மிகைபடக் கூறுதல்

திருக்குறளைப் பற்றி சமீபத்தில் ஒரு பேச்சு வந்தது. குறள் இதுதான்:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

இதில் சொல்லப்படும் எண்ணும் எழுத்தும் நம்பர்களும் ஆல்ஃபபெட்டுக்களும் அல்ல. இதன் பொருள் வேறு என்றார் ஒவ்வை நடராஜன். பரிமேலழகர் இந்த உரையைத்தான் சொல்லியிருக்கிறார். எண் என்பது எண்ணுதல், சிந்தனை செய்தல், யோசித்தல். எழுத்து என்பது இலக்கியம். ஆக, சி்ந்தித்தலும் இலக்கியம் கற்றலும்தான் உண்மையில் மனிதனாக வாழுபவனுக்கு கண்கள் என்று பரிமேலழகர் உரையில் சொல்லியிருக்கிறார்.

அப்படி என்றால், அந்தக் காலத்து மக்களுக்கு எண்கள் (நம்பர்கள்) தெரியாதா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரூபாயை 16 அணா என்றுதான் சொல்லி வந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் எட்டாகவும் எட்டின் மடங்குகளாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் இருவேறு கொள்கைகள் விவாதத்துக்கு வந்தன. ஒன்று, நேற்று இருந்த தலைமுறையைவிட, இன்றைய தலைமுறை விவரங்கள் நிறைந்தது, அறிவு நிரம்பியது, மேம்பாடு கொண்டது. இன்று இருக்கும் தலைமுறையை விட நாளைய தலைமுறை இன்னும் சிறப்பானதாக இருக்கும். அப்படியானால், நேற்று இருந்த தலைமுறை இன்று இருக்கும் தலைமுறையைவிடக் குறைவான விவரங்கள் தெரிந்தவர்களாகவும் போதிய கல்வி, மேம்பாடுகள் பெறாதவர்களாகவுமே இருந்திருக்க முடியும் அல்லவா?

அப்படியானால், திருவள்ளுவர் காலம் வரை பின்னோக்கிப் போனால், அவர்கள் அறிந்திருக்கும் செய்திகள், தகவல்கள் எல்லாம் இன்னும் குறைவுபட்டுப் போனதாகத்தானே இருக்க முடியும்? இந்தக் கொள்கையின் படி, முன்னோர்கள் என்பவர்கள் போதிய அறிவு இல்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படியானால், திருக்குறள் மாதிரியான பண்பட்ட படைப்பை, ஓர் அறநூலை எப்படி அவர்களால் வடித்திருக்க முடியும்?

இன்னொரு வழியாக இதைப் பார்க்க முடியும். பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தவர்கள் பயங்கர அறிவாளிகளாக, மேதைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து தோன்றிய சந்ததிகள் மெல்ல மெல்ல தங்கள் அறிவுத் திறனை இழந்து வந்திருக்க வேண்டும். இது உண்மையாக இருக்குமானால், நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஏன் பிற நாடுகளின் பெயர்களோ, பிற நகரங்களின் பெயர்களோ இடம்பெறவில்லை? பிற நாகரிங்கள் பற்றி ஏன் பேசப்படுவதில்லை? அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கப்படுவதில்லை?

அன்றைக்கு அவர்களால் ஒரு ஊரைவிட்டு அடுத்த ஊருக்குப் போவதென்பதே பெரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரும் திருவல்லிக்கேணியும் நான்கு நாள் பயணமாக இருந்திருக்க வேண்டும். திருவொற்றியூரும் மயிலாப்பூரும் இரண்டு மூன்று நாள்கள் பயணமாக இருந்திருக்க வேண்டும்.

ஊர், நகரம், நாடு என்பதெல்லாம் இன்று நாம் அதன் நேர்ப்பொருளில் பயன்படுத்தும் town, city, country க்கு ஈடானது அல்ல. அன்றைக்கு நாடு என்பது இன்றைய மூன்று நான்கு மாவட்டங்களை ஒன்றாகச் சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அவ்வளவுதான் இருந்திருக்க வேண்டும். அதில் நகரம் என்பது, ஊர் என்பதும் கிராமம் என்பதும் இன்னும் சின்னச்சிறு அலகுகளாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் தங்கள் நாட்டை விட்டு வெளியே அதிகம் பயணம் போனது போலவும் தெரியவில்லை. இமயத்தில் புலிக்கொடி நாட்டினான், கடாரம் வென்றான், கங்கை கொண்டான் என்பதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அவர்கள் இமயம் என்று சொல்வது இன்றைக்கு நான் குறிக்கும் இமயமலையைத்தானா என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சோழன் ஆட்சி செய்த உறையூரில் இருந்து இமயமலை போய் புலிக்கொடி நாட்டிவிட்டுத் திரும்பினான் என்பதெல்லாம் அதீத உயர்வுநவிற்சியாகத் தோன்றவில்லையா?

