மாமழை போற்றுதும்

கடந்த ஐந்து நாள்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மழை மகிழ்ச்சிக்கான அறிகுறி, புதிய குழந்தையின் வரவைப் போல. எவ்வளவுதான் இடர்களை அது ஏற்படுத்தினாலும் மழையைப் போல் அற்புதம் ஏதுமில்லை. நான் எழுதும் மடிக்கணினிக்குப் பக்கத்தில் ஒரு ஜன்னல், என் பின்புறம் ஒரு ஜன்னல். இரண்டிலும் மழை வரிவரியாகக் கோடுகள் இழுத்துக்கொண்டு இருந்தது. ஒரு சமயம் சாய்வுக் கோடுகள், மற்றொரு சமயம் நேர்க் கோடுகள். ஓவிய வெண்மை சட்டெனக் கருக்கத் தொடங்கும். தூரத்தில் இடிமுழக்கம். எலும்பு சில்லிடும் குளிர்க் காற்று.

எங்கும் சில்லிட்டிருக்கும். தரை, மேஜை, நாற்காலி, சோபா, படுக்கை என்று எங்கே புழங்கினாலும் உள்ளூர மழையின் குழைவு. குழாயைத் திறந்தால், சிலீர் குளுமையோடு நீர் பீய்ச்சி அடிக்கும். ஒவ்வொரு நரம்புக் கால்களிலும் சிலீர் குரலெழுப்பி, மீண்டும் மீண்டும் நடுக்கத்தை உள்ளுக்குள் நகர்த்தும். மின்விசிறியைத் தட்டினாலோ, குளுமை பொழியும். சுழன்று சுழன்று தன்மை அறைமுழுவதும் வியாபிக்கும்.

ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீர்க் கோலம். தலைகீழாக நிற்கும் பீரங்கிகள். குடை சாய்ந்த பாய்மரக் கப்பல்கள். அணிவகுத்துச் செல்லும் ராஜ சைன்னியம். புள்ளினங்கள் பறக்கும் அடர்த்தியான காடு. இருவிழி மட்டும் தெரியும் ஆந்தைகள்.

பெருமகிழ்ச்சியில் ஜன்னல்கள். மூட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்யும். நான் திறந்தே கிடப்பேன் என்று மரம் உப்பிப் போய், என்ன இழுத்து கொக்கி போட முயற்சித்தாலும் முடியவே முடியாது. ஒவ்வொரு காற்றுக்கும் வலப்புறமும் இடப்புறமுமாக அரைவட்ட ஆட்டம் போட்டு, தன் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ளும் ஜன்னல்கள். ஜன்னல்களை ஒட்டி மழையின் துமி பெய்து, அறையெங்கும் நீர்த்திவலைகள்.

உலர்ந்தும் உலராமல் துணிகள். கால் ஈரம், அரை ஈரம். புழுக்க வாசனை. இஸ்திரி போட்டு அணிந்துகொண்டாலும் உடலோடு குளுமை ஒட்டிக்கொள்ளும். ஷூ, செருப்பு என்று எங்கும் ஈரம். இதுதான் சாக்கு என்று காத்திருந்ததுபோல், காலில் பட்டவுடன் உச்சிவரை குளுமையைக் கரைசேர்க்கும் காலணிகள்.

மழைக்கு இதமாக இருக்கட்டும் என்று மிளகு குழம்பு, சீரக மிளகு ரசம். கபம் சேராது. தொண்டை கட்டு விட்டுப் போகும் என்று காரணங்கள். தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம். ஆவி பறக்கும் டீ. ஒவ்வொரு முறை வாயில் வைக்கும்போதும், சூடு தணிந்து நாக்குக்கு இதமாக தொண்டையில் இறங்கத் தொடங்கும். இஞ்சி காரம் அடித்தொண்டையில் மிதந்துகொண்டே இருக்கும்.

சாலையில் இறங்கினால், ஓடைகள் பள்ளம் தேடி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கிருந்தோ அரித்துவரும் அடிமணல். சிறுகற்களும் வேகத்தில் அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கும். செருப்புகள் தரையில் ஒட்டிக்கொள்ள, சடக் சடக்கென்று ஒரே தாள லயம். நடுவில் பாயும் சைக்கிள்கள், ஓடைகளை இடைப்பிரித்து நகர, நொடிகளில் மீண்டும் ஓடை ஒன்றிணையும்.

மழை பட்டுவிடாமல், வாசல்களில் குழந்தைகள் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். பாதுகாப்பாக பெரியவர்கள். சின்ன வயது நினைவுகள் அவரவர் கண்களில் மிதப்பதை தவிர்க்கவே முடியாது. மழைக்கு ஒதுங்கும் ஆட்டோக்களில் இருந்து புகை மட்டுமே வெளியே வரும். கைகளைத் தேய்த்துக்கொண்டு, சாலையோரமாக பீடி புகைத்தபடி, கோழிகள் போல் மனிதர்கள் பதுங்கியிருப்பார்கள்.

கால் நனைக்கும் நீரில் புத்துணர்ச்சி. புது வெள்ளம். புதுத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா என்றோ சொன்னதெல்லாம் ஞாபகத்தில் வந்து போகும்.

இன்னும் கொஞ்சம் நடந்து முன்னால் போனால், எதிரே விமானம். பார்த்தசாரதியின் விமானம். மேகங்கள் விமான முகட்டில் உட்கார்ந்திருக்கும். கருமை படர்ந்த பின்னணி. அவ்வப்போது ஒளிக்கீற்று போல் விமானத்துக்கு பின்னே எங்கோ மின்னல்கள். வெண்மீசை வேந்தனை மழையால் நனைக்காமல் நகரமாட்டோம் என்று காத்திருப்பது போல், சுற்றி மேகத் திட்டுக்கள். ஒன்று மற்றொன்றை அழைக்க, அடுத்தொன்று இன்னொன்றை அழைக்க, எல்லோரும் விமானம் முன்பு சங்கமித்து, சட்டென நீர்மாரி. தான் மோதுவது எங்கே வலித்துவிடுமோ என்று மெல்ல மெல்லத் தொடங்கி, பின்னர், அடியடியாக முன்னேறி, மொத்த நீரையும் கொட்டிக் கவிழ்த்துவிட்டு, பேரமைதியில் கலந்துவிடும் மேகங்கள்.

காலடியில், பார்த்தசாரதி கோவிலின் குளம். கைவல்ய புஷ்கரணி. மழைக்கு முன்னர் மொத்த நீரையும் வெளியேற்றி, சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். மழை வரவில்லை என்றால் என்ன செய்வது? எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வந்து கொட்டுவார்களோ என்று ஊரில் பேசிக்கொண்டு இருந்தார்கள். வருணனுக்குப் பொறுக்கவில்லை. பார்த்தசாரதிக்கு தாகம் தணிக்காமல் இருப்பதா? கொட்டித் தீர்த்தான். இன்று, நீராழி மண்டபம் வரை நீர் நிறைந்திருக்கிறது. சுத்தமான வான் நீர். வருணன் கொடை.

மெல்ல வீடு திரும்பினேன். ‘மாமழை போற்றுதும்…’ பாடல் ஏனோ ஞாபகம் வந்தது.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்

- இளங்கோ அடிகள், சிலம்பு

  1. anbudan BALA says:

    மழையை ரசிக்காத மனிதரே ஏன் உயிர்களே இருக்க முடியாது !!! மழையைப் போலவே சுகமான இடுகை, நன்றி வெங்கடேஷ்.

    ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
    வாழ உலகினில் பெய்திடாய்

    என்று ஆண்டாளே வேண்டி விரும்பி அழைத்த பெருமை மழைக்கு உண்டே :)

    எ.அ.பாலா

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply