இலக்கியக் கருவூலங்கள்

இந்த ஆண்டு  (2009) கல்கி தீபாவளி மலர் வெளிவரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கல்கி தீபாவளி மலரைத் தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறேன். இம்முறை இல்லை என்னும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மற்றபடி எல்லா மலர்களையும் வாங்கிவிட்டேன்.

ஆனந்த விகடன், கலைமகள், திரிசக்தி, ஓம்சகதி, லேடீஸ் ஸ்பெஷல் ஆகிய மலர்களை வாங்கிவிட்டேன். அமுதசுரபி வாங்க வேண்டும். ஆன்மிக பத்திரிகைகள் வெளியிட்டுள்ள மலர்கள் நிறைய இருக்கின்றன. வாங்கத் தோன்றவில்லை.

எல்லா மலர்களையும் ஒரு புரட்டுப் புரட்டி, மேலோட்டமாகப் படித்துவிட்டேன். இந்த நேசமுடன் இதழிலேயே ஒவ்வொரு மலரைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். படித்து முடிக்க முடியவில்லை. அடுத்த நேசமுடன் இதழை தீபாவளி மலர் ஸ்பெஷலாக வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.

என் அம்மாவழி பாட்டியின் கிராமத்து வீட்டில் இருந்து நான் எடுத்து வந்த முக்கிய பொக்கிஷங்களில் ஒன்று தீபாவளி மலர்கள். 50களின் கடைசியில் இருந்து 63, 64 வரை ஆனந்த விகடன், கலைமகள் மலர்கள் என்னிடம் இருக்கின்றன.

அதேபோல், ஆனந்த விகடன் வெளியிட்ட பெரிய தமிழ் தமிழ் அகராதியையும் கிராமத்தில் இருந்துதான் எடுத்துவந்தேன். புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பத்து வயது காலகட்டத்திலேயே, இதனால் என்ன பயன் என்று தெரியாமல், எல்லா புத்தகங்களையும் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

பதின்ம பருவம் முடிந்து கல்லூரியில் கால்வைத்த காலத்தில், கணையாழியில் எனக்கு பார்ட் டைம் வேலை. ரூ.300 மாதச் சம்பளம். பெரும்பகுதி இதுபோன்ற பழைய நூல்கள், தீபாவளி மலர்கள் வாங்கிச் சேர்க்கத்தான் அதைப் பயன்படுத்திக்கொண்டேன். நாவலர் நெடுஞ்செழியனின் மன்றம், முரசொலியின் மலர்கள், சமுதார பிரசுராலயம், ஜோதி நிலையம், வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்கள் ஆகியவற்றை அப்போதுதான் வாங்கிச் சேர்த்தேன்.

வாசகர் வட்டத்தை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியையும் அவர் கணவர் கிருஷ்ணமூர்த்தியையும் இப்படித்தான் சந்தித்தேன். தி.நகர் தணிகாசலம் தெருவில் இருந்த ஒரு அழகான வீடு அவர்களுடையது. கிருஷ்ணமூர்த்திக்கு அப்போது மிகவும் வயதாகியிருந்தது. ஈசி சேரில் சார்ந்திருந்தார்.

நான் வாசகர் வட்டப் புத்தகங்களை வாங்க வந்திருக்கிறேன் என்றபோது கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியிட்ட பல நூல்கள் பைண்ட் கூடச் செய்யப்படாமல், அச்சகத்திலேயே உதிரி ஃபாரம்களாக இருந்ததைச் சொன்னார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்புறம் வெளியே வந்தார். என்ன பேசினோம் என்று நினைவு இல்லை. ஆனால், கொடிகள் தொங்கும் ஒரு வராண்டா ஞாபகம் இருக்கிறது. அதில், கட்டைச் சுவரில் பல உன்னதமான நவீன இலக்கிய நூல்களை வெளியிட்டு, அற்புதமான சேவை செய்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி உட்கார, அவர் ஈஸிசேரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தது சித்திரம் போல் ஞாபகம் இருக்கிறது.

எத்தனை நூல்கள்? அறுசுவை என்றொரு தொகுதி இருக்கிறது. ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. அதில் வை. ரங்கநாதன் என்பவர் எழுதிய வீதி என்றொரு குறுநாவல் உண்டு. ஒரு அரசியல் நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அந்தக் குறுநாவல்.

நரசய்யாவின் கடலோடி, தி.ஜா.வின் நடந்தாய் வாழி காவேரி, சா.கந்தசாமியின் சாயாவனம், தி.ஜா.வின் அம்மா வந்தாள் எல்லாம் வாசகர் வட்டம் வெளியிட்டது. இன்றும் தமிழ் இலக்கியத்தின் பெயர் சொல்லும் நூல்கள் இவை.

புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, இன்னும் இரண்டு பைத்தியங்கள் சேர்த்துப் பிடித்துக்கொண்டன. முதல் பதிப்பைத் தேடிச் சேர்ப்பது அதில் ஒன்று. சமீபத்தில் புத்தக அடுக்குகளை ஒழித்துக்கொண்டு இருந்தபோது, வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மூன்று பதிப்புகள் இருக்கின்றன. அதேபோல் ஜெயகாந்தனின் பல நூல்களின் முதல் பதிப்புகளை வைத்திருக்கிறேன். ஒரு புளியமரத்தின் கதை, காலமும் ஐந்து குழந்தைகளும் உண்மை வேட்கை பாம்பும் பிடாரனும் ஆகியவற்றின் முதல் பதிப்புகளும் இருக்கின்றன.

இன்னொரு பைத்தியம், தொடர்கதைகளின் பைண்ட் வால்யூம்களைச் சேகரிப்பது. தி.ஜா.வின் அன்பே ஆரமுதே, உயிர்த்தேன் எல்லாம் அப்படிச் சேகரித்தவை.

இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோர் எழுதிய நாவல்களின் பைண்ட் வால்யூம்கள் என்னிடம் இருந்திருக்கின்றன. வாசிப்புப் பழக்கம், சுவை மாறும்போது, மெல்ல மெல்ல இவற்றையெல்லாம் என் புத்தக அடுக்களில் இருந்து நீக்கியிருக்கிறேன்.

இதுபோல், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது என் புத்தக அடுக்குகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். நிறைய நூல்களை ஒவ்வொரு முறையும் இதுபோல் நீக்கியிருக்கிறேன். எப்போது எடுத்துப் படித்தாலும் எதையேனும் புதிதாகத் தரக்கூடிய நூல்கள் என் அலமாரியின் முன் அடுக்குகளில் இருக்கும். அசோகமித்திரன், தி.ஜா, இ.பா. ஆகியோரின் எல்லா நூல்களும் இந்த வரிசையில் வருபவை. சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள், சுஜாதாவின் நிலா நிழல், வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள், ரெயினீஸ் ஐயர் தெரு, செல்மா லாகர்லேவின் தேவமலர், கெளதம சித்தார்த்தனின் வேனிற்கால வீடு: சில குறிப்புகள் ஆகியவையும் இங்கே உண்டு.

ஆங்கிலத்தில் எப்போதும் மார்குவேஸ் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சென்ற வாரம் கோவை, பொள்ளாச்சி பயணத்தின் போது கூட, ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிடியூட்தான் என் பக்கத் துணை. மனுஷன் மகா மகா மேதை. தொட்ட இடமெல்லாம் கதையாகப் பொங்கிப் பிரவகிக்கிறது. எங்கே புத்தகம் முடிந்துவிடப் போகிறதோ என்ற பதற்றத்துடன் தான் இந்த நாவலைப் படிக்க வேண்டியிருக்கிறது. இவருடைய நூல்களை மூலமொழியில் படிக்கவேண்டும் என்ற ஆவல்தான் என்னை ஸ்பானிஷ் மொழி படிக்கத் தூண்டிக்கொண்டு இருக்கிறது.

இலக்கியத்தைப் பொறுத்தவரை, காலம் ஆக ஆகத்தான் சுவை கூடிக்கொண்டு இருக்கிறது. பழைய புத்தகங்கள் ஆனாலும் சரி, தீபாவளி மலர்களானாலும் சரி, பழைய நூல்களில் உள்ள ரசனை, அக்கறை, தேர்வுகள் ஆகியவை எப்போதும் கொஞ்சம் உயர்வாகத்தான் இருக்கின்றன.

அந்தக் காலத்து கலைமகள் தீபாவளி மலர்கள் மிகவும் நவீனமாக இருந்திருக்கின்றன. வித்தியாசமான, புதுமையான எழுத்துகளை கி.வா.ஜ. அப்போதே பிரசுரித்திருக்கிறார்.

ஒரு பக்கம் தீபாவளி மலர்கள், இலக்கிய கருவூலங்களாக, ஓவியப் பெட்டகங்களாக இருந்திருக்கின்றன. ரெகுலர் இதழ்களில் என்ன செய்கிறார்களோ இல்லையோ, தீபாவளி மலர்களில் தங்கள் ரசனையை, சுவையை பத்திரிகைகள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. பல தீபாவளி மலர்கள், வார இதழ்களைவிடத் தரத்தில் உயர்வாக இருக்கக் காரணம் இதுதானோ என்னவோ?

Leave a Reply