இது ஒருபுறம் இருக்க, தகவல் ரீதியாக, செய்திகள் ரீதியாக அக்கால மக்கள் குறைவுபட்டவர்களாக இருந்தாலும் இயல்பான அறிவுத் தீட்சணயம் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், திருக்குறள் மாதிரியான ஒரு உன்னத நூலை எழுதியிருக்க முடியும். இதில் சிக்கல் என்னவென்றால், அவர்கள் அப்படி அறிவுத் தீட்சண்யத்தோடு இருந்தார்கள் என்பதை எப்படி நிரூபிப்பது? தெரியவில்லை.

திருக்குறளில் எனக்கு பல ஆச்சரியங்கள் உண்டு. முக்கியமாக, பிறனில் விழையாமை போன்ற ஒரு அதிகாரத்தை எப்படி அவரால் எழுதியிருக்க முடியும்? அப்படியென்றால், அதற்கு முன்பிருந்தே, ராமாயணக் கதை பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டு வந்திருக்கலாம், அதை ஒட்டியே இப்படி ஒரு அதிகாரத்தை எழுத அவர் துணிந்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்வது சரியாக இருக்குமா? இதற்கும் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நமது பழம்பாடல்கள் பலவற்றில் மிகைப்படக் கூறுதல் ஒரு அம்சமாகவே இருந்திருக்கிறது. இன்று அரசாங்கத்திடம் பரிசுக்காகக் காத்திருப்பவர்கள் போலவே அன்றும் புலவர்கள், அரசர்களின் பரிசில்களுக்காக காத்திருந்திருப்பார்கள் போலும்! அதையும் மீறி, திருக்குறள் மாதிரி உன்னதமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

எத்தனை முறை எப்படிப் படித்தாலும் பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கிறது திருக்குறள். காலத்தால் அழியாமல் இருப்பதற்கு அதுதான் முதல் தகுதி என்று நினைக்கிறேன்.

  1. ரவி says:

    //ஒவ்வை நடராஜன்//

    ஔவை அல்லது அவ்வை

    **

    தமிழ் எழுத்து பொறித்த தொல்பொருள்கள் உலகின் பல மூலைகளிலும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பல நாடுகளுடனும் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உண்டு. ஆனால், இவை இலக்கியத்தில் ஏன் பதியப்படவில்லை, பதியப்பட்டது அழிந்ததா, இல்லை பழங்காலப் பெயர்களைப் புரிந்து கொள்ளவில்லையா என்பது ஆய்வுக்குரியது.

    கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று எல்லாமே போங்கு இல்லை :) சோழர்கள் கடல் கடந்து தெற்காசிய நாடுகளில் செல்வாக்குடன் இருந்தனர் என்பதற்கு போதிய வரலாற்று, பண்பாட்டு எச்சங்கள் உள்ளன.

    //முக்கியமாக, பிறனில் விழையாமை போன்ற ஒரு அதிகாரத்தை எப்படி அவரால் எழுதியிருக்க முடியும்? அப்படியென்றால், அதற்கு முன்பிருந்தே, ராமாயணக் கதை பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டு வந்திருக்கலாம்,//

    ராமாயணக் கதை கேட்டா தான் இதை எழுத முடியுமா :)

    //இன்னொரு வழியாக இதைப் பார்க்க முடியும். பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தவர்கள் பயங்கர அறிவாளிகளாக, மேதைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து தோன்றிய சந்ததிகள் மெல்ல மெல்ல தங்கள் அறிவுத் திறனை இழந்து வந்திருக்க வேண்டும். செய்திகள் ரீதியாக அக்கால மக்கள் குறைவுபட்டவர்களாக இருந்தாலும் இயல்பான அறிவுத் தீட்சணயம் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும்.//

    இது தான் என் நம்பிக்கையும். திருக்குறளில் உள்ள மேலாண்மை கருத்துகளைத் தான் இன்று கல்லூரிகளில் படிக்கிறோம். தமிழ் இலக்கணக்கும் மொழியின் கட்டமைப்பும் அறிவியல் அடிப்படை உடையது. புவிப்பரப்பை பல்வேறு வகைகளாகப் பிரிக்கும் அறிவியல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் மேலை நாடுகளில் வந்தது. தமிழர் இதை “திணைகள்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வகுத்து வைத்துள்ளனர். தமிழர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல மக்கள் இலக்கியங்கள், சமய நூல்களிலும் பல அரிய அறிவியல் செய்திகள் ஒளிந்துள்ளன என்கிறார்கள்….

  2. A. Namadeyan says:

    புதிய சிந்தனை.
    வளமான நாகரிகமும் பண்பாட்டுக் களமும் இருந்ததினால்தான் குறளும் இராமகாதையும் தமிழ் மொழிக்கு அணிசேர்த்தன.

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply