சென்னை புத்தகக் கண்காட்சி – ஒரு டிரெயிலர்

2010க்கான சென்னைப் புத்தக விழா ஜூரம் தமிழ்ப் பதிப்பாளர்களிடையே தொடங்கிவிட்டது. மொத்தத் தமிழ்ப் பதிப்புலகமும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே தமது புத்தக வெளியீடுகளை அமைத்துக்கொண்டு இருப்பார்கள். அதிகபட்ச மக்கள்திரள் வரும் இடம் இதுதான். அதிகபட்ச வியாபாரம் ஆகும் இடமும் இதுதான்.

இம்முறை பபாசி எனப்படும் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களுடைய தலைமையில் டிசம்பர் 30 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகமே புத்தகக் காட்சி வளாகம்.

வழக்கம்போல், இந்தக் கண்காட்சிக்கு என்னென்ன புதிய புத்தகங்கள் வரவிருக்கின்றன என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் உங்களைப் போலவே எனக்கு உண்டு. பதிப்பாள நண்பர்களிடம் பேசித் திரட்டிய தகவல்கள் இவை:

கிழக்கு பதிப்பகம் இம்முறை 100 புத்தகங்களுக்கும் மேல் வெளியிட இருக்கிறது. அவர்களுடைய பல்வேறு இம்பிரிண்ட்களில் புத்தம் புதிய புத்தகங்கள் வருகின்றன. வழக்கமாக சரித்திரம், வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளில் புத்தகங்கள் இருக்கப் போகின்றன.

முக்கியமாகச் சொல்லவேண்டியது, ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக, அதன் வழக்கு விசாரணை சம்பந்தமாக, முதன்மை புலனாய்வு அதிகாரியாக இருந்த கே.ரகோத்தமன் எழுதியிருக்கும் புத்தகம். ராஜிவ் காந்தி வழக்கு விசாரணை பற்றி பல புதிய தகவல்களை இந்த நூலில் ரகோத்தமன் எழுதியிருப்பதாக, கிழக்கின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

மொழிபெயர்ப்புகள் நூல்கள் வெளியிடுவதில் கிழக்கு இப்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அதில், முன்னாள் குடியரசு தலைவர் எழுதிய ஃபாமிலி அண்ட் நேஷன்  நூலின் தமிழாக்கம் வெளிவர இருக்கிறது. இன்னொரு பக்கம், பராக் ஒபாமாவின் ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர் நூலும் வெளியாக இருக்கிறது.

சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைகளையும் கிழக்கு வெளியிட இருக்கிறது. விளம்புநிலை மனிதர் தன்வரலாறு வரிசையில், ’கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ நூல் அடுத்து வரவிருக்கிறது.

இலக்கியம் பக்கம், முக்கியமான சில நூல்களை கிழக்கு வெளியிட இருக்கிறது. இலந்தை சு. இராமசாமி எழுதியுள்ள பாரதியின் முழுமையான வரலாறு வெளிவரவிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் முழு சிறுகதைத் தொகுதி, அசோகமித்திரனின் குறுநாவல்கள் வரிசையில், முதல் நான்கு குறுநாவல்களின் தொகுதி, ஜெயமோகனின் அச்சில் இல்லாத நூல்களின் மறுபதிப்பு – பனி மனிதன், நாவல் போன்ற நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

முகில் எழுதியுள்ள முகலாயர்களின் வரலாறு பெரிய புத்தகமாக வரவிருக்கிறது. அத்துடன், இணையத்தில் எழுதி வருபவரான சரவண கார்த்திகேயனின் சந்திரயான் பற்றிய முழுமையான நூலும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கப் போகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார் பத்ரி.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நல்ல நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகமான ஆழி, இந்த முறை 15 முதல் 20 நூல்கள் வரை வெளியிட இருக்கிறது. இலக்கியக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை இம்முறை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றார் ஆழி செந்தில்நாதன்.

எம்.எல்.ஏ.வான ரவிக்குமாரின் சிறுகதைத் தொகுதி, ஈழம் பற்றி அவர் எழுதியுள்ள நூல் ஆகியவை முக்கியமானவை. மலையாளத்தில் இருந்து ஷாராஜ் மொழிபெயர்த்துள்ள சிறுகதைகளின் ஒரு தொகுதி வெளிவரவிருக்கிறது. அதேபோல் கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல் ஒன்று, அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுதி ஒன்றும் வெளிவரவிருக்கிறது. தமிழ்நதியின் கவிதைத் தொகுதியும் வெளியீட்டுத் திட்டத்தில் இருக்கிறது. 

தலாய்லாமாவின் வரலாறு மொழிபெயர்ப்பு, குழந்தைகள் புத்தகங்களும் வெளிவரும் என்றார் செந்தில்நாதன்.

நுண்ணுணர்வு கொண்ட பதிப்பகங்களில் ஒன்று மருதா. அவர்கள் வெளியிடும் நூல்கள் எல்லாம் கவனிக்கத்தக்கவை. இம்முறை, சு.தமிழ்ச்செல்வி, வளவ.துரையன், கீரனூர் ஜாகிர்ராஜா ஆகியோரின் நாவல்களை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறது மருதா. ”நேரம் கிடைப்பதைப் பொறுத்து எவ்வளவு நூல்களை வெளியிட முடியுமோ அவ்வளவையும் வெளியிடுவேன்” என்றார் பாலகுரு.

நூறு நூல்கள், ஆறு மீட்டிங்கள் என்று இம்முறை அதிரடி ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது உயிர்மை பதிப்பகம். டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் பத்து பத்து நூல்கள் வெளியிட இருக்கிறது உயிர்மை. ஜெயமோகன் 10, சாரு நிவேதிதா 10, எம்.எல்.ஏ. ரவிகுமார் 4, எஸ்.ராமகிருஷ்ணன் 4 என்ற எண்ணிக்கையில் நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

முக்கியமாக சர்வதேச பெண் கவிஞர் வரிசையில் முதல் மூன்று பெண் கவிஞர்களின் அறிமுகமும் அவர்தம் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் வெளிவரவிருக்கிறது. மேலும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அடங்கிய கிட்டத்தட்ட 20 நூல்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக உயிர்மையின் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்தார்.

கவிஞராக அறியப்பட்ட சுகுமாரனின் முதல் நாவல் வெளிவரவிருக்கிறது. அதேபோல், தமிழ்மகனின் இரண்டாம் நாவலும் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவரப் போகிறது.

காலச்சுவடு நாற்பது புத்தகங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இரண்டு முக்கியமான நூல்களுக்கு முன்வெளியீட்டுத் திட்டத்தையும் அறிவிக்க இருக்கிறது காலச்சுவடு. ஆழி சூழ் உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் எழுத்தாளர் மத்தியில் கவனம் பெற்ற ஜோ டி குரூஸின் அடுத்த நாவல், ‘கொற்கை’. 1350 பக்கங்கள் கொண்ட நாவல். ‘அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு’ (பதிப்பாசிரியர் ப.சரவணன்) நூலும் இதேபோல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளிவரவிருக்கிறது. 1150 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

மேலும் உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ என்ற நாவலும் க.வை.பழனிசாமியின் ‘ஆதிரை’ நாவலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வரப் போகின்றன. நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்ற மொழிபெயர்ப்பு நாவலையும் காலச்சுவடு கண்ணன் வெளியிட இருக்கிறார். அதேபோல், சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற  ஆர்.எம். நெளஸாத்தின் ‘நட்டுமை’ என்ற நாவலும் வரவிருக்கிறது.

என் கவனத்தை அதிகம் கவர்ந்தது, கிருஷ்ணன் நம்பியின் மொத்த படைப்புகளையும் உள்ளடக்கிய ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுதி. ராஜமார்த்தாண்டன் தொகுப்பாசிரியர். அதுவும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

மு.பொன்னம்பலத்தின் மொத்த சிறுகதைத் தொகுதி ‘முடிந்த போன தசையாடல் பற்றிய கதை’ மற்றொரு முக்கிய நூல். வைக்கம் முகம்மது பஷீரின் மொத்த படைப்புகளையும் வெளியிட்டும் திட்டம் காலச்சுவடுவுக்கு இருப்பதாக கண்ணன் தெரிவித்தார்.
 
“மற்றொரு முக்கியமான புத்தகம், அர்ச்சுனன் தபசு. அதேபோல், எனது பர்மா குறிப்புகள் என்பது இன்னொரு முக்கியமான புத்தகம். இந்த நூலுக்காக நாங்கள் ஓராண்டுக்கும் மேலாக உழைத்திருக்கிறோம்” என்றார் கண்ணன்.

விகடன் பிரசுரம் வெளியிட இருக்கும் நூல்கள் குறித்து, அதன் பதிப்பாசிரியரான வீயெஸ்விடம் கேட்டேன். “வழக்கமா வருவதுதான். மாதாமாதம் புதிய புத்தகங்கள் வந்துகொண்டு இருக்கின்றனவே. புக் ஃபேர்க்குன்னு தனியா ஏதும் செய்யலை” என்றார்.

வர்த்தமானன் பதிப்பகம் டிசம்பர் 15 தேதியிலேயே நாலாயிர திவ்யபிரபந்தம் முழுமையையும் உரையுடன் வெளியிட இருக்கிறது. ஜனவரி 17 ஆம் தேதி, திருமந்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும் 9 தொகுதிகளில் வெளியாகப் போகிறது. இதையும் அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் ஆதரவோடு, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட இருக்கிறது.

இன்னும் பல பதிப்பாள நண்பர்களிடம் பேசவில்லை. அவர்களுடைய திட்டங்கள் தெரிய வரும்போது, நேசமுடனில் அதைப் பற்றியும் எழுதுகிறேன். இதில்லாமல் இன்னும் பல தனிநபர்கள் தங்கள் நூல்களை வெளியிட இருக்கிறார்கள்.

பொருளாதாரத் தேக்கம், மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லை என்று சென்ற புத்தகக் கண்காட்சி (2009) கொஞ்சம் சோர்வுடன் காணப்பட்டது. இம்முறை அப்படி இருக்காது என்றே தோன்றுகிறது. வெளியிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் ஆர்வமுமே அதற்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

  1. Saravana says:

    கடந்த வருடன் அமர்நாத் யாத்திரை என்ற ஒரு புத்தகத்துடன் எனக்கு ஆதரவு அளித்த கிழக்கு பத்ரி சார்
    இந்த முறை சிவசேனா, தாராவி, சரத்பவார் என மூன்று புத்தகங்கள் தந்திருக்கிறார்
    saravana rajendran

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply