மாற்றத்துக்கான மொழி

இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வாகியிருக்கின்றனர்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பற்றி, கூகுளில் தேடினீர்கள் என்றால் எண்ணற்ற புதிய, சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும். படித்துக்கொள்ளுங்கள். நான் பேச வந்தது வேறு.

மக்களவை தேர்தலுக்கு முன்பு அஇஅதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் இளைஞர்களைக் கட்சிக்குள் சேர்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களைச் சேர்க்கும் காட்சி ஜெயா தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தார்கள். இப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையின் கூட்டங்கள் நடந்துவருகின்றன.

யார் போய் சேர்ந்தார்கள்? எப்படிச் சேர்ந்தார்கள் என்றெல்லாம் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால், உங்களுக்குப் பல விஷயங்கள் புரியும். மிடில்கிளாஸ் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ஏழை எளிய இளைஞர்கள். இவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு சேர்ந்தார்களா? நிச்சயம் இல்லை. சேர்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆள்பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். லோக்கல் கட்சிக்காரர்களின் வாரிசுகளும் இதில் அடக்கம்.

அடுத்த கேள்வி: இவர்களுக்கு எல்லாம் அரசியல் உணர்வு, கொள்கைத் தெளிவு, ஈடுபாடு எல்லாம் உண்டா? யார் சொன்னது? கட்சியின் அடையாள அட்டை அரசு அலுவலகங்களுக்குள் போய்வருவதற்கும், ஏதேனும் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும், நாளை தாம் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் பயன்படும் என்ற தெளிவு இவர்களுக்கு உண்டு.

ஒருவகையில் கட்சிக்கு ஆள்பிடிப்பது என்பது மிகப் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது.

அப்படியானால், இன்றைக்கு இளைஞர்களுக்கு அரசியலே பிடிக்கவில்லை. அவர்கள் அ-பொலிட்டிக்கலாக இருக்கிறார்கள், அரசியலில் இருந்து தள்ளியே இருக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைய இளைஞர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நமது அரசியல் கட்சிகள்தான் இன்னும் மெளடீகமாக இருக்கின்றன. இதுதான் பிரச்னை. இதைக் கொஞ்சம் விளக்கினால், இன்னும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு அரசியல் கட்சியின் முக்கியத்துவம் அது முன்வைக்கும் கோஷம், எடுத்துப் பேசும் செய்திகள், வகுத்துக் கொடுக்கும் கொள்கைகள் மற்றும் அதன் உள்ளர்த்தத்தில்தான் அடங்கியிருக்கிறது. இந்தக் கோஷமும் செய்தியும் கொள்கைகளும் அந்தந்தக் காலகட்டத்துகான பொருத்தப்பாட்டோடு இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் ஈர்க்கப்பட்டவர்கள், அந்தக் கோஷத்தோடு, கொள்கையோடு அதைப் பேசும் கட்சியோடு அணிதிரள்வார்கள்.

நாம் வேறு எங்கேயும் போகவேண்டாம். நான் மகாத்மா காந்தியை கொஞ்சம் சிரத்தையோடு படித்தவன். அவர் பிறவித் தலைவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவருக்கு யாரேனும் அரசியல் சொல்லிக்கொடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் மக்களைத் திரட்டிய விதத்தை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோஷம். ஒத்துழையாமை இயக்கம், வெளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்று வரிசையாக கோஷங்கள், இயக்கங்கள். ஒவ்வொரு இயக்கமும் மக்களின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் இயக்கங்கள். எதை மக்கள் எதிர்பார்த்தார்களோ, பேச வேண்டும், போராட வேண்டும் என்று நினைத்தார்களோ, அதைத்தான் காந்தி இயக்கங்களாகக் கட்டி எழுப்பினார். மக்கள் கோடிக்கணக்கில் அவர் பின்னால் அணிதிரண்டார்கள்.

நம்ம தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். 1967ல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட என்ன காரணம்? இந்தி எதிர்ப்பு. அது ஒரு கோஷம். அதை வெகுமக்கள் இயக்கமாகக் கட்டி எழுப்பியது தி.மு.க. அன்று இளைஞர்கள் லட்சக் கணக்கில் வந்து தி.மு.க பின்னே நின்றார்களே. அவர்களெல்லாம் நிச்சயம் ஆள்பிடித்து, லாரிகளில் ஏற்றிவந்த கூட்டம் அல்ல.

இதெல்லாம் அந்தக் காலம், இன்றைக்கு அப்படிப் பேச எதுவுமே இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் ஒபாமா பேசியது என்ன? அவர் முன்வைத்த கோஷங்கள் என்ன? மக்கள் அவர் பின்னால் அணிதிரளாமலா போய்விட்டார்கள்? அவர் அப்படி என்னதான் பேசினார்: அ) சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவேண்டும், தடுக்க வேண்டும். வண்டிகளிலிருந்து பிற தொழில்களில் இருந்தும் வெளியேறும் புகை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆ) பங்குச் சந்தையில் பணம் சம்பாதித்தவர்கள் மீது, அவர்கள் சம்பாதித்த தொகை மீது போடப்படும் வரியை உயர்த்த வேண்டும். பணக்காரர்கள் (ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பவர்கள்) இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும். இ) போரில் ஈடுபடும் நாடுகளோடு முன்நிபந்தனை இல்லாமல் சமாதானம் பேச வேண்டும். ஈ) நாடு முழுவதும் எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உ) ஆயுத கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க, ஆயுதங்கள் மீதான சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.

இப்போது அமெரிக்காவை யோசித்துப் பாருங்கள். அதன் மேல் நடந்த பயங்கரத் தாக்குதலை யோசித்துப் பாருங்கள். இன்ன பிற பிரச்னைகளையும் யோசித்துப் பாருங்கள். மேலே ஒபாமா முன்வைத்த கோஷங்களை அதனோடு இணைத்துப் பாருங்கள். ஒபாமாவுக்கு ஏன் ஓட்டு விழுந்தது உங்களுக்கே புரியும்.

விஷயம் இதுதான்: ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு கட்சியும் மாற்றத்துக்கான மொழியைப் பேச வேண்டும். அது அந்தக் காலகட்டத்தின் மொழியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கவேண்டும்.

ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் இன்னும் பழைய மொழியையே பேசிக்கொண்டு இருக்கின்றன. தனிமனித துதி, தனிமனித சாகசம், நூற்றாண்டு பாரம்பரியம் என்ற பழம் பெருமை, அதிகபட்சம் ஒன்றிரண்டு சாதனைகள் என்று மட்டுமே இவை பேசுகின்றன. மிச்சுவல் பண்டு விளம்பரங்களில், கீழே சின்ன எழுத்தில் ஒரு டிஸ்கிளைமர் வரி போட்டிருப்பார்கள்: Past performance may or may not be sustained in future. அதுதான் இங்கேயும் உண்மை. நேற்று நீ என்ன செய்தாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

முதலில் நீ நாளைக்கான மொழியைப் பேசு. ஒபாமா பேசினார். இன்றைக்கு அவருடைய மொழிதான் அவருக்கு முகம் கொடுத்திருக்கிறது. அவருடைய கரிசனம்தான், மக்கள் மத்தியில் தலைவராக ஆக்கியிருக்கிறது. அவரால், சாதாரண அமெரிக்கனின் வலியோடு தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது. அவர் பின்னே மக்கள் அணிதிரண்டதில் ஆச்சரியமே இல்லை.

ராகுல் காந்தி செய்யவேண்டியது இதுதான்: இன்றைக்கு இந்தியா சந்திக்கும் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, சாதாரண மனிதனின் வலியோடு கனவுகளோடு எதிர்பார்ப்புகளோடு கோபங்களோடு எரிச்சல்களோடு தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். அதில் இருந்து விடுதலைக்கான கோஷங்களை உருவாக்க வேண்டும். கோஷங்களை செயல்படுத்திக் காட்டத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் அணியை, தனிநபர்களை கண்முன்னே காட்டவேண்டும். அது போதும். அப்புறம் மக்கள்வெள்ளம் தன்னால் அணிதிரளும்.

  1. கோஷம் போடுவது பிரச்சனையில்லை. ஆனால் போடுபவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். ஒபாமா மீது மக்களுக்கு அந்த நம்பிக்கை வந்தது. அவர் வென்றார். இப்போது அப்படி மக்களின் நம்பிக்கைக்குந்த தலைவர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? டி.வி.தருகிறேன், கம்ப்யூட்டர் தருகிறேன், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றெல்லாம் அறிவுப்புகள் செய்து, நாய்க்கு ரொட்டித் துண்டு போல் அதில் கொஞ்சம் தந்து ருசியும் காட்டி மக்களை விலை பேசும் அரசியல் தானே நடக்கிறது?

    ராஜீவுக்கு இருந்த ’அப்பாவி முக’ இமேஜ் ராகுல் காந்திக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர் சேவை நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தால் இந்தியா மீண்டும் ஒளிரலாம். அது நடக்குமா என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது.

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply