பக்கத்தில் பாண்ட் பாக்ஸ் லாண்டரியைப் பார்த்த ஞாபகம். கோவிலையே இரண்டு முறைச் சுற்றி வந்திருப்பேன். யாருக்குமே கடை தெரியவில்லை. ஆட்டோகாரர்களால் கூட அடையாளம் சொல்ல முடியவில்லை. கடைசியில், கோவில் இருக்கும் தெருவின் முனையிலேயே கடை இருந்தது. பாண்ட் பாக்ஸ் போர்டுதான் இல்லை. லேசாக மழைவேறு பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது.
கடையருகே போய், என் துணிகளை எடுத்துப் போட்டேன்.
‘கறை போவாது சார்.’
‘பாண்ட்பாக்ஸ்ல போயிடும்னு சொன்னாங்களே சார்..தோபி வாஷ்னு ஒண்ணு சொன்னாங்க.’
‘நான் போவாதுங்கறேன். நீங்க போவுன்னு சொன்னா, நான் என்னா பண்றது? தோபி வாஷ்லெல்லாம் யார் செய்யறாங்க. அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. எல்லாம் மெஷின்தான். கெமிக்கல்தான் சார் போடணும். கலர் முழுசா போயிடும். பரவாயில்லையா?’
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, ஜஸ்ட் டயல் சர்வீஸுக்குப் போன் செய்தேன். என் தேவையைச் சொல்ல, அடுத்த இரண்டாவது நிமிடம் இரண்டு மூன்று சலவைக்காரர்கள் போன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே பல்லவிதான். துணியின் அடிப்படை வண்ணமே போய்விடும். கறையை மட்டும் நீக்க முடியாது. என்ன சொல்கிறீர்கள்?
‘நல்ல துணி சார். கறை போகவே போகாதா?’
‘கறை பட்டுடுச்சே சார். கறை படாம இருக்கணும். கறையை மட்டும் நீக்க முடியாது சார்.’
‘வேற வழி என்ன சார்?’
‘கறையோடவே இருந்துடவேண்டியதுதான்.’
நான் பேச்சற்றுப் போனேன்.
சர்ப் எக்ஸல்-க்கு வேணும்-னா ஃபோன் போட்டுப் பாருங்களேன். கறை ரொம்ப நல்லதுங்கறாங்களே. உங்கக் கறைக்கும் (அதன் கதைக்கும்) ரயல்டி கொடுக்கக் கூடும்:-)