வளர்ச்சியின் வலி
ஞாயிறு மதியம், எங்கள் வீட்டுக்குப் பழைய பேப்பர் வாங்குபவர் வந்தார். பல ஆண்டுகளாக இதுதான் அவர் தொழில். நேர்மையானவர். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் வீட்டுக்கே வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எடை போட்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்வார். படிப்பதில் ஆர்வமுடையவர். பணம், பொன், மண் ஆகிய துறைகளில் முதலீடு செய்யவேண்டும் என்று ஆர்வமுடையவர். பங்குச் சந்தையில் நிறைய ஆர்வம். அன்றும் பங்குச் சந்தையில் இருக்கும் டிரைவேட்டிவ் மார்க்கெட் பற்றித்தான் கேட்டார். ஃபூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் பற்றி எனக்குத் தெரிந்ததை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பேச்சு அப்படியே ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், லாங்க டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், வருவான வரி என்று வளர்ந்துகொண்டே போனது.
‘நான் வரி கட்டறா மாதிரி சம்பாதிக்கலை. எனுக்குப் பிரச்னை இல்லை. ஆனா அனாவசியமா எதுக்குப் போய் வரி கட்டணும்?’
‘வரி கட்டறதுல என்னப்பா பிரச்னை?’
‘ஒரு நாளைக்கு பதினஞ்சு பதினாறு மணிநேரம் வேலை செஞ்சி சம்பாதிச்சுட்டு, இவனுக்கு எதுக்கு சார் போய் வரியை அழுவணும்.’
‘அப்ப ஏன் இந்தியாவுல இருக்கீங்க? எங்கயாவது வெளிநாடு போக வேண்டியதுதானே?’ இது நான்.
‘நான் ஏன் வெளிநாடு போவணும்?’
‘சரி, நீங்க வீட்டுல கேஸ் வெச்சிருக்கீங்களா?’
‘இருக்கு. எங்கம்மா பேர்ல.’
‘பஸ்சுல போவீங்களா?’
‘எங்க போனாலும் பஸ்ஸுதான்.’
‘ஆவின் பால் வாங்கறீங்களா?’
‘வாங்கறேனே?’
‘இங்க எல்லாம் நீங்க முழுசா பணம் கொடுக்கறீங்களா?’
‘அப்படின்னா?’
‘கேஸுக்கு நீங்க குடுக்கறது ரூ.320. அதனுடைய உண்மையான விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 49 ரூபாய். அதன் உண்மையான விலை கிட்டத்தட்ட 60 ரூபாய். நீங்கள் குடுக்கற பணத்துக்கு மேல ஆகும் செலவை யார் ஏத்துக்கறாங்க? யார் மானியமா தராங்க? கவர்மெண்ட்டுதானே. உங்களுக்கு எதுக்கு கவர்மெண்ட்டு இதெல்லாம் செய்யணும்..?’
‘என்ன சார்.. அவனவன் கோடி கோடியா ஏமாத்திகினு இருக்கான். அரசியல்வாதிங்க எத்தன வீடு வெச்சிருக்காங்க. அவங்க வரி கட்டறாங்களா என்ன?’
‘இங்கதான் தப்பு பண்றீங்க சார். அவன் கொடுக்கலை, இவன் கட்டலை, நான் ஏன் கட்டணும்னும் கேக்கறது தப்பு. நீங்கள் இந்தியாவுல தானே இருக்கீங்க. நீங்கள் இந்தியாவுக்கு என்ன செஞ்சீங்க? இந்தியாவோட எல்லா வளத்தையும் வசதிகளையும் பயன்படுத்திப்பீங்க. அதை வெச்சுதான் உங்கள் வாழ்க்கையே இருக்கு. ஆனால், அதுக்கு ஒண்ணும் திருப்பித் தரமாட்டேன்னு சொல்றது நியாயமா?’
‘மத்தவனெல்லாம் செய்யலையே சார். நான் ஏன் செய்யணும்?’
‘மத்தவன் செய்யலைங்கறதால நாம செய்யாமல் இருப்பதுல அர்த்தமில்லை. நம்ம கடமை, நாம இந்தியாவுக்கு மனத்திருப்தியோட, மகிழ்ச்சியோட வரியைக் கட்டணும். மத்தவன் கட்டலைங்கறது அவனோட பிரச்னை. நீங்க ஏன் அவனைப் பார்த்து சூடு போட்டுக்கணும்னு நினைக்கிறீங்க?’
‘இந்த வரிப்பணத்தைத் தானே சார் வாரி உடறாங்க. கலர் டிவி என்ன? சுனாமி நிவாரணம்ங்கற பேர்ல சும்மா இருக்கறவனுக்கு எல்லாம் மாசாமாசம் உதவித் தொகை என்னா? வயிறு எரியலையா சார்?’
‘நீங்க தப்பா இடத்துல தப்பான கேள்வியைக் கேக்கறீங்க. அரசுக்கு வரி கட்டறதுங்கறது உங்க கடமை. அது தனி. ஆனால், அந்த வரிப்பணத்தை சரியா பயன்படுத்தலை, ஏமாத்தறாங்க, ஊழல் செய்யறாங்கனு நினைச்சீங்கன்னா, அதைக் கேக்க வேண்டிய இடம் வேற. அதுதான் தேர்தல். இந்தத் தேர்தல்ல எப்படி ஓட்டு போட்டீங்க? பணம் கொடுத்தாங்களா?’
‘எங்க பக்கத்து ஊட்டுல எல்லாம் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்கு வரலை. கொடுத்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். என் மனச்சாட்சிப் படிதான் சார் ஓட்டு போடுவேன்.’
‘அதுதான் வேணும். அதுதான் முக்கியம். தனி மனித ஒழுக்கங்கறது அதுதான். அடுத்தவனை எப்போதும் மாத்தவே முடியாது. நம்மால மாற முடியும். நாமதான் நம்மை மாத்திக்கணும்.’
‘ஆனா சார், வரி கட்டறதால நமக்கு நேரடியா என்ன சார் பிரயோஜனம். கஷ்டப்படும் போது கவர்மெண்ட்டா வந்து காப்பாத்தபோவுது?’
‘இது சரியான கேள்வி. எப்படி கேக்கணும்னா.. நான் சம்பாதிச்சபோது, உனக்கு சந்தோஷத்தோட வரி கட்டினேன். நான் இப்போ வேலை இல்லாமல், உடம்பு சரியில்லாமல் படுத்து கெடக்கறேன். நீ என்ன காப்பாத்த வேண்டாமான்னு கேக்கணும். இதுதான் சோஷியல் செக்யூரிட்டி நெட்டின் ஆரம்பம்.’
‘அப்படின்னா?’
‘அமெரிக்காவுல வேலை போயிடுச்சுன்னா, வேலை போனவன் முதல்ல போய் கவர்மெண்ட்டுக்கிட்ட உதவிப் பணத்துக்கு அப்ளை பண்ணுவான். நான் சம்பாதிச்சபோது, உனக்குத்தானேப்பா எல்லாம் கொடுத்தேன், இப்போ என்னைக் காப்பாத்த வேண்டியது உன் கடமைன்னும் சொல்றது இது. கவர்மெண்ட்டும் கொடுக்கும். பல வளர்ந்த நாடுகள்ல இந்த சோஷியல் செக்யூரிட்டி உண்டு. நாம வளரும் நாடு. இன்னும் இங்கே வரலை.’
‘இங்கதான் ஊழல் செய்யறதுக்கும் புடுங்கித் திங்கறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கு, எவன் சார், நீங்க சொல்ற செக்யூரிட்டி எல்லாம் கொடுப்பான்?’
தெரியவில்லை. நாம் அப்படியே இருந்துவிட முடியாது. சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு துறைக்குள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன. சிந்தனை ரீதியான மாற்றங்கள், உலக நாடுகளோடு ஒன்றிணைந்து வாழும்போது பெறும் பாடங்கள், படிப்பினைகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்கள் என்று பல முன்னேற்றங்களைப் பெற்று வந்திருக்கிறோம். ஆனால், மக்களின் அடிமனத்தில், இந்தியாவைப் பற்றிய, அதன் நிர்வாகிகளைப் பற்றிய, நிர்வாகம் பற்றிய ஐயங்கள் மிகுதியாக இருக்கின்றன.
நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனிமனித லாபங்களுக்காக அரசியலாளர்கள் செய்யும் இழிசெயல்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள், அங்கலாய்க்கிறார்கள். இதெல்லாம் இந்தியாவையே ஒரு இழிவுநிறைந்த நாடாகத் தொடர்ந்து சித்திரித்தும் வருகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. அதேசமயம் இதுவே முழுமையான உண்மையும் இல்லை. ஒவ்வொரு வளரும் நாடும் சந்திக்கும் மிகப் பெரிய இடர்கள் இவை. ஊழல், தனிமனித பொருள் குவிப்பு, அதற்கு சமூகத்தைக் கெடுக்கும் மனப்போக்கு என்பவை எந்த வளரும் நாட்டிலும் காணக்கிடைக்கும் காட்சிகள்தான்.
இதுபோன்ற நாடுகளில், வளர்ச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடுவதில்லை. அல்லது வளர்ச்சி வருவதை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியுமோ அதைச் செய்யவும் செய்வார்கள். ஆனாலும் வளர்ச்சி வந்துவிடும்.
தவிர்க்க இயலாமல் அமெரிக்காவைத்தான் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுடைய இன்றைய வளர்ச்சிக்குப் பின்னே நானூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. அங்கேயும் இதுபோன்ற வளர்ச்சித் தடைகள் இருந்திருக்கிறது. எதிர்கருத்துகள் என்ற பெயரில் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் இருந்திருக்கின்றன, ஊழல், சொத்துக்குவிப்பு, அடுத்தவர் மேல் தீராத கட்டுப்பாடு, அடிமைமுறை என்று எல்லா துன்பங்களும் அங்கே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகத்தான் நடந்திருக்கிறது. பெரும் பாய்ச்சல்கள் தோன்றியதில்லை.
இந்தியாவிலும் இப்போது அதேபோன்ற நோய்கள்தான் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. சாதாரணர்கள் ஒரு பக்கம் அன்றாட வாழ்வுக்குத் துன்பப்பட, இன்னொரு பக்கம், தம் பேராசைக்கு முக்கியத் திட்டங்களை வளைத்துப் பெரும் பொருளைத் திரட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
வளர்ச்சி வலி நிரம்பியது. குழந்தைகள் வளரும்போது, பின் இரவுகளில் கால்கள் வலிக்கும். உளைச்சல் எடுக்கும். ஓடியாடி விளையாடுகிறான், அதனால் வலிக்கிறது என்று நாம் நினைப்போம். உண்மையில், அது வளர்ச்சியின் வலி (Growing Pains). அந்த வலி, உள்ளுக்குள்ளே எலும்புகள் வளருவதை, கெட்டியாவதைக் குறிக்கும் வலி என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்தியா இப்போது இப்படிப்பட்ட வலியைத்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த வலிகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. யாரும் சுலபமாக, இலக்கை அடைந்துவிட முடியாது. அதற்கான முனைப்பும் ஈடுபாடும் வேண்டும்.
இன்னும் ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் கழித்து, இன்று நாம் குறை பேசும் பல விஷயங்கள், சரித்திரமாகி இருக்கும். இன்றைக்கு எப்படி நமக்கு காந்தியின் சுதந்திரப் போராட்ட வலி தெரியவில்லையோ, அப்படி, நமது சந்ததியினருக்கு இன்று நாம் அடைந்த வலிகள், வளர்ச்சிக்குக் கொடுத்த விலை, எதுவுமே தெரியாது. எல்லாமே தன்னால் இயற்கையாக வந்துவிட்டதாக அவர்கள் நம்பவே ப்ரியப்படுவார்கள். தம் முன்னோர்கள் பற்றிய அவர்களுடைய கற்பனைகள், மிகவும் கவர்ச்சிகரமாகவே இருக்கும். உயர்வாக இருக்கும்.
அந்த முன்னேற்றமும் கவர்ச்சியும் உயர்வும் சாத்தியப்பட வேண்டும் என்றால், இன்றைக்கு நம்மால் ஆனது, வளர்ச்சியின் வலிகளைப் பொறுத்துக்கொள்வதுதான். தனிமனித ஒழுக்கத்தைப் பேணுவதுதான். முடிந்த இடங்களில் எல்லாம் முன்னேற்றங்களை இருகை நீட்டி அணைத்துக்கொள்வதுதான். நாம் போகும் பாதை கரடுமுரடாகத்தான் தெரிகிறது. ஆனால், தூரத்தில் வெளிச்சப் புள்ளி நமக்காகக் காத்திருக்கவே செய்கிறது